சுவாமிஜி அவர்களுக்கு பணிவான நமஸ்காரம். சின்ன வயதில் என் பாட்டி சொன்னதனால், இன்று வரையில் ராம நாமம் சொல்லி வருகிறேன். அப்படி சொல்வதனால் என்ன பலன் என்று எனக்கு தெரியாது. உங்களால் ஏதாவது அதற்கு விளக்கம் தர முடியுமா?
இப்படிக்கு,
கனகா,
மலேசியா.
பல பாட்டிமார்கள் இருக்கிறார்கள். பேரக்குழந்தைகள் வீட்டை விட்டு வெளிய போகக்கூடாது என்பதற்காக, தெருமூலையில் பூதம் இருக்கிறது, நடுரோட்டில் மூன்றாம் கண்ணன் வருவான் என்றெல்லாம் சொல்லி மிரட்டுவார்கள். சாப்பிட மறுத்தால் பூச்சாண்டி வந்து பிடித்து விட்டு போய்விடுவான் என்றும் சாமி கண்ணை குத்திவிடும் என்றும் மிரட்டி வைப்பார்கள்.
இதனால் குழந்தைகளுக்கு தேவையில்லாத கற்பனைகளும், பயமும் தோன்றி நரம்பு தளர்ச்சி வரையில் கொண்டு போய் விட்டு விடும். ஆனால் உங்கள் பாட்டி கிடைப்பதற்கே அரிதான ராம நாமத்தை உங்களுக்கு உபதேசம் செய்திருக்கிறார்கள். அவர்கள் உபதேசம் செய்தது ஒருவகையில் சிறப்பு என்றால், ஏன்? எதற்கு? என்ற காரணமே கேட்காமல் இதுவரை தவறாமல் ஜெபம் செய்து வருகிறீர்களே அது பல வகையிலும் சிறப்பானது, பாராட்டப்பட வேண்டியது.
ராம நாமத்தின் சிறப்பை சொல்லி கொண்டே போகலாம். அதற்கு ஏராளமான தத்துவ காரணங்கள், சாஸ்திர காரணங்கள் உண்டு. அவைகளை எல்லாம் அடுக்கி வைத்து சொல்ல ஆரம்பித்தால், நாளும் போதாது, நமக்கு ஆயுளும் போதாது. இருந்தாலும் ஒரு சிறிய புராண காரணத்தை சொல்கிறேன். அப்போது புரியும் உங்களுக்கு ராம நாமத்தின் சிறப்பு என்னவென்று !
சீதையை, ராவணன் தூக்கி வந்து அசோக வனத்தில் சிறை வைத்தான் அல்லவா? அப்போது ராமனிடம் தான் விரைவில் சேர வேண்டும் என்பதற்காக? அன்னை சீதா ராம நாமத்தை சொல்லி கொண்டே இருந்தாளாம். ராமனும், சீதாவை தான் விரைவில் காண வேண்டும் என்பதற்காக ராம நாம ஜெபம் செய்தானாம். இது மட்டுமல்ல ராமனையும், சீதாவையும் விரைவில் சேர்க்க வேண்டும் என்று ஆஞ்சநேய சுவாமியும் ராம நாம ஜெபம் செய்தாராம்.
ராமனுக்கே ராம நாமம் உதவியது என்றால், உங்களுக்கும் எனக்கும் உதவி செய்யாமலா போய்விடும். நாம் வாழ்க்கையில் பெற வேண்டியது என்ன? தவிர்க்க வேண்டியது என்ன? என்பவைகளை நாம் விரும்பாமலேயே ராம நாமம் நமக்கு தந்து நம்மை உயர்த்தும். எனவே தொடர்ந்து ராம மந்திரம் சொல்லுங்கள் வாழ்க்கையை வெல்லுங்கள்.