Store
  Store
  Store
  Store
  Store
  Store

இறைவன் தீமையை தருகிறானா...?



குருஜி அவர்களுக்கு, வணக்கம். உங்களைப் போன்ற ஆன்மீகவாதிகளும், பண்டையகாலத்தில் வாழ்ந்த ரிஷிகளும், நமது மதத்தில் உள்ள புனிதமான நூல்கள் பலவும் உலகத்தின் இயக்கம் இறைவனால் மட்டுமே நடக்கிறது. நமது வாழ்க்கையில் நடக்கின்ற நல்லது, கெட்டது அனைத்தும் இறைவனாலேயே கொடுக்கப்படுகிறது. அவனின்றி ஓரணுவும் அசையாது என்று கூறுகிறார்கள். இதை அப்படியே ஏற்றுக்கொண்டால், மனிதர்களாகிய நமது நல்ல எண்ணமும், தீய எண்ணமும் இறைவனாலேயே உருவாகிறது. தீய புத்தியால் கெட்ட காரியங்கள் நடப்பதை நாம் அறிவோம். இறைவனால் கொடுக்கப்படுவது தீய எண்ணம் என்றால், அதனால் ஏற்படுகின்ற எதிர்விளைவும் இறைவனாலேயே கொடுக்கப்படுவது ஆகும். பிறகு எதற்காக கெட்ட நடத்தைக்கு மனிதன் மட்டுமே பொறுப்பாளி போல. அவனே தண்டிக்கப்படுவான். அவனே நரகத்திற்கு போவான். அவனே மீண்டும், மீண்டும் பிறவி எடுப்பான் என்று வீணாக பயமுறுத்தப்படுகிறது. இதை பற்றி எளிமையாக புரிந்து கொள்கிற வண்ணம் விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும்.

இப்படிக்கு,
கதிரேசன்,
காரைக்குடி.



ந்த உலகத்தில் நிறைய புனித நூல்கள் உள்ளன. அவைகளை கூறியது சாதாரண மனிதர்கள் என்றாலும் கூட அந்த மனிதர்கள் அருளாளர்கள், ஞானம் நிறைந்தவர்கள், நிறை மனிதர்கள் என்று போற்றத்தக்க ஞானிகள் ஆவார்கள். என்றுமே இறைவன் ஞானிகளின் வழியாகத்தான் நம்மைப் போன்ற சாதாரண ஜீவன்களோடு பேசுவான். அந்த வகையில் பார்க்கப் போனால், ஞானிகளின் மொழிகளும், இறைவனின் மொழியும் ஒன்றே ஆகும்.

புனித நூல்கள் அனைத்தும் என்ன சொல்கின்றது. மனிதன் இப்படித்தான் வாழ வேண்டுமென்று ஒரு தர்ம சட்டத்தை வகுத்து கொடுத்திருக்கிறது. அந்த சட்டத்தை அடிப்படையாக வைத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை என்று முன்னோர்கள் பலராலும் வாழ்ந்து அனுபவப்பட்டு உறுதி செய்யப் பட்டிருக்கிறது. தனி மனிதனாகிய ஒருவன், நான் அந்த தர்மசட்டத்தின் படி வாழமாட்டேன் எனக்கென்று அறிவு இருக்கிறது, அனுபவம் இருக்கிறது. எது சரி? எது தவறு? என்று பகுத்துப் பார்க்கும் பகுத்தறிவு இருக்கிறது. எனவே, நான் என் புத்தி சொல்கிறபடி வாழ்வேன் என்ற முடிவுக்கு வந்தால் அதற்கு நாம் யாருமே குறுக்கே நிற்க முடியாது.

எனது உரிமை, எனது சுதந்திரம் என்று வந்த பிறகு அதனால் கிடைக்கின்ற அனைத்து பலன்களும் நமக்கானது மட்டுமல்ல. நம்மாலேயே உருவாக்கப்பட்டதாகும் அதன் முழு சொந்தக்காரர் நாம் மட்டும் தான். நோயாளி ஒருவனுக்கு மருத்துவன் மருந்தை கொடுக்கிறான். இதை இப்படி சாப்பிட வேண்டுமென்று அறிவுறுத்தவும் செய்கிறான். ஆனால், நோயாளி தனது விருப்பபடி மருந்தை ஒரே நேரத்தில் சாப்பிட்டு விடுகிறான். விளைவு என்னாவாக இருக்கும்? நிச்சயம் நல்லதாக இருக்காது. இப்படி செய்வதையும் செய்து விட்டு மருந்து சரியில்லை. மருந்து தந்த வைத்தியன் சரியில்லை என்று குறை கூறினால் அது புத்திசாலித்தனம் இல்லை.

மருந்தும், மருத்துவனும் போன்றது தான் தர்ம சட்டம். அதன் வழியிலே சென்றால் துன்பம் என்பதே இல்லை. தர்மத்தை நமது இஷ்டப்படி வளைக்க முற்படும் போது, தான் துன்பங்களும் வருகின்றது. தண்டனைகளும் வருகிறது. நம் முன்னால் இரண்டு நதி ஓடுகிறது. ஒன்று இனிப்பு நதி. இன்னொன்று கசப்பு நதி. இரண்டில் எதை வேண்டுமென்றாலும் தேர்ந்தெடுத்து குதிக்கலாம் என்ற சுதந்திரம் நமக்கு தரப்பட்டிருக்கிறது. நாம் கசப்பு நதியில் குதித்தால் அதன் பொறுப்பாளி நாம் தான் அதை போல இறைவன் நமக்கு எண்ணங்களை மட்டுமே தருகிறான். அவற்றை நல்லதாக மாற்றிக் கொள்வதும் கெட்டதாக மாற்றி கொள்வதும் நமது கையில் தான் இருக்கிறது.

தண்ணீரில் விழுந்தால் மூச்சு திணறும். நெருப்பில் விழுந்தால் உடம்பு கொப்பளிக்கும். பாலைவன மணலில் விழுந்தால் இரத்தம் சுண்டிப் போகும். அதைப் போல கெட்டது செய்தால், கெட்டதுதான் விளையும். இதனால் தான் கண்ணன் கீதையிலே அழகாகச்  சொன்னான். உனக்கு நீயே நண்பன். உனக்கு நீயே எதிரி என்று. இதையே கணியன் பூங்குன்றனார் நன்மையும், தீமையும் பிறர் தர வாரா என்று கூறுகிறார்.









Contact Form

Name

Email *

Message *