குருஜி அவர்களுக்கு வணக்கம். என் அக்காவுக்கு நாற்பது வயது நடந்து கொண்டிருக்கிறது. அவளுக்கு ஒரே மகள் இருந்தாள். பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது அந்த பெண்ணிற்கு ஏற்பட்ட விஷக்காய்ச்சலினால் இறந்து போய்விட்டாள். அன்று முதல் என் அக்கா சித்தபிரம்மை பிடித்தவள் போல இருந்து வருகிறாள். யாரோடும் பேசுவது கிடையாது. வீட்டு வேலைகளை கவனிப்பது கிடையாது. குளிப்பது, ஆடை மாற்றுவது என்று எந்த நடைமுறையும் இல்லை. அக்காவின் கணவர் தான் அவளை தாயைப் போல் கவனித்து வருகிறார். அக்காவின் நிலையை பார்க்கும் போது மிகவும் துக்கமாக இருக்கிறது. அவள் இந்த நோயிலிருந்து விடுபடுவாளா? இல்லையா என்பதை தெளிவாக பார்த்து சொல்லும் படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்
இப்படிக்கு,
சேஷாத்திரி,
சென்னை.
ஒன்பது குழந்தைகள் பெற்றாலும் அதில் எந்த குழந்தையையுமே பறிகொடுப்பதற்கு தாயின் மனம் இடம் கொடுக்காது. இருப்பது ஒரே ஒரு குழந்தை எனும் போது அதையும் இரக்கமே இல்லாத காலதேவன் அழைத்து சென்ற போது ஒரு தாயால் எப்படி பரிதவித்து துடிக்காமல் இருக்க முடியும்? அதன் வேதனையை வார்த்தைகளால் சொல்லவோ, சொன்னால் புரிந்து கொள்ளவோ நம்மால் இயலாது. அனுபவித்தால் மட்டும் தான் அந்த வலி என்னவென்று தெரியும்.
இப்படி[பட்ட துயரங்கள் ஏற்படும் போது முழுக்க, முழுக்க கண்ணீர் தீருகிற வரை அழுது தீர்த்துவிட வேண்டும். அழாமல் உள்ளுக்குள்ளேயே அழுத்தினால் பலநேரம் சரீரம் கெடும். சிலநேரம் மனது கெடும். உலகிலேயே மிக கொடுமையான நோய் ஒன்று உண்டென்றால் அது சுய உணர்ச்சி இல்லாமல் போகும் நோய் தான். அதுவும் இந்த சித்தபிரம்மை இருக்கிறதே தனது சரீரத்தில் எங்கே வலிக்கிறது என்பதை கூட அவதானிக்க முடியாமல் நடைப்பிணமாக மனிதனை ஆக்கி விடும்.
சித்தபிரம்மைக்கு ஆங்கில மருத்துவர்கள் கொடுக்கிற மருந்துகள் சரியானது தான். ஆனால் அதனுடைய பின்விளைவுகள் நரம்புகளை தளரச்செய்து நடமாட முடியாத அளவிற்கு கூட தளர்ச்சியை வரவழைத்துவிடுகிறது. சித்த மருத்துவமோ நல்ல பலனை, பின்விளைவுகள் இல்லாத பலனை கொடுத்தாலும் கூட நிவாரணம் தெரிவதற்கு வெகுநாட்கள் ஆகிறது. இதில் ஒவ்வொரு வைத்தியரும் தனித்தனி மருந்துகளை பயன்படுத்துவது நம் தலையை சுற்றச்செய்து விடுகிறது.
உங்கள் தமக்கையாரின் ஜாதகப்படி இன்னும் ஒரு வருடத்தில் அவர் சகஜ நிலைக்கு வந்துவிடுவார் என்று சொல்லலாம். இருப்பினும் நீர் பிரம்பி இலை பசுவின் நெய், மஞ்சள்கொட்டை நீக்கிய நெல்லிமுள்ளி, சிவதை வேர்பட்டை, கடுக்காய் தோல், வாயு விடங்கம், வசம்பு, இந்துப்பு, வெள்ளை சர்க்கரை, இவைகளை பயன்படுத்தி பிரம்மகிருதம் என்ற மருந்தை உருவாக்கி நோயாளிக்கு தினசரி மூன்று வேளை கொடுத்து வந்தால் நோய் உடனடியாக குணமாகும் என்று புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவ பிதாமகர் சுஸ்ருதர் சொல்கிறார். நிச்சயமாக இது நல்ல பலனை தருமென்று அனுபவத்தின் மூலமாக சொல்லலாம்.