குருஜி அவார்களுக்கு, வணக்கம். சமீபகாலங்களில், தாய்மதம் திரும்புதல் என்ற பெயரில் சில ஹிந்து அமைப்புகள் நிகழ்சிகளை நடத்துவது நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. நமது மதத்தில், உள்ள சில அறிஞர்கள் வேறு மதங்களில் உள்ளது போல, ஹிந்து மதத்தில் மதம் மாற்றுவதற்கான சடங்குகளோ, மந்திரங்களோ இல்லை என்று கூறுகிறார்கள். பிறகு எப்படி சாஸ்திரத்திற்கு விரோதமான இந்த நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இது கூடாது என்று தடுப்பதற்கு உங்களை போன்ற ஆன்மீகவாதிகள் முன்வராதது ஏன்? தயவு செய்து விளக்கம் தரவும்.
இப்படிக்கு,
அசோகன்,
சென்னை.
மதம் மாறுவது, மாற்றுவது என்பது இந்து மதத்தின் பார்வையில் இப்போது நடைமுறையில் கருதப்படுகிற பொருளுக்கு இணையானது அல்ல. ஹிந்து மதம் இதை வேறு கோணத்தில் பார்க்கிறது. ஒருவன் ஹிந்து மதத்திலிருந்து வேற்று மதத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அங்கு சென்றால், அவனை மதம் மாறியவனாகவோ, மனம் மாறியவனாகவோ கருத முடியாது. தர்மத்தின் வழியிலிருந்து பிரிந்து சென்றவன், தர்மத்தை அறியாமல் சென்றவன் என்று தான் பார்க்கிறது.
இதே போல, மத மாற்று என்பதை தர்மபாதையில் நடப்பதை தடுத்தல் என்பதே ஹிந்து மதத்தின் முடிவாகும். அந்த வகையில் பார்க்கப்போனால் மாற்றுவது, மாறுவது என்பதெல்லாம் பொருளில்லாத வாதங்களாகும். ஒருவன் ஹிந்துவாக பிறந்துவிட்டால், அவன் சாகும் வரையிலும் ஹிந்து தான் அவன். ஹிந்து மத தெய்வங்களை வழிபடாதவனாக இருக்கலாம். ஹிந்து மதத்திற்கு எதிரான செயல்களை செய்பவனாக இருக்கலாம். கடவுளே கிடையாது என்று நாத்திகம் பேசுபவனாக கூட இருக்கலாம். ஆனாலும், அவன் ஹிந்து என்றே கருதப்படுவான்.
தனது செய்கையை தவறானது, தனது செயல் பொருளற்றது என்பதை உணர்ந்து, மீண்டும் அவன் ஹிந்து மதத்திற்குள் பிரவேசம் செய்தால், பழையபடி தனது தர்மங்களை ஏற்றுக் கொண்டவன் என்று தான் ஆவானே தவிர, புதியதாக ஹிந்துவாக ஆனான் என்பது இல்லை. இதை இன்னும் தெளிவாக சொல்லப்போனால் ஒருவன் ஹிந்து மதத்திலிருந்து வெளியேறவே முடியாது. உள்ளே இருந்து கொண்டு, வேறு வழிபாட்டை செய்தாலும் அவன் பெயர் ஹிந்துவே என்பது ஆகும்.
ஒருவன் வெளியில் சென்று விட்டு உள்ளே வந்தால், அவனை தாய் மதம் திரும்பியவன் என்று கூறலாம். வெளியே போகவே முடியாத ஒருவனை திரும்பி வந்தவன் என்று எப்படி கருதமுடியும்? எனவே ஹிந்து தர்ம சாஸ்திரப்படி, மதம் மாறி வந்தவன், மாற்றியவன் என்பது கிடையவே கிடையாது. இப்போது இந்தியாவில் நடக்கும் தாய் மதம் திரும்புதல் என்ற நிகழ்வுகள் எல்லாம், அரசியல் ரீதியான எதிர்ப்புணர்வே என்று கருதவேண்டுமே தவிர, ஆன்மீக நிகழ்வு என்று எடுத்துக் கொள்ள முடியாது. இத்தகையதை மதம் திரும்புதல் என்பது இன்று நேற்று நடக்கவில்லை கடந்த இருபது ஆண்டுகளாக நடந்து வரும் நிகழ்வுகளாகும். ஊடகங்கள் இதை இப்போது தான் நடப்பது போன்று பெரிதுபடுத்துகின்றன. இது தேச நலனிற்கு நல்லதல்ல.