Store
  Store
  Store
  Store
  Store
  Store

தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...?



    மிழகத்தை நேசிக்கின்ற நல்ல மனங்கள் பல உள்ளன அந்த மனங்களின் உண்மையான ஏக்கங்கள் பல என்றாலும் மிக முக்கியமானது 1967 முதற்கொண்டு தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இருபெரும்  கட்சிகளே மாறி மாறி அரசாளுகின்றன

இதில் யாராவது ஒருவராவது மக்களுக்கு ஆக்கப்பூர்வமான செயல்களை செய்வார்களா என்றால் எதுவும் இல்லை

இவர்களை தவிர்த்து வேறு யாராவது ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்குமே? என்பதுதான் ஆனால் மாற்று ஏற்பாடாக நல்லவர்கள் யாரும் தமிழக அரசியல் வானில் தென்பட வில்லை என்பதுதான் யதார்த்த உண்மையாக உள்ளது

காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் கைவிட்டுப் போன அதிகாரத்தை மீண்டும் பெறவேண்டும் என்ற எண்ணம் சுத்தமாக கிடையாது


  காங்கிரஸ்காரர்கள் உறக்கத்தில் கூட சோனியா காந்தி எப்போது எந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பாரோ நம் கட்சிப் பதவி எப்போது பறிபோகுமோ? என்ற பதபதைப்புத்தான் தொடர்கிறது

பொதுவுடமை கட்சிக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம் இரவு பகலாக போராட்டங்கள் நடத்துவதில் தான் ஆர்வம் உள்ளதே தவிர  தேசிய அளவிலும் சரி மாநில அளவிலும் சரி மக்கள் பிரச்சனைகளுக்கு நிரந்தர  தீர்வுகள் காண முயற்சிப்போமே என்ற எண்ணம் எப்போதுமே கிடையாது

தங்களது ஆட்சி இருக்கின்ற மாநிலங்களில் கூட அவர்களின் செயல்பாடுகளால் மக்கள் நன்மை அடைகிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்

பா.ஜ.க. போன்ற கட்சிக்களும் கூட தங்களுக்குள் கோஷ்டி சண்டையில்தான் தமிழ் நாட்டிலேக் கூட உள்ளனர் அவர்களை நம்புவதும் மண்குதிரையை நம்புவதும் ஒன்றுதான்


    மற்றபடி டாக்டர். ராமதாஸ் நடிகர் விஜயகாந்த் போன்றோர்களும் நல்லவர்களாகத் தெரிய வில்லை

சரி நிலமை இப்படியே போனால் கருணாநிதி ஜெயலலிதா போன்ற பூனைகளுக்கு மணிக்கட்டுவது யார்? தமிழகத்தை குடும்ப ஆதிக்கத்திலிருந்தும் மன்னார்குடி சுரண்டலிருந்தும் காப்பாற்றப் போவது யார்?


   கண்ணுக்கெட்டிய தூரம் வரை அப்படி யாரையும் பார்க்க முடியவில்லை இருந்தாலும் ஒரு யோசனை தோன்றுகிறது அது நடைபெறுமா நடைபெறாதா என்றெல்லாம் சொல்ல முடியாது நம்பவும் முடியாது

இருப்பினும் கருத்துக்களை விதைத்து வைத்தால் என்றாவது ஒரு நாள் முளைக்கலாம் அல்லவா!

நல்லதோ கெட்டதோ திரு.விஜயகாந்த் அவர்களுக்கு தமிழ் நாடு முழுவதிலும் திரு. ராமதாஸ் அவர்களுக்கு வடதமிழகத்திலும் ஓரளவு செல்வாக்கு இருக்கிறது

இந்த செல்வாக்கை ஓட்டுகளாக மாற்ற இருவரும் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்

வேண்டுமானால் தலைக்கு இரண்டரை வருடங்கள் ஆட்சி செய்வதென்று ஒப்பந்தம் வைத்துக் கொள்ளலாம்

இந்த விஷயத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சியினர் விஜயகாந்த்தை தாறுமாறாக விமர்சனம் செய்திருக்கிறார்கள் 

இது விஜயகாந்த்தை மிகவும் காயப்படுத்தியுள்ளது பட்ட காயத்தை மறந்து ராமதாசிடம் இறங்கி போவது சற்று சிரமம் தான்

ராமதாசுக்கும் இத்தகைய சங்கடம் உண்டு ஆனால் மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம் என்பதை இருவரும் உணர்ந்தால் சிக்கல் இல்லை


  மந்திரி சபையில் பங்கெடுத்துக் கொள்ள சொல்லி காங்கிரஸ் மற்றும் உதிரி கட்சிகளை இணைத்து இடதுசாரிகளையும் அரவணைத்து மூன்றாவது அணியை உருவாக்கினால் அரசியலில் மட்டுமல்ல ஆட்சியிலும் மாற்றம் நிச்சயம் ஏற்படும்

கழக மாயங்களை ஒழித்து விட்டால் நல்லாட்சியைப் பற்றி அடுத்து சிந்திக்கலாம் அது சரி இந்த யோசனை யார் காதில் விழப்போகிறது....?

Contact Form

Name

Email *

Message *