Store
  Store
  Store
  Store
  Store
  Store

உங்கள் குழந்தைக்கு படிக்க உதவுங்கள் !



    ன்புள்ள வாசகர்களுக்கு, வாழ்த்துக்களும்!!! வணக்கங்களும்!!!

நமது நாட்டில் தெரிந்தோ, தெரியாமலோ ஆங்கிலக்கல்வியின் மீது மோகம் பெருகி விட்டது. நுனியிலே கிள்ளிப்போடவேண்டிய விஷச்செடியை பெரிய மரமாக வளர விட்டது போல, நாம் அனைவருமே ஆங்கில மோகத்தை வளர விட்டு விட்டோம். அது இன்று நமது உடம்பில் உள்ள ஒரு உறுப்பாகவே ஆகி விட்டது. இனி அதை அகற்றுவது என்பது அரிதிலும் அரிது.

பணக்காரர்கள், வசதி படைத்தவர்கள், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தங்களது குழந்தைகளை பணம் கட்டி ஆங்கில கல்விக்கூடங்களில் சேர்த்து விடுகிறார்கள். சூறாவளிக்குள் அகப்பட்ட சருகு தப்பித்தவறி வெளியில் வந்து விழுவது போல பல குழந்தைகளும் தங்களுக்கு முற்றிலும் அந்நியமான ஆங்கிலவழிப்பாடத்தில் வெற்றியும் பெற்று கவர்ச்சிமிக்க பதுமைகளாக வெளிவந்து விடுகிறார்கள். இதை ஏழை பார்க்கிறான் பட்டாடை கட்டிய பிள்ளைகள் பவனி வரும் போது ஓட்டை குடிசையில் ஒட்டுத்துணியில் நான் பெற்ற பிள்ளை மூலையில் கிடக்க வேண்டியது தானா? எனக்கு பிறந்தது என்ற ஒரே ஒரு காரணத்திற்காக வாழ்க்கை முழுவதுமே கள்ளமில்லாத அந்த பிள்ளை நெஞ்சம் கவலைக்கடலில் ஆழ்ந்து கிடப்பதா? அதற்கு பெற்றவனான நான் சம்மதிப்பதா? என்ற எண்ணத்தில் கடன் வாங்கி ராப்பகலாக மூட்டை தூக்கி, பல நேரம் மனைவியின் கழுத்தில் இருக்கும் பொட்டுத்தங்கமான தாலியை விற்று கூட பிள்ளைகளை ஆங்கில பள்ளியில் சேர்த்து விடுகிறான்.



சேர்த்த பிள்ளைக்கு மாதாமாதம் பணம் கட்ட வேண்டாமா? மாணவர்களை உயிருள்ள பொம்மையாகவும், பெற்றோர்களை பணம் காய்க்கும் மரமாகவும் மட்டுமே பார்க்க தெரிந்த பள்ளியின் நிர்வாகம் அவ்வப்போது கேட்கும் நன்கொடைகளை கொடுக்க வேண்டாமா? அப்படி கொடுத்தால் தானே தொடர்ந்து குழந்தைகள் படிக்க முடியும்? இதை அந்த ஏழை பெற்றோர்கள் நினைத்து பார்த்தது கிடையாது. தங்களது இரத்தத்தில் இறுதி சொட்டு வரை சிந்தி பணத்தை சேர்த்து கல்விக்கட்டணமாக செலுத்தி விட்டு ஒன்றிரண்டு வருடத்தில் நடைப்பிணங்களாக மாறிப்போகிறார்கள் விளைவு என்னவாகிறது? ஆங்கில பாடசாலையில் பயின்ற குழந்தைகள் தமிழ்வழி கல்விக்கு இழுத்து வரப்படுகிறார்கள்.

