இசை கேட்டால் நோய் நீங்கும் என்று சொல்கிறார்களே அதை நீங்கள் நம்புகிறீர்களா?
இப்படிக்கு,
பாத்திமாபேகம்,
அமெரிக்கா.
சீழ்தலை சாத்தனார் என்று ஒரு தமிழ் புலவரை பற்றி மூன்றாம் வகுப்பிலோ ஐந்தாம் வகுப்பிலோ கண்டிப்பாக படித்திருப்பீர்கள் அந்த மனிதனிடம் ஒரு கெட்ட பழக்கம் அபாயகரமான பழக்கம் என்று கூட சொல்லலாம்.
பாட்டு எழுதுவதற்கு எதாவது சிந்தனை வர மறுத்தாலோ அல்லது தவறுதலான சிந்தனை வந்தாலோ கையில் இருக்கும் இரும்பு எழுத்தாணியால் தலையில் ஓங்கி ( உங்கள் தலையில் அல்ல அவர் தலையில் ) குத்தி கொள்வாராம் இப்படி குத்தி குத்தியே அவர் தலை முழுவதும் புண் வந்து சீழ் வடிந்த வண்ணமே இருக்குமாம்.
பாட்டு எழுதுவதற்கு சிந்தனை வர மறுத்தல் என்று சொல்லும் போது எனக்கு கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவு தானாக வருகிறது. முப்பது வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன் திருநெல்வேலியில் ஒரு கவியரங்கம் சிலம்பு செல்வர் மா.பொ.சி கவியரங்க தலைவர் அதில் கலைஞர் கவிதை வாசிக்கிறார் அவருக்கு எப்போதுமே எழுத ஆரம்பித்தால் மடைத்திறந்த வெள்ளம் போல வார்த்தைகள் வந்து விழுமாம் அன்று மட்டும் ஏனோ வார்த்தைகள் வர மறுத்ததாம் அதை அவர் அழகான தமிழில்
ஏடெடுத்தேன் எழுதி வைத்தேன்
என்றே இதுவரை என் பழக்கம்
ஓடெடுத்த பரதேசி பல
வீடெடுத்தும் பயனின்றி நிற்பது போல் நிற்கின்றேன்.
என்று பாடினார் இந்த எழுத்தின் மீது அப்போது ஏற்பட்ட கவர்ச்சி இத்தனை வருடங்கள் ஆனாலும் கூட அவர் அன்று பாடிய அந்த முழு பாடலுமே இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. இனி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்
தலையில் புண்ணோடு இருக்கின்ற சீழ்த்தலை சாத்தனார் வள்ளுவர் தமது திருக்குறளை அரங்கேற்றுவதை அறிந்து அதை கேட்பதற்கு மதுரைக்கு வந்தாராம் வந்தவர் வள்ளுவர் தமது ஆயிரத்தி முன்னூற்றி முப்பத்து குறளையும் பாடி முடிக்கும் வரை ஆடாமல் அசையாமல் கல் சிலை போல இருந்து விட்டாராம் இதனால் அவர் தலை புண் முழுவதுமே ஆறிவிட்டதாம் இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் உருப்படியான எதையாவது கேட்டால் உடம்பில் நல்ல ரசாயனம் சுரக்கும் அதனால் நல்ல விளைவுகள் உடம்புக்கு ஏற்படும் இசையும் உருப்படியானது தானே!