குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். நான் எனது தொழில் வளர்ச்சிக்காக சில மாதங்களாக வங்கி கடன் ஒன்றை எதிர்பார்க்கிறேன். எல்லாவிதமான சான்றிதழ்கள் இருந்தாலும் கூட, ஏதாவது ஒரு வகையில் கடன் பெறுவது தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. இதனால் எனக்கு மன கஷ்டமும், பணக்கஷ்டமும் நிறைய ஏற்படுகிறது. இதை நிவர்த்தி செய்ய ஏதாவது பரிகாரம் இருந்தால், தயவு செய்து சொல்லுங்கள். நம்பிக்கையோடு செய்கிறேன்.
இப்படிக்கு,
பரமசிவம்,
வேலூர்.
இந்த காலத்தில் கடன் வாங்குவதும் கடினம். கடன் கொடுப்பதும் கடினம். பத்து ரூபாய் பிரச்சனைக்காக, எட்டு ரூபாய் கடன் வாங்கச் செல்வோம். ஆனால், அது நம்மை இருபது ரூபாய் கடனில் கொண்டுபோய் நிறுத்திவிடும்.
மெதுவாக முன்னேறினாலும் கூட பரவாயில்லை. கடன் வாங்காமல் சொந்த மூலதனத்திலேயே தொழில் செய்வோம் என்று நினைப்பதே புத்திசாலித்தனம் என்பது எனது நம்பிக்கை. ஆனாலும் பல நேரங்களில் இந்த நம்பிக்கையை மூட்டை கட்டி வைத்து விட்டு, கடன் என்ற கிணற்றிற்குள் இறங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.
வங்கிகளும் சரி. மற்ற கடன் கொடுக்கும் நிறுவனங்களும் சரி. யார் வாங்கினால் திருப்பி கட்ட மாட்டார்களோ அவர்களுக்கு விழுந்து விழுந்து உபசரணை செய்வார்கள். நியாயப்படி திரும்ப கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களை, காத்திருக்க வைத்தே கொன்றுவிடுவார்கள். இது இந்தியா முழுவதும் இருக்கும் பெரிய சாபக்கேடு.
இதை மாற்றி உடனடியாக கடன் பெற வேண்டுமானால், உங்கள் அருகில் உள்ள ஜீவ சமாதிகள், பிருந்தாவனங்கள் போன்றவற்றிற்கு நீங்கள் பிறந்த கிழமையில் சென்று, பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அங்கே அமைதியாக ஓய்வெடுத்து கொண்டிருக்கும் மகான்களின் புனித ஆத்மா உங்களுக்கு உடனடியாக உதவிகள் செய்யும்.
அப்படி ஜீவசமாதி போன்ற வசதிகள் அருகில் கிடைக்காதவர்கள், சனி பகவான் சன்னதியில் எட்டு அகல் விளக்குகள் ஏற்றி, அதில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ரூபாய் நாணயங்கள் போட்டு, அந்த விளக்கு எண்ணெயில் உங்கள் முகத்தை பார்த்த பிறகு தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து ஆராதனை நடத்துங்கள். அதுவும் நீங்கள் பிறந்த கிழமையில் செய்ய வேண்டும். நிச்சயம் தடைகள் விலகும். கடனும் கிடைக்கும்.