குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். உங்களுக்கே நன்றாகத்தெரியும் காலம் மிகவும் கெட்டுப்போய்விட்டது என்று! இந்த காலத்தில் யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்று தெரியவில்லை. உண்மையான நண்பர்களை தேர்வு செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது. உங்கள் அனுபவத்தில் இருந்து நல்ல பதிலாக தாருங்கள். சிறந்த நண்பனை எப்படி அடையாளம் காண்பது?
இப்படிக்கு,
ரவிச்சந்திரன்,
டெல்லி.
மகாபாரதத்தில் திருதராஷ்டிரன் புதல்வர்கள் கெளரவர்களுக்கும், பாண்டுவின் புதல்வர்கள் பாண்டவர்களுக்கும் ஒரு சித்தப்பா உண்டு. அவர் பெயர் விதுரர். இவர் அரண்மனையில் பிறந்தாலும், அரச போகத்தை விரும்பாதவர். அரச சுகத்தில் தன்னை மறந்து கரைந்து போகாமல் ஒரு ஞானியை போல வாழ்ந்தவர்.
பகவான் கிருஷ்ணன், அர்ஜுனன் இடத்தில் சொன்ன பகவத் கீதையை போல, விதுரன் தனது மூத்த தமையன் திருதராஷ்டிரனுக்கு பல உபதேசங்கள் செய்துள்ளார். இதன் பெயர் விதுர கீதை. இந்த கீதையும் மஹாபாரதத்தில் வருகிறது. தனது அண்ணன் பெற்ற குழந்தைகள் அனைவரையும் யுத்த களத்தில் பறிகொடுத்துவிட்டு, புத்திர சோகத்தால் வருந்திக்கொண்டு இருக்கும் போது விதுரன் கூறிய ஆறுதல் மொழிகளே விதுர கீதையாகும். இதில் உலக வாழ்க்கைக்கு தேவையான பல நீதிகள் சொல்லப்பட்டிருக்கிறது.
அவற்றில் மிகவும் முக்கியமானது நண்பர்களை தேர்ந்தெடுப்பது பற்றிய விஷயமாகும். ஒருவன் ஒருத்தியை காதலித்தான். உயிருக்கும் மேலாக அவளை நேசித்தான். ஆனால் அவளோ கடைசி நேரத்தில் காதலித்தவனை கைவிட்டுவிட்டு வேறொருவனை கரம் பிடித்தாளாம். காதலில் தோற்ற அந்த இளைஞன் கதறி அழும் போது அவன் நண்பன் ஒருவன் இந்த பெண் இப்படித்தான் செய்வாள் என்று முன்பே எனக்கு தெரியும். அதை அப்போது சொல்லியிருந்தால் உன் மனது சங்கடப்படுமென்று சும்மா இருந்தேன் என்றான்.
ஒருவேளை அன்றே இவன் எச்சரிக்கை செய்திருந்தால், இன்று இவன் இந்த அளவு ஏமாறமாட்டான். நாம் கஷ்டப்படுவோமே என்பதற்காக நல்ல விஷயங்களை மறைத்துப்பேசுபவன் நல்ல நண்பன் அல்ல. நீ வருந்தினாலும் பரவாயில்லை, உண்மையை நேர்மையாக எடுத்துச்சொல்வது என் கடமை. இதை இன்று இல்லை என்றாலும், என்றாவது ஒருநாள் புரிந்து கொள்வாய் என்று கூறுகிறான் பாருங்கள் அப்படிப்பட்டவன் தான் உண்மையான நண்பனாக இருக்க முடியும் என்பது விதுரரின் கருத்தாகும்.
அதாவது நமக்கு கஷ்டம் தருமே என்பதற்காக தவறுகளை சுட்டிக்காட்டாமல் இருந்துவிட்டு, எல்லாம் முடிந்தபிறகு பேசுவது நல்ல நட்பிற்கு அடையாளம் இல்லை. ஆரம்பத்திலேயே நாம் விரும்புகிறோமோ? இல்லையோ தீர்க்கமுடன் தன் கருத்துக்களை வலியுறுத்துபவனே நல்ல நண்பனாவான். அப்படிப்பட்டவனை சிறிது காலம் தாழ்த்தி நாம் புரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும். ஆனால் ஆரம்பத்திலேயே நிஜமான விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் நமக்கிருந்தால் நல்ல நட்பை உடனுக்குடன் புரிந்து கொள்ளலாம்.