Store
  Store
  Store
  Store
  Store
  Store

எழுந்து நட லட்சியப் பாதையில்...

  து ஒரு குளிர்காலம்.  காலைப் பனியில் பசும் புற்கள் எல்லாம் பனி மகுடம் சூட்டிக் கொள்ளும் பொற்காலம். வயோதிகர்களின் எலும்பையும் உதிர செய்யும் கஷ்ட காலம்.  ஆனால் இளைஞர்களுக்கு உடல் சக்தி அதிகம் விரையமாகாத திருவிழா காலம் எனலாம்.  அதனால் தான் பகவத் கீதையில் கண்ணன் மாதங்களில் நான் மார்கழி என சொன்னான்.

  சில மனிதர்கள் இருக்கிறார்கள் எந்த காலம் வந்தாலும் முகத்தில் சோக சாம்பலையே பூசிக் கொண்டு சதா சர்வ காலமும் உற்சாகமின்றியே திரிவார்கள் உடலில் ஊக்க சக்தி கும்மாளம் போடும் வாலிப பருவத்தில் கேட்டால் நான் நினைத்தது நடக்கவில்லை கேட்டது கிடைக்கவில்லை.  நாம் நடக்கும் பாதையில் ஒவ்வொரு அடியிலும் இரும்பாலான ஆணிகளிளே குத்துகிறது என்பார்கள்.


  அறிவும் அனுபவமும் ஒருங்கே கை கோர்க்கும் நடு வயது பருவத்திலோ என்னை புரிந்து கொள்ளும் மனைவியில்லை என் பேச்சை கேட்கும் பிள்ளையில்லை உதவி ஒத்தாசை செய்ய உற்றார் உறவினருக்கோ மனதில்லை.  காலமெல்லாம் மைதானத்தில் உதைப்படும் பந்தை போல வாழ்க்கையாகி போனது என சலித்து கொள்கிறார்கள்.

 தசைகள் சுருங்கி நரம்புகள் தளர்ந்து எலும்புகளும் இத்துபோன முதிய பருவத்திலோ நல்ல நல்ல வாய்ப்புகள் என்னை வந்தடைந்த போது அப்பாவாலும் மனைவியாலும், பிள்ளையாலும் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது.  எப்படியாவது வெல்ல வேண்டுமென்ற உத்வேகம் என்னை உந்தி தள்ளும் போது வயோதிகம் என் வாசல் கதவை அடைத்து வாழவிடாமல் தடுக்கிறது என புலம்புகிறார்கள்.

     உலகத்தில் நாம் காணுகின்ற முக்கால் பங்கு பேர் இப்படி தான் இறக்குகிறார்கள்.  இவர்கள் எல்லோருமே தங்களது முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தது குடும்பம் என்கிறார்கள் சமூகம் என்கிறார்கள் சிலரோ எனக்கு கடவுள் வகுத்த விதி இவ்வளவு தான் என்கிறார்கள்.  உண்மையில் அவர்கள் சொல்வது நிஜம் தானா?


   நீ வாழ்கின்ற சமூகத்தில் தான் நானும் வாழ்கிறேன்.  என் குடும்ப சூழலும், உன் குடும்ப சூழலும் ஏறக்குறைய ஒன்றாகத் தான் இருக்கிறது.  பிறகு உன்னால் மட்டும் எப்படி எல்லாவற்றிலும் வெல்ல முடிகிறது.  நான் மட்டும் ஏன் தொடர்ந்து தோற்று கொண்டே போகிறேன் அப்படி என்றால் ஒருவனின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது நிஜமாகவே யார்?