இப்போது குழந்தையின் நிலைமை தர்மசங்கடமாகி விடுகிறது. ஆரம்பத்தில் பிள்ளையார் சுழி போட்டது ஆங்கில மொழியில், இப்போது தமிழில் படிக்க வேண்டிய நிர்பந்தம். இந்த இரண்டிற்கும் இடையில் அகப்பட்டு சிறிதாக முளைவிட்டிருந்த கல்வியின் மேலிருந்த ஆர்வம் கருகி ஒன்றுக்குமே ஆகாத சதைப் பிண்டங்களாக மாறி விடுகிறார்கள். மீண்டும் இவர்களது வாழ்க்கை துவங்கிய இடத்திற்கே வந்து விடுகிறது. படிக்கவும் முடியாமல், வீட்டில் இருக்கவும் முடியாமல், தனியாக தவித்து தடம்மாறி, இடம்மாறி சமுதாய குற்றங்களின் சந்தைக்கு வந்துவிடுகிறார்கள். இப்படிப்பட்ட அறியாமை அகதிகளை கைதூக்கி விடுவதற்கு யாருமே இல்லையா? யாருக்குமே மனதில்லையா? என்று நான் பலகாலம் யோசித்தது உண்டு. யோசிக்க யோசிக்க இயலாமையும், துக்கமும் மேலிட்டதே தவிர வழிவகைகள் எதுவும் கண்ணுக்கு அகப்படவில்லை.


இந்த நிலையில் தான் முற்றிலும் இலவசமாக பத்து பைசா கூட கட்டணமாக வசூலிக்காத பாடசாலை ஒன்றை நாமே துவங்கினால் என்ன? என்ற எண்ணம் கடந்து ஐந்து வருடமாக இதயத்தின் ஆழத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது. பள்ளிக்கூடம் ஆரம்பிப்பது சாதாரண காரியமா என்ன? வியாபார ரீதியில் துவங்குகிற பள்ளிகளை திறம்பட நடத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கும் போது, இலவசமான பள்ளியை நடத்துவது என்றால், அதில் எத்தனை சிக்கல்கள் வரும். எவ்வளவு சங்கடங்கள் வரும். அத்தனையையும் நம்மால் சமாளிக்க முடியுமா? சமாளித்து தொடர்ச்சியாக தங்கு தடை இல்லாமல் அந்த நிறுவனத்தை நடத்தி விட முடியுமா? என்ற யோசனைகளும் ரயில் பெட்டிகளை போல தொடர்ந்து வந்தது.

ஊரிலுள்ள அனைவரும் தங்களுக்கு குழப்பம் வந்தால் அதை தீர்ப்பதற்கு என்னிடம் வருகிறார்கள். எனக்கும் குழப்பம் என்றால் நான் யாரிடம் செல்வது என் ஜாதகத்தை எதாவது ஜோதிடரிடம் காண்பித்து பலன் கேட்க முடியுமா என்ன? நிச்சயம் முடியாது. அதே நேரம் நானும் மனிதன். மிகச்சாதாரண மனிதன் சிறிய கோழிக்குஞ்சு கூட கண்ணெதிரில் இறந்து போனால் அதை பலநாள் நினைத்து கொண்டிருக்கும் சாமான்ய மனிதன். என் குழப்பத்திற்கு விடையை எப்படி பெறுவது? தாகம் எடுத்தவன் தண்ணீரை தேடுவது போல நான் பகவான் கிருஷ்ணனின் பாத நிழலையும், அவனது கீதை மலரையுமே தேடுவேன். என் குழப்பத்திற்கு விடை தா கிருஷ்ணா என்று கீதை புத்தகத்தை நான் திறந்த போது, பகவான் அர்ஜுனனிடம் சொன்னான். முன்னேறு எதிரே இருப்பது என்னவென்று யோசிக்காதே உன் இலக்கு போர் செய்வதில் மட்டுமே இருக்கட்டும். அதன் விளைவுகளை என்னிடம் விட்டு விடு வெற்றி தோல்வி என்பதை உன்னை சார்ந்தது அல்ல என்னை சார்ந்தது என்று கூறினான்.



