குருஜி அவர்களுக்கு வணக்கம். சென்னையில் உள்ள பிரபலமான ஜோதிடர் ஒருவரிடம் என் ஜாதகத்தை கொடுத்தேன். அவர் எனக்கு புத்திர தோஷம் இருப்பதாக கூறுகிறார். ஆனால் எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். பிறகு எப்படி புத்திர தோஷம் எனக்கு ஏற்படும்? அப்படியே தோஷம் இருந்தாலும் அதை நீக்க நான் என்ன செய்ய வேண்டும்.
இப்படிக்கு,
அமாவாசை,
சென்னை.
புத்திர தோஷம் என்றவுடன் குழந்தைகள் இல்லாமல் இருப்பது என்று நாம் நினைத்து விடுகிறோம். இது மிகவும் தவறு. குழந்தைகள் இருந்தாலும், அந்த குழந்தைகளுக்கு ஒரு குறை ஏற்படுவதும், அதனால் நாம் வருந்துவதும் புத்திரதோஷம் என்ற வார்த்தைக்குள் அடங்கி விடுகிறது.
பிள்ளையை பெற்று வளர்த்து ஆளாக்கி பார்ப்பதில் முழுமையான சந்தோஷம் இருக்கிறது என்றால் அந்த குழந்தைகள் கஷ்டப்படுவதை பார்ப்பதில் முழுமையான துக்கம் அடங்கி கிடக்கிறது. இன்னும் ஒருபடி சொல்லப்போனால் மனிதனுக்கு வருகின்ற துன்பங்களிலேயே பெரிய துன்பம் குழந்தைகளுக்கு ஏற்படுகிற துன்பமே ஆகும்
உங்கள் ஜாதகப்படி அந்த ஜோதிடர் சொன்ன பலனில் தவறில்லை. சரியாகவே சொல்லியிருக்கிறார். உங்கள் இரண்டு குழந்தைக்கும் உயிர் கண்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதை நீக்குவதற்கு இறைவழிபாட்டால் மட்டுமே முடியும்
நீங்கள் வைஷ்ணவராக இருந்தால் சந்தான கோபாலன் ஆலயத்திற்கு சென்று வழிபடுங்கள் அல்லது குழந்தைகளுக்கு அபாயம் வருவதை தடுப்பதற்கு குருவாயூர் அப்பனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
சைவராக இருந்தால் திருவெண்காடு, திருகருக்காவூர் போன்ற ஆலயங்களுக்கு சென்று இறைவனை வழிபடுங்கள் வரக்கூடிய இரண்டு வருடகாலம் தவறாமல் பிரதோஷ வழிபாட்டை செய்யுங்கள் கடவுள் கைவிட மாட்டான்.