Store
  Store
  Store
  Store
  Store
  Store

ராமாயணம் சரித்திர உண்மையா...?




ராமாயண ஆய்வு 1


      த்துவங்கள் என்பது ஒரு பெருங்காடு என்று சொல்லாம். அந்த காட்டிற்குள் வானை நோக்கி உயர்ந்து நிற்கும் மரங்களும் அழகிய மலர்களை விதவிதமாக உற்பத்தி செய்யும் செடி, கொடிகளும் மனிதனின் உடல் நோயை நீக்கும் மூலிகை வகைகளும் இன்னும் கணக்கிலடங்காத செல்வங்களையும் பெறலாம் என்பது போலவே தத்துவக்காடு நம் மனதிற்குள் மண்டிக்கிடக்கும் ஆயிரமாயிரம் அஞ்ஞான வீக்கங்களை சிந்தனை என்ற நல்ல மருந்து கொடுத்து குணப்படுத்துபவைகள் தான் என்பது அந்த தத்துவங்களை நடைமுறை வாழ்க்கையோடு இணைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடம் கேட்டுப் பெறும் பொழுதுதான் உண்மையான அறிவும், அறிவால் அனுபவமும், அனுபவத்தால் சுகமும் கிடைக்கிறது.


    வேதங்களின் சிந்தனையில் தொடங்கி  குருஜியிடம் தெளிவாக பெற்ற நாம் அவர் ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லும்போது ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிட்டும் அப்படி ஒப்பிடக் கூடாதவைகளை தனித்தும் தனது சுயக்கருத்துகள் எதையும் அதனோடு கலக்காமலும் அதே நேரம் அவற்றைப்பற்றிய தனது கருத்து இதுதான் என்று தனிமைப்படுத்தி விளக்கியும் உள்ள பாங்கு உண்மையில் பறவையானது பல இடங்களுக்குப் பறந்து சென்றது பலவித தானியங்களை தனது சிறிய தொண்டைக்குள் சேகரித்து மசித்து தமது குஞ்சுகளுக்கு இதமாகவும் பதமாகவும் ஊட்டும் பாங்கில் அமைந்திருந்ததை உணர முடிந்தது.

    சில விஷயங்களை கேட்டவுடன் இத்தோடு போதும் என்ற சலிப்பு ஏற்பட்டு விடும். அதற்கு விஷயங்களும் ஒரு காரணமாக இருக்கலாம். சொல்லுகின்ற விதமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் யோகி ஸ்ரீ ராமானந்த குரு சொல்லுகின்ற விஷயங்கள் எல்லாமே மீண்டும் மீண்டும் கேட்க தூண்டக் கூடியதாக இருக்கும். அவர் சொல்லும் பாங்கும் அப்படியே இருக்கும். அதனால் இன்னும் பல கருத்துகளை அறிந்து கொள்ள ஆர்வமானது பீறிட்டு கிளம்பும் 


     அத்தகைய ஆர்வத்தின் அடிப்படையில் இதுவரை தத்துவ ஞானிகளின் வித்தக சிந்தனைகளை அலுக்காமல் சலிக்காமல் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு இத்தகைய சக்தி மிகுந்த கருத்துக்களை ஞானிகள் மட்டும்தான் சொன்னார்களா அல்லது நம் நாட்டிலுள்ள புராண இதிகாசங்களும் சொல்லுகின்றனவா, அப்படி சொல்லுவதாக இருந்தால் என்னென்ன விஷயங்களை என்னென்ன மாதிரி சொல்லுகின்றனர். என்பதை அறிய விரும்பி ராமாயணம் என்னும் இதிகாசம் நமக்குக்கூறும் தத்துவ சிந்தனைகள் என்னென்ன என்று குருஜியிடம் கேட்டேன்.அதற்கு அவர் தந்த விளக்கங்களை அப்படியே தருகிறேன்.



    குருஜி: காலங்கள் பலப்பலவாக மாறினாலும் தர்மங்கள் என்பது எப்போதுமே மாறுவதில்லை. அன்று உடலில் ஆபரணங்களால் அலங்கரித்து பவனி வந்த ஆட்சியாளர்கள் இன்று கோட்டும், சூட்டும் போட்டுக்கொண்டு பவனி வந்தாலும் அவர்களின் ஆளுமைத் திறனும் அதிகார பலமும் அப்போதும் சரி இப்போதும் சரி ஒரே மாதிரியாக இருக்கிறதல்லவா, அதே போன்றுதான் தர்மங்களும் மாறாமல் ஒரே பாங்கில் நிலைத்து நிற்கிறது. அத்தகைய தர்மங்களுக்கு அடிப்படையாக இருப்பவைகள் நமது புராணங்களும், இதிகாசங்களும் ஆகும். நமது சனாதன தர்மத்தின் கருத்து கருவூலங்களாகவும் பக்தி நெறியை புத்துணர்ச்சி, இளமையோடு தருகின்ற ஊற்றுக் கண்களாகவும் அவைகள் திகழ்கின்றன.