இது போர் செய்ய மறுத்த பார்த்தனுக்கு பரந்தாமன் சொன்ன வார்த்தையாக இருக்கலாம். ஆனால் கலக்கம், குழப்பம், மயக்கம் என்று வருகிற போது நாம் அனைவருமே பார்த்தனாக மாறிவிடுகிறோம். நமக்கு நிஜமான பார்த்தசாரதி பகவானே தவிர வேறு யார்? எனவே பொறுப்பை கண்ணனின் பாதங்களில் போட்டு விட்டு இலவச பாடசாலையை ஆரம்பிக்கும் வேலையில் கடந்த ஆறுமாதம் காலமாக ஈடுபட்டு வந்தேன். அரசாங்கத்தில் அனுமதி வாங்குவது அதற்கான சான்றிதழ்களை தயார் செய்வது என்று பல கட்டங்களை தாண்டி நமது ஸ்ரீ குரு மிஷன் சார்பில் எஸ்.ஜி.எம் பள்ளி என்ற பெயரில் ஆங்கில ஆரம்ப பாடசாலை ஒன்றை துவக்கி விட்டேன். இதை மிக எளிமையாக முதற்கடவுள் பிள்ளையாருக்கு ஒரே ஒரு தேங்காய் உடைத்து ஆரம்பித்தும் விட்டேன் கடந்த 9/6/2014  அன்று அறுபது குழந்தைகளோடு அற்புதமான முறையில் பள்ளி தனது பணியை துவக்கி விட்டது.

ஆரம்பிக்கும் முன்பு ஒரு வார்த்தை சொல்லாமல் ஆரம்பித்த பிறகு சொல்கிறானே என்று உங்களில் யாரும் வருத்தப்பட மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். சொல்லாமல் ஆரம்பித்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை. சொன்ன பிறகு ஒருவேளை அனுமதி பெறுவதில் தடை தாமதங்கள் வந்தால் அதை உங்களிடம் எந்த முகத்தோடு பகிர்ந்து கொள்வது என்ற தயக்கமே மூல காரணமாகும். எப்படியோ பல குழந்தைகளின் வாழ்க்கையில் அறிவு விளக்கை ஏற்றி வைக்கும் பணியை நாம் துவங்கி விட்டோம். இனி அது வற்றாத ஜீவநதியாக பெருக்கெடுத்து ஓடும் என்பதில் சந்தேகம் இல்லை.



நமது எண்ணம் சேவை செய்வது, அதற்காக இரவு-பகல் பாராமல் பாடுபடுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம். அதற்காக எல்லோருமே இலவசமாக பாடுபட வாருங்கள் என்று அழைக்க முடியுமா? ஆசிரியர்களாக, மற்ற பணியாளர்களாக இருப்பவர்களுக்கு முழுமையான அளவிற்கு இல்லை என்றாலும் ஓரளவாவது ஊதியம் கொடுக்க வேண்டாமா? அப்படி கொடுக்கும் பட்சத்தில் இந்த பள்ளியை நடத்த மாதம் மிக குறைந்தது இருபத்தி ஐயாயிரம் ரூபாய் செலவு ஆகிறது. அதை நான் ஒருவனாக தன்னந்தனிமையில் சமாளிப்பது கடினம் மட்டுமல்ல, முடியாத காரியமும் ஆகும். அதற்காக உங்கள் ஒவ்வொருவரையும் வேண்டி விரும்பி கேட்கிறேன். உங்களால் முடிந்த நன்கொடையை அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் கூட, அதை மனமுவந்து தாருங்கள். நீங்கள் தருகிற ஒவ்வொரு ரூபாயும் இந்த குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு வித்தாக அமையும்.

