குருஜி அவர்களுக்கு, வணக்கம். எல்லோரும் போற்றுகிற விதத்தில் வாழவேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கு என்னிடத்தில் எதை வளர்த்துக் கொள்ள வேண்டும்? தெளிவாக்கிட விரும்புகிறேன்.
இப்படிக்கு,
ரமேஷ் குமார்,
சென்னை.
உலகத்திலேயே மிகச் சிறந்த பூ அரிதான பூ எது தெரியுமா? மண்டையை போட்டுக் குழப்ப வேண்டாம். கலைக்களஞ்சியங்களை தேட வேண்டாம். அந்த பூ வேறு எதுவும் இல்லை. “பண்பு” தான். இந்த பண்பை எந்த அளவு வளர்த்து கொள்கிறோமோ அந்த அளவு நமது மனிதத் தன்மை வளரும்.
பண்பு என்றால் என்ன? என்ற கேள்விக்கு பலவிதமான பதில்களை கூறலாம். என்னை பொறுத்தவரை நான் அதற்கு சொல்லுகிற ஒரே விளக்கம் எதிரிகளையும் அவர்களால் ஏற்படுகிற தொல்லைகளையும் பொறுத்து, சகித்துக் கொண்டு அவர்களுக்கு பதிலுக்கு பதில் தொல்லை கொடுக்காமல் இருப்பதே பண்பு என்று நினைக்கிறேன்.
பொறுமை காப்பது என்பதை கோழைத்தனம் என்று சிலர் கூறலாம். வலிமை இல்லாமல் பொறுமையாக இருப்பது தான் கோழைத்தனமே தவிர, வலிமையோடு பொறுப்பது மிகப் பெரிய வீரமாகும். இந்த வீரம் இருந்தும், அடித்தவனை அணைக்கும் பழக்கம் இருந்தால், அது அடிப்பவனை மட்டுமல்ல, அடித்தவனையும் திருத்தும். இது வெறும் அறிவுரை அல்ல. வாழ்க்கையின் அனுபவமாகும்.