அன்புள்ள குருஜி அவர்களுக்கு, வணக்கம். எனக்கு திருமணம் முடிந்து, ஐந்து வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. இன்னும் குழந்தை பிறக்கவில்லை. என் வீட்டார், உன் மனைவிக்கு ஜாதகப்படி குழந்தை பாக்கியம் கிடையாது. எனவே நீ வேறு திருமணம் செய்துகொள் என்று கூறுகிறார்கள். நான் மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில், என்னிடம் பயங்கரமான குறை இருப்பதாக சொல்கிறார்கள். குறையை என்னிடம் வைத்துக் கொண்டு மனைவியின் மேல் பழிபோட்டு இன்னொரு பெண்ணுக்கும் கெடுதல் செய்ய விரும்பவில்லை. என் ஜாதகப்படி உடல்நிலை தேறி எனக்கு குழந்தை பிறக்குமா? அல்லது வேறு வகையில் முயற்சி செய்யலாமா? என்று தயவு செய்து அறிவுரை கூறுங்கள். உங்கள் அறிவுரையை இறுதி முடிவாக ஏற்றுக்கொண்டு செயல்படுகிறேன்.
இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத வாசகர்,
சிதம்பரம்.
சில நேரங்களில் இறைவனது செயல்களை பார்க்கும் போது, மனநோயாளி ஒருவன் சீட்டுக்கட்டு ஆடுவது போல விசித்திரமாக இருக்கும். பல காரியங்களுக்கு காரணங்களே தெரியாமல் நாம் திண்டாடுவோம். அதாவது சிலருடைய வாழ்க்கையில் ஆனந்தத்தை மட்டுமே அள்ளி அள்ளி கொடுப்பான். சிலரை கனவில் கூட சிரிக்க அனுமதிக்க மாட்டான்.
உங்கள் மனைவியின் ஜாதகத்தை பார்த்ததில் அவர்களுக்கு குழந்தை பிறப்பதற்கான சாத்தியக்கூறே இல்லை. உங்கள் ஜாதகத்தில் சுக்கிரனும், சூரியனும் இணைந்து இருக்கிறது. அப்படி இருக்கும் ஜாதகத்திற்கு காமேஷ்வர யோக ஜாதகம் என்று கூறுவார்கள். பெயர் நன்றாக இருக்கிறதே, அதனால் பலனும் நன்றாக இருக்கும் என்று நீங்கள் ஆனந்தப்பட வேண்டிய அவசியம் இல்லை.
சுக்கிரன் என்பது ஆண் மகனின் விந்துவை கட்டுப்படுத்தும் கிரகமாகும். சூரியன் என்பது அக்னியோடு சம்மந்தப்பட்ட கிரகமாகும். இவை இரண்டும் இணைந்தால் ஒருவனுக்கு குழந்தை பெறுவதற்கான ஆற்றல், இளமைக் காலம் முதற்கொண்டே இருக்காது என்று ஜைமினி கூறுகிறார்.
சரி இயற்கை வழியில் குழந்தை இல்லை. செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்து கொள்ளலாமா? சுவிகார குழந்தை எடுத்துக் கொள்ளலாமா? என்று பார்த்தால் அதற்கும் சாதகமான வழி இருப்பதாக தெரியவில்லை. பொதுவாக உங்கள் இருவருக்கும், அம்மா-அப்பா என்ற பதவியை அடைவதற்கான சூழல், இந்தப் பிறவியில் இல்லை என்று வருத்தத்தோடு குறிப்பிட வேண்டியது இருக்கிறது.
இருப்பவனுக்கு ஒரு பிள்ளை. இல்லாதவனுக்கு ஆயிரம் பிள்ளை என்று கூறுவார்கள். எனவே உங்களது வாழ்க்கையை இறைப் பணியிலும், ஆதரவற்ற குழந்தைகளை பராமரிப்பதிலும் செலவிடுங்கள். உங்களது காலம் முழுவதும் நற் கீர்த்தி, உங்கள் வாசலிலிருந்து வசந்தக் காற்றை வீசும். நீங்கள் மனித குழந்தைக்கு, அம்மா அப்பாவாக இருந்து குறுகிப் போகாமல், தெய்வக் குழந்தைகளுக்கு தாய் தகப்பனாக இருந்து தொண்டு செய்யுங்கள். கடவுளான நாராயணன் உங்களை ஆசிர்வதிப்பான்.