பெருந்தலைவர் காமராஜர் நாடு முழுவதும் சென்று, நான் பிச்சை எடுத்தாவது தருகிறேன். குழந்தைகள் படிப்பதற்கு வழி செய்யுங்கள் என்று வேண்டுதல் வைத்தாராம். அதே வேண்டுதலை எனது குறிக்கோளாகவும் நான் எடுத்து விட்டேன். திக்கற்ற இந்த குழந்தைகளுக்கு அறிவு தீபம் ஏற்றி வைக்க பிச்சை எடுக்கவும் நான் சித்தமாக இருக்கிறேன். வயிற்றை வளர்ப்பதற்கு யாசகம் பெறுவது தான் பாவம், கேவலம். நான் இங்கு ஊரார் குழந்தைகள், உத்தம அறிவாளிகளாக வளர்ந்து நாடு போற்றும் நல்லவர்களாக வளரவேண்டும் என்பதற்காக பிச்சை எடுத்தால் அதில் பாவம் இல்லை, கேவலமும் இல்லை.



எனவே உங்களிடம் கேட்கிறேன். உங்களது கருணை என்ற இதய வாசலை தட்டி ஓங்கிய குரலில் கேட்கிறேன். உங்களால முடிந்ததை இந்த குழந்தைகளுக்காக தாருங்கள். அவர்கள் நீங்கள் நட்டுவைத்த மரமாக வளர்ந்து பிறருக்கு நிழல் தர நீர் ஊற்றுங்கள். நீங்கள் கொடுக்கும் ஒரு ரூபாய் கூட இவர்களது வாழ்வின் அச்சாணியாக மாறும். இந்த குழந்தைகளில் ஒன்றை உங்கள் சொந்த குழந்தையாக மனதளவில் தத்தெடுத்து கொள்ளுங்கள். அவர்களுக்கு தினசரி இல்லை என்றாலும் மாதந்தோறும் முடியாவிட்டால், வருடம் தோறும் சிறிய தொகையாவது ஒதுக்குங்கள். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உங்கள் பிள்ளை தானே வளரும். கல்விக்காக நீங்கள் கொடுப்பதை இறைவன் பல மடங்காக திருப்பி உங்களுக்கு கண்டிப்பாக தருவான். உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவும், அரவணைப்பும் நிச்சயம் தேவை.

நீங்கள் ஓய்வாக இருக்கும் போது நமது பள்ளியை நேரில் வந்து பாருங்கள். இந்த குழந்தைகளின் முகங்களை தரிசனம் செய்யுங்கள். கண்ணுக்கே தெரியாமல் இருக்கும் கடவுள் இவர்கள் முகத்திற்குள் உட்கார்ந்திருப்பதை கண்டிப்பாக பார்ப்பீர்கள். இவர்களோடு வந்து ஒருநாள் வாழும் வாழ்க்கை உங்களுக்கு வசந்த காலமாக இருக்கும். அவர்களுக்காக நீங்கள் பாடம் கூட எடுக்கலாம், அவர்களிடம் நீங்கள் பாடமும் படிக்கலாம். எனவே உங்களை வரவேற்க எப்போதும் தயாராக இருக்கிறோம்.

இப்படிக்கு,
குருஜி.    


    நமது பள்ளிக்கு உதவி செய்ய நினைப்பவர்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கவும் 


வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவதற்கான வங்கி முகவரி.

NAME -GURUJI
A/C NO- 0106301000035874,
LAKSHMI VILASH BANK,
IFSC CODE  - LAVB0000106
ARAKANDANALLUR.  

வெஸ்டர்ன் யூனியன் வழியாக பணம் அனுப்புவதற்கான முகவரி 

Sri Ramananda
4/76 c Kamaraj Road,
Arakandanallur,
Tirukoilur (TK)
Villuppuram (DT)
Tamilnadu
India 

இந்தியாவிலிருந்து பணம் அனுப்புவதற்கான வங்கி முகவரி.

Nmae : SRI GURUMISSION TRUST
IFSC Code : LAVB0000106
Account no : 0106301000037820
Bank Name : Lakshmi Vilas Bank
ARAKANDANALLUR

மேலும் விபரங்களை அறிய  Click Here

Contact Form

Name

Email *

Message *