    நமது மதத்தின் பெருமை நம் வேதங்களில் பொதிந்து கிடக்கிறது. ஆனாலும் அதைச் சாதாரண மனிதர்கள் படித்து தெரிந்து கொள்ள முடியாது என்பதை விட புரிந்து கொள்வது சற்று சிரமம் என்றே கூறலாம். அந்த சிரமத்தை நாம் அனுபவிக்காமல் சுலபமாக தர்மத்தை நாம் உணர வழி செய்வதே இதிகாசங்களாகும்.

   குழந்தைக்கு நோய் என்றால் கசப்பான மருந்தை அதற்கு புகட்டித்தான் ஆகவேண்டும். ஆனால் குழந்தை கசப்பை நிச்சயமாக உட்கொள்ளாது. இதற்கு புத்திசாலித்தனமான அன்னை என்ன செய்வாள் இனிப்பு உருண்டைக்கு நடுவே மருந்தை மறைத்துவைத்து குழந்தை சாப்பிடும்படி செய்து விடுவாள்.


     ஒரு நல்ல அன்னையின் இயல்பு நமது ஞானிகளுக்கு இருந்ததினால் சுவையான கதைகளுக்கு நடுவில் நல்ல தத்துவங்களை பதித்து வைத்து மக்களின் மனதிற்குள் புகட்டிவிடுவார்கள். கதை கேட்கின்ற ஆர்வம் என்பது மனிதனின் குழந்தை பருவத்திலிருந்தே அவனோடு கூடவருவதாகும். அந்த ஆர்வத்தால் கேட்கப்படும் கதை வழியாகச் செல்லுகின்ற நல்ல கருத்து அவனது ஆழ்மனதில் நன்றாகப்பதிந்து தர்மத்தை நிலைநாட்டுகிற விதத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வழிவகை ஏற்பட்டு விடுகிறது

கேள்வி
: கதைகளின் வழியாக ஞானிகள் தர்மங்களை மனித மனதிற்குள் புகட்டினார்கள் என்பது அதற்கு நீங்கள் கூறிய தாய், குழந்தை உதாரணம் அழகானது மட்டுமல்ல. அர்த்த புஷ்டி நிறைந்ததுமாகும். ஆனால் என் கேள்வி இது அல்ல. கதைகளின் வழியாக ஞானிகள் சொன்னார்கள் என்றால் ராமாயணம் என்பது கற்பனையான கதையா? கடவுள் என்று வணங்கப்படும் ஸ்ரீ ராமன் கற்பனைக் கதாபாத்திரமா என்ற வினாக்கள் எழுகிறது. இதைத் தங்களுக்கே உரிய நடுநிலைத் தன்மையோடு விளக்கம் தாருங்கள்?



 குருஜி: ராமாயணம் நிஜமாகவே நடந்ததா அல்லது வால்மீகி என்ற இதிகாச ஆசிரியரின் கனவா என்ற இரண்டு வகையான கேள்விகளுக்கும் உறுதியான இறுதியான பதிலை எந்த ஆராய்ச்சியாளனும் இதுவரை தரவில்லை. ராமாயணத்தை உண்மையாகவே நடந்த சம்பவங்களின் பதிவுகள் எனக் கருதுவோர் சில ஆதாரங்களை முன் வைக்கிறார்கள். ராமாயணம் என்பது வெறும் கற்பனைக் கதை என வாதிடுவோர்களும் சில ஆதாரங்களை முன் வைக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் உண்மையென்று காட்டுவதற்கு எந்த ஆதாரம் வைக்கப்படுகிறதோ அதே ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டே கற்பனை என்ற வாதமும் வைக்கப்படுகிறது.

     சிலர் வேறு விதமாக கூறுகிறார்கள். ராமாயணத்தை பொய் என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். ராமன் வாழ்ந்ததாக கூறப்படும் அயோத்தியும் மற்றும் அதில் கூறப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட இதர பகுதிகளும் இன்றும் இருக்கின்றனவே அதை வைத்து பார்க்கும் பொழுது ராமாயணம் நடந்த வரலாறாகத்தான் தெரிகிறது என்கிறார்கள்


      இதை மறுக்கும் ஒரு சாரார் மிக அற்புதமான உதாரணத்தை தருகிறார். இன்றைய நவீன நாவல்களில் கதைக்களமாக பல இடங்கள் காட்டப்படுகின்றன. உதாரணமாக ஒரு கதையின் நாயகன் சென்னையில் இருப்பதாகவும், வடபழனியில் பணி புரிவதாகவும், மெரினா பீச்சில் உலாவுவதாகவும் எழுதப்பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். சென்னை, வடபழனி, மெரினா பீச் ஆகியவைகள் உண்மையாகவே இருக்கிறது என்பதற்காக நாவலின் கதாபாத்திரத்தை நிஜமென்று ஏற்றுக் கொள்ள முடியுமா? அதே போன்றுதான் ராமாயணத்தின் நிலையும் ஆகும்.

