குருஜி அவர்களுக்கு வணக்கம். உங்கள் தென்னாட்டு ஜோதிடப்படி ராஜயோகம் என்ற ஒரு யோகத்தை சிறப்பாக கூறுகிறீர்கள். எங்கள் ராஜஸ்தான் மரபில் அப்படி எதுவும் இல்லை ராஜயோகம் என்பது அனைவருக்கும் அமையக்கூடியதா? அப்படி அமைந்தவர் எப்படி வாழ்வார்கள்? என்பதை தயவு செய்து விளக்கமாக கூறும்படி அன்போடு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
தர்மித்சந்த் ஜெயின்,
செளக்கார்பேட்
ராஜயோகம் என்பது ராஜ்யத்தின் தலைமையை ஏற்றல் என்ற பொருளிலும், மிகச்சிறந்த ஐஸ்வர்யத்தை பெறுதல் என்ற பொருளிலும் சொல்லப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் சிறப்பான ராஜயோகம் அமைந்திருக்கிறது என்று வைத்து கொள்வோம். அந்த ஜாதகன் எவ்வளவு கீழான நிலையில் இருந்தாலும் அவன் ஒருநாள் அரசாங்கத்தின் ஆதரவால் மேல்நிலைக்கு வருவான் என்பது ஆரியபட்டர் சித்தாந்தம், பிரகத் ஜாதகம், ஜாதக சந்திரிகை போன்ற நூல்களின் தெளிவான கருத்தாகும்.
அரசாங்க ஆதரவு என்பது அரசின் நிர்வாக பக்கங்களில் ஊழியராகவோ, அதிகாரியாகவோ பணிபுரிவதை மட்டுமல்ல. அரசியல் பதவிகளை அடைவதையும் குறிப்பிடும். அதே நேரத்தில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் இவர்களின் தயவால் பெரிய தொழிலில் ஈடுபட்டு மிகச்சிறந்த செல்வாக்கை பெறுவதையும் சொல்லலாம். இதன் சுருக்கம் என்னவென்றால் இவனது வாழ்க்கை உயர்வு, வாழ்வின் ஐஸ்வர்யம் அரசாங்க தயவால் கிடைக்கும் என்பதே ஆகும்.
பொதுவாக ஐஸ்வர்யம் என்பதை எட்டுவகையான சேர்க்கைகளின் தொகுப்பு எனலாம். அரசாங்க ஆதரவு, பொதுமக்கள் அல்லது சமுதாய ஒத்துழைப்பு, உறவினர்களின் பலம், பொன்பொருள் நாணயங்களின் சேர்க்கை, குடும்ப சொத்தின் மேம்பாடு, நெல் மற்றும் தானியசம்பத்து, வண்டி வாகன பிராப்தி, வேலையாட்களின் விசுவாசம் அல்லது ஆளடிமை யோகம் என்பதே அந்த எட்டுவகையாகும்.
ஜாதகப்படி ராஜயோகம் அடையப்பெற்றவன் இந்த எட்டுவிதமான ஐஸ்வர்யத்தை முழுமையாக இல்லை என்றாலும் ஓரளவு பெற்றே தீருவான் என்பது உறுதியான கணக்காகும். மேலும் ராஜயோகம் என்பதை பூர்வ ஜோதிட வல்லுனர்கள் இரண்டுவகையாக பிரிக்கிறார்கள். அதாவது ஐந்து, ஒன்பது ஆகிய திரிகோண ஸ்தானங்களில் சுப கிரகங்கள் அமைந்திருந்தால் அது லஷ்மி ராஜயோகம் என்றும்; இது அளப்பரிய செல்வத்தை மட்டுமே கொடுக்கும் அதிகாரத்தை கொடுக்காது என்றும், ஒன்று, நாலு, எழு, பத்து ஆகிய கேந்திர ஸ்தானங்களில் சுப கிரகங்கள் இருந்தால் அது விஷ்ணு ராஜயோகம் என்றும்; இது செல்வத்தையும் அதிகாரத்தையும் கொடுக்கும் என்றும் சொல்லப்படுகிறது. நடைமுறையில் இது உண்மையாகவும் இருக்கிறது.