Store
  Store
  Store
  Store
  Store
  Store

தாலி அணியாமல் இருக்கலாமா?




குருஜி அவர்களின் பாதகமலங்களை வணங்கி, இந்த மடலை எழுதுகிறேன். என் அக்கா ஆன்மீகத்தில் மிகவும் நாட்டமுடையவள். அவரது கணவரும் நல்ல பக்திமான் என்றாலும், அக்கா அளவிற்கு அலட்டிக்கொள்ள மாட்டார். என் அக்கா கடந்த இரண்டு வருடமாக தங்க நகைகள் எதுவும் அணியாமல் துளசி மாலை மட்டுமே அணிந்து வந்தாள். அதுவரையில் எந்த சிக்கலும் இப்போது இரண்டு மாதமாக திருமாங்கல்யத்தையும் கழற்றி வைத்துவிட்டு,  இரங்கநாதனை சுமக்கும் சரீரத்தால் வேறு எதையும் சுமக்கமாட்டேன் என்கிறாள். அவள் விருப்படி இருக்கட்டும் என்று அவள் கணவரும் அமைதியாக இருக்கிறார். ஆனால், அவர் வீட்டார் சுமங்கலி பெண்ணொருத்தி மங்களச் சின்னங்கள் எதுவும் அணியாமல் இருப்பது அபசகுனம். குடும்பத்திற்கு ஆகாது என்று பிரச்சனை படுத்துகிறார்கள். அவளிடம் எத்தனை முறை எடுத்துச் சொல்லியும் காதில் வாங்கி கொள்கிற மாதிரி இல்லை. இதனால் எங்கள் வீட்டு வரையிலும் பிரச்சனையின் வேகம் தாக்குகிறது. இதிலிருந்து விடுபட என்ன வழி? அனைத்தும் அறிந்த நீங்கள் சரியான வழியை காட்டி உதவி செய்யுங்கள். 

இப்படிக்கு, 
ரகுராமன், 
சென்னை. 



ரு சமயத்தில் பார்வதி தேவி, பரமேஸ்வரனிடம் கற்பு என்றால் என்ன வென்று கேள்வி கேட்டாளாம். அதற்கு, ஈசன் முழுவதும் எண்ணெய் நிரம்பிய கிண்ணம் ஒன்றை, தேவியின் கையில் கொடுத்து, இதிலிருப்பது சிந்தாமல், சிதறாமல் இமயம் முதல் குமரி வரை நடந்து போய் வா என்று சொன்னாராம். அவளும் அப்படியே செய்தாள். பிறகு, பரமசிவன் நீ எண்ணெய் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு செல்லும் போது, வழியில் என்ன நடந்தது என்று கேட்டார். அதற்கு அவள் எனக்கொன்றும் தெரியாது என்றாள். மீண்டும் எண்ணெய் இல்லாமல் நடந்து சென்று பார். அங்கே நடப்பவைகளை வந்து சொல்லு என்று அனுப்பி வைத்தார். 

அன்னையும் அவரது கட்டளைப்படி சென்று, பார்த்து வந்து, ஐயனே வழியில் திருவிழாக்கள் நடந்தன. சண்டைகள் நடந்தன. சந்தைகளும் நடந்தன. இறப்பு-பிறப்பு, திருமணம், என்று நிறைய நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன என்று பதில் சொன்னாள். இப்போது பரமசிவன் நீ முதலில் எண்ணெய் கிண்ணத்தோடு சென்ற போதும் அவைகள் நடந்தன. ஆனால், அப்போது அவைகள் எதுவும் உன் கண்களில் தென்படவில்லை. உன் கவனம் முழுவதும் கிண்ணத்தில் இருக்கின்ற எண்ணெய் கீழே கொட்டாமல் இருப்பதில் தான் இருந்தது. கற்பு என்பதும் அதைப் போன்றது தான். 

உலக காரியங்கள் அனைத்தையும் செய்து கொண்டே இருந்தாலும், அன்பான பெண்ணின் எண்ணம் முழுவதும் கணவனின் மீதே இருக்கும். உறங்கும் போதும், குழந்தைகளை சீராட்டும்போதும், மரணமடையும் தருவாயில் கூட, கணவனை பற்றியே நினைத்து கொண்டிருப்பது தான் கற்பு. அது தவிர, கற்புக்கு என்று தனி உறுப்புகள் கிடையாது என்று பரமசிவன் பார்வதி தேவிக்கு பதில் சொல்லியிருக்கிறார். ஒருமுகப்பட்ட சிந்தனை எப்படி கற்பாக இருக்கிறதோ, அதே போன்றது தான் சுமங்கலித்தன்மை என்பது. ஒரு பெண்ணின் சுமங்கலித்தன்மை புறச்சின்னங்களில் கண்டிப்பாக கிடையாது என்று நான் நினைக்கிறேன். அவளது சிந்தனையும், செயலுமே சுமங்கலித்தன்மையின் உண்மையான வெளிப்பாடு என்பது என் சொந்த கருத்து. 

ஆயிரம் தான் நமக்காக நாம் வாழ்ந்தாலும், ஊருக்காக சிலவற்றை செய்யவேண்டும். அப்படி செய்வது தர்மமும் கூட. ஆடை இல்லாமல் இருப்பது எனக்கு சுகமளிக்கிறது என்பதற்காக, என்னால் அப்படி இருக்க முடியாது. ஊர் அதை அனுமதிக்காது. பொது நியதிக்கு நான் கட்டுப்பட்டு ஆகவேண்டும். அப்படி கட்டுப்படுவது தான் கடவுளுக்கு கூட பிடிக்கும். பகவத் கீதையை சொன்ன கண்ணன் பொது நலத்தை முன்னிட்டு கர்மம் செய்யச் சொல்கிறான். இதை மறக்க கூடாது. எனவே உங்கள் தமக்கையாரின் பக்தி மதிக்கப்படவேண்டியது. அதே நேரம் ஊருக்காக, குடும்பத்திற்காக, நமது பாரம்பரியதிற்காக சில கடமைகளை செய்தே ஆகவேண்டும். அதை அவருக்கு புரியவைப்பது நமது கடமை. எனது இந்த பதிலை அவரிடம் காட்டுங்கள். பகவான் வாசுதேவ கிருஷ்ணர் அருளால் அவர் மனம் நிச்சயம் மாறும். 








Contact Form

Name

Email *

Message *