   சரி ராமாயணத்தை வரலாறு என்றே வைத்துக் கொள்வோம். அது நடந்ததாகவே இருக்கட்டும். ஆனால் அதில் கூறப்பட்டுள்ள சம்பவங்களில் வரும் மாயாஜாலங்கள் மனிதர்களின் அதீத சக்திகள் வானரம், கரடி ஆகியவைகள் தூது சென்றன. யுத்தம் புரிந்தன பத்து தலையுடைய அரக்கன் இருந்தான். ராமன பனிராண்டாயிரம் வருடங்கள் அரசாட்சி செய்தான் என்பவைகள் எல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது. எனவே கதையைக்கூட உண்மையென்று ஏற்றுக் கொண்டாலும் அதன் சம்பவங்களின் தன்மைகளை அறிவுக் கண்கொண்டு பார்க்கும் பொழுது உண்மையென்று நம்புவதற்கு துளிகூட ஆதாரம் இல்லையே என்றெல்லாம் கருத்துக்களை சொல்கிறார்கள்.

        ராமாயணம் கற்பனையென்று கூறுபவர்களின் இத்தகைய எண்ணங்களையும், கேள்விகளையும் தவறுதலானது என்று யாரும் ஒதுக்கிவிட முடியாது. அதே நேரம் இவர்கள் இப்படி கூறுகிறார்கள் இவர்களின் கூற்றிலும் உண்மை இருக்குமோ என்று நம்பாமலும் ஐயப்பாடு கொள்ள முடியவில்லை. நானும், எனது பாட்டனுக்கு அப்பனும் காலம்காலமாக உண்மையென்று நம்பி வரும் ராமாயணத்தை பொய்யென்று ஏற்றுக்கொள்ள என் மனதிற்கு துணிச்சல் இல்லை. அதே நேரம் இல்லையென்று வாதிடுபவனின் வாயை அடைக்க என் கையில் எந்த ஆதாரமும் இல்லை. இத்தகைய தர்மசங்கடமான நிலையிலேயே பெருவாரியான மக்கள் இருக்கிறார்கள்.

    அறிவியல் பூர்வமான ஆதாரங்களை நம்புகின்ற நாம் எடுத்துக் காட்டினாலும் நம்பாதவர்கள் அதை ஒரு நொடியில் சுலபமாக மறுத்து விடுகிறார்கள். அது மட்டுமல்ல நம் ஆதாரம் உண்மைத் தன்மை உள்ளது அல்ல என்பதைப்பல சமயங்களில் நிரூபித்தும் விடுகிறார்கள்.


      உதாரணமாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா செயற்கை கோள் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில் உள்ளது ராமர் கடலைக்கடந்து இலங்ûக்குச் செல்ல கட்டிய பாலம் இதுதான் என்று கூறினார்கள். ஆகா நல்ல ஆதாரம் நமக்கு கிடைத்து விட்டதே என்று மகிழ்ச்சி அடைந்த சில நாட்களிலேயே நாசா காட்டியது ராமர் பாலம் அல்ல கடலுக்குள் இயற்கையாக ஏற்படும் மணல் திட்டுகள்தான். இதே போன்ற மணல் திட்டுகள் உலக கடல் பரப்பளவு முழுவதிலும் ஐந்து இடங்களில் உள்ளன. எனவே இந்த புகைப்படம் இந்தியாவில் மதப்பிரச்சினைகளை உருவாக்க அமெரிக்கா தீட்டிய சதி திட்டமே ஆகும். என்று ஒரு சாரார் வாதிடுகிறார்கள்.

    இதில் எதை நம்புவது நாசாக் கூறுவது உண்மையென்றால் அது மகிழ்ச்சிதான். ஆனால் நாசா அமெரிக்க நிறுவனமாகும். அமெரிக்கா தனது நவீன தொழில் நுட்பத்தைப்பயன்படுத்தி பல நாடுகளிலும் பிரச்சினைகளை மூட்டிவிட்டு கலவர நெருப்பில் குளிர்காய நினைக்கும் நாடுகளின் தலைமைப்பொறுப்பில் உள்ளதல்லவா. அதனால் இவர்களின் கூற்றை உண்மையென எப்படி நம்புவது என்ற தயக்கமும் நம்மில் பலருக்கு வருவது இயற்கையாகும். வரலாற்று நிகழ்வுகளில் அமெரிக்காவின் கடந்த கால செயல்பாடுகள் எதுவும் நியாயத்தின் பக்கம் இருந்ததற்கான சான்று இல்லையே.


     மேலும் நாசாவின் தகவல்கள் எந்த அளவில் உண்மையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை அலசி ஆராயக்கூடிய பொருள் வளமும் அரசியல்வாதிகளின் மன வளமும் நம்மைப் பொறுத்தவரை சாதகமாக இல்லை. சாதகமாக இல்லையென்பதற்காக நமது நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் கைவிட்டுவிட முடியாது.

       எனவே புறச்சான்றுகளை ஆராய்ச்சி செய்கின்ற விஞ்ஞான மனப்பான்மையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு அகச்சான்றுகளை ராமாயணம் உண்மை என்பதற்கான ஆதாரங்கள் எவையேனும் இருக்கிறதா என்று தேடிப்பார்ப்பதைத்தவிர வேறு வழி நமக்கில்லை.





Contact Form

Name

Email *

Message *