அதியமான் ஒளவையாருக்கு நெல்லிக்கனியை பரிசாக கொடுத்தானாமே இதில் பெருமைப்படத்தக்க அம்சம் என்ன இருக்கிறது?
இப்படிக்கு,
பரதன் ,
இலங்கை .
அதியமான் கொடுத்த நெல்லிக்கனி சாதாரணமானது அல்ல உயர்ந்த மலையில் உருண்டையாக இரண்டு ஒட்டிய பாறையில் அதன் இடுக்கில் பறவை ஒன்று எச்சத்தில் கொண்டுபோட்ட விதையில் யாரும் தண்ணீர் ஊற்றாது செயற்கை உரம் போடாது வளர்ந்த ஒரு செழுமையான நெல்லிமரம்.
அது வயதுக்கு வந்து அரும்பு வைத்து மொட்டாகி பூவாகி பிஞ்சு பிடிக்கின்ற நேரத்தில் உச்சி மரத்திலிருக்கும் ஒரே ஒரு பிஞ்சை மட்டும் விட்டுவிட்டு மற்ற பிஞ்சுகளை எல்லாம் கைப்படாமல் வில்வித்தையில் தேர்ந்த வீரன் ஒருவனால் கணைகள் தொடுத்து அறுத்தெறிந்து விட்டு குறிப்பிட்ட அந்த பிஞ்சை மட்டும் காயாக்கி கனியாக்கி அரசரிடம் கொண்டு வனவாசிகள் கொடுத்தார்கள்.
ஒரு நெல்லிக்கனிக்கு இத்தனை பாடுபட வேண்டுமா? என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. புதுமரத்தில் முதல்முறையாக பிடிக்கின்ற காய் மரத்தின் சத்துக்கள் அனைத்தையும் தான்மட்டுமே ஈர்த்து கனியாகும் போது அதற்கு விசேசமான சக்தியும் சத்தும் அமைகிறது. அந்த கனியை சாப்பிட்டவன் நோய் நொடி இல்லாமல் நூறு வயது வரை வாழ்வான் இது கற்பனை அல்ல உண்மை என்று தமிழ் சித்தர்கள் சொல்கிறார்கள்.
ஐந்து வருடம் மட்டுமே அதிகாரம் செலுத்த கூடிய நமது மந்திரிமார்கள் தங்களது உடம்பை ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க பாடாய் படுகிற போது அரசன் அதுவும் சர்வ அதிகாரமும் தனக்கே கொண்ட ஒரு மாபெரும் சர்வாதிகாரி தான்மட்டுமே அதிகநாள் வாழ வேண்டுமென்று நினைப்பான் அல்லவா? ஆனால் அப்படி இல்லாமல் தமிழ் வளர்க்கும் ஒளவை பாட்டி ஆரோக்கியத்தோடு ஆயுளோடு வாழ்ந்தால் தமிழ் மொழி இன்னும் சிறப்படையுமென்று அவளுக்கு கொடுத்து அவளை வாழவைக்க நினைத்தானே அதிகமான் அவனது எண்ணம் உயர்வானது செயல் உயர்வானது எனவே தான் அந்த காரியம் இதுவரை போற்றப்படுகிறது.
உண்மையாகவே நெல்லிக்காய் மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. தினசரி ஒரு நெல்லிக்காய் வீதம் உண்டு வந்தால் பெரிய நோய்கள் எதுவும் நம்மை தாக்காது ஆரோக்கியத்தோடு வாழலாம். அதிகாரத்தை விட ஆடம்பரத்தை விட அறிவை விட ஆரோக்கியமே சிறந்தது என்பதை காட்டுவதற்காக கூட ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்த கதை சிறப்பித்து கூறப்பட்டிருக்கலாம் எது எப்படியோ நடந்து நல்லது தானே...!