முன்னொரு காலத்தில் “ஹோலிகா” என்ற பெயரில் அரக்கி ஒருத்தி வாழ்ந்திருக்கிறாள். இப்போது சில மனிதர்கள் பச்சை குழந்தை என்று கூட பார்க்காமல் பாலியல் தொல்லை செய்கிறார்கள் அல்லவா? அவர்களை போலவே அந்த அரக்கியும் சிறிய குழந்தைகளை தூக்கிக் கொண்டு சென்று, சமைத்து சாப்பிட்டு விடுவாளாம். மனித குழந்தை என்றால் அவள் நாக்கில் சரம் சரமாக நீர்த்தாரை கொட்டுமாம். அப்படிப்பட்ட கொலைவெறி அவளுக்கு. அவளிடம் “ஹிரண்யன்” என்ற அரக்கன், தனது மகன் பிரகலாதனை கொடுத்து, இவன் என் சொல் பேச்சு கேட்க மாட்டேன் என்கிறான். எனவே இவனை சமைத்து, உனது உணவாக எடுத்துக் கொள் என்று கொடுத்து விட்டானாம்.
அரச குமாரன் கொழு கொழு என்று வளர்ந்த குழந்தை. பார்ப்பதற்கு வெண்ணையால் செய்த லட்டு போல, உருண்டு திரண்டு இருந்தான். இவனை சமைக்காமலே பச்சையாகவே ருசித்து, ரசித்து சாப்பிடலாம் என்ற எண்ணத்தில் ஹோலிகா குழந்தையை தூக்கிக் கொண்டு நெருப்பிலே குதித்து ஓடி இருக்கிறாள். கையிலிருந்த குழந்தை சாதாரண குழந்தை இல்லை. தாயின் கருவறையில் இருக்கும் போதே “ஓம் நமோ நாராயணா” என்ற எட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து, உச்சரித்து நாராயண பக்தியில் ஊறி திளைத்தது. எனவே குழந்தையை தூக்கிச் சென்ற அரக்கியை மட்டும் நெருப்பு சுட்டு, சாம்பலாக்கி விட்டு, ஒரு புதிய மலர் போல பிரகலாதனை வெளியே தள்ளியது. அந்த நாள் பங்குனி மாதம் பெளர்ணமி தினம். அதன் நினைவாகத்தான் இன்று வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஹோலிகா அரக்கியின் நினைவாகவே அதற்கு ஹோலி என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள்.
பங்குனி மாத பெளர்ணமி பக்தர்களை காப்பதற்கு எந்த வடிவிலாவது பகவான் வருவான் என்பதை காட்டுவதோடு நின்றுவிடுவது இல்லை. மிதிலையில் ஜனக மகாராஜனின் குமாரத்தியாக இருந்த சீதையை கல்யாணம் முடித்து, சீதாராமனாக எம்பெருமான் காட்சி தந்த தினமும் இந்த பெளர்ணமி தினமே. மதுரையில் அன்னை மீனாட்சியை கரம் பிடித்தாரே நமது தெய்வ தந்தை சொக்கேஸ்வரர் அவருக்கும், உலகத்து தாயாருக்கும் திருமணம் நடந்தது இதே பெளர்ணமி அன்று தான். அதனால் தான் நாடு முழுவதும் உள்ள திருமணம் ஆகாத ஆண்களும், பெண்களும் இந்த நாளில் கல்யாணம் விரதம் என்ற ஒரு சிறப்பான விரதத்தை மேற்கொண்டு நல்ல பலன்களை அடைகிறார்கள்.
இதுவரையில் “முழு நிலவு காலம்” என்ற “பெளர்ணமி தினம்” ஒவ்வொரு மாதத்திலும், எத்தகைய சிறப்போடு வருகிறது. அது, என்னென்ன பலன்களை மனிதர்களுக்கு தருகிறது என்பதை பார்த்தோம். வருடம் முழுவதும் வரும் அமாவாசை தினம் எப்படி பித்ருக்களுக்கு, அதாவது முன்னோர்களுக்கு சிறப்பனதோ அதே போல உயிரோடு வாழும் மனிதர்களுக்கு, பெளர்ணமி தினமும் சிறப்பனாதாகும். இதை மனதில் வைத்து, மாதந்தோறும் ஒவ்வொரு பெளர்னமியையும் இறை வழிபாட்டில், இறை சிந்தனையில், இறை நாமாவழியில் கழித்தோம் என்றால் இறைவனின் அருளை பரிபூரணமாக பெறலாம். பூரணமாக வாழலாம்.