  சில வருடங்களுக்கு முன்பு ஒரு இளைஞனை சந்தித்தேன்.  நீ என்ன செய்து கொண்டுயிருக்கிறாய் என்றேன்.  படித்து கொண்டு இருக்கிறேன் என்றான்.  படித்து முடித்த பிறகு என்ன செய்ய போகிறாய் என்றேன்.  வேலை செய்து சம்பாதிக்க வேண்டியது தான் என்றான்.  சரி வேலை கிடைத்தப் பிறகு என்று நான் கேட்டதற்கு எல்லோரையும் போல் திருமணம் செய்து குடும்பம் நடத்த வேண்டியது தான் என்றான்.  சரி உன் விருப்பப்படி அமைந்து விட்டது என்றால் அதற்கு பிறகு என்ன செய்வாய் என்றேன்.  கேட்க கூடாத கேள்வியை கேட்டது போல் என்னை முறைத்தான்.  என்ன பதில் சொல்வது என தெரியாமல் திருதிரு வென விழித்தான்.

  படிப்பு, வேலை குடும்பம் எல்லாம் அமைந்த ஒரு மனிதனை சந்தித்து அடுத்தகட்டமாக உன் வேலை என்ன என்று பழைய கேள்வியையே கேட்டேன்.  ஒன்றுமே இல்லை.  வாழ்க்கையில் பெறவேண்டியது எல்லாம் பெற்றாகி விட்டது.  இனி இதை தக்க வைத்து கொள்ள இந்த நிலைமை கை நழுவி போய்விடாமல் இருக்க விழிப்போடு இருக்க வேண்டியது தான் என்றான்.


  வாழ்க்கை முழுவதும் துன்மை மயம்.  வாழ்க்கை முழுவதுமே போர்களம் என சொல்பவர்கள் அத்தனை பேரும் மேலே நாம் சொன்னது போல் குறிக்கோள் அற்ற முறையில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களே ஆவார்கள்.  கல்யாணம் செய்வதும், பிள்ளை குட்டிகளை பெற்று அதை காப்பாற்ற போராடுவதும் மனித ஜாதிக்கு மட்டுமே விதிக்கப்பட்ட விதியல்ல.  நாயும் நறியும் கூட அந்த சட்டப்படி தான் வாழுகின்றன.

 ஆனந்தமான வாழ்க்கை என்பது சராசரி மனிதனுக்கு கிடைக்காமல் போனது சரியான லட்சியம் இல்லாமல் தான் அல்லது எதை லட்சியமாக கொள்வது என்ற குழப்பத்தில் கிடப்பதினால் தான்.  உறுதியான லட்சியம் கொண்ட மனிதனே அந்த லட்சியத்தை அடைகிறானோ இல்லையோ நிஜமான வாழ்க்கையை வாழ்பவன் அவன் தான்.  தான் விரும்புகின்ற லட்சியத்தை அடையும் வரை தனக்கு நேரிடும் துன்பங்களை இன்பங்களை கண்டு மனம் மயங்கி நிற்கமாட்டான்.

 மணல் வீடு கட்டி விளையாடும் குழந்தை பருவத்தில் போலிஸ்காரனாக ஆவதற்கு ஆசைப்பட்டவன் மீசை அரும்பியவுடன் கலெக்டராக ஆசைப்படலாம்.  இந்த ஆசைகள் அறியாமையில் வந்தது என்றாலும் மன்னிக்க கூடியது தான்.  ஆனால் சில பேர் இருக்கிறார்கள் இவர்கள் சட்டையை மாற்றி கொள்வது போல் அடிக்கடி லட்சியங்களை மாற்றி அவஸ்தைப்பட்டு கொள்கிறார்கள்.


  எனக்கு தெரிந்த ஒருவர் தனது சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தார்.  அவர் அழகாக இருந்ததினால் யாரோ நீ சினிமாவில் நடித்தால் சுலபமாக பேரும் புகழும் பெறலாம் என சொல்லி விட்டார்களாம்.  விவசாயத்தை போட்டு விட்டு சென்னைக்கு கிளம்பிவிட்டார்.  யார் யாரையோ பார்த்து எவர் எவரிடமோ கெஞ்சி கூத்தாடி இரண்டு வருட போராட்டத்திற்கு பிறகு தோற்று போய் ஊர் திரும்பினார்.  இரண்டு வருட சென்னை வாழ்க்கை உடல் வளைந்து வேலை செய்வதற்கு மனம் கொடுக்கவில்லை.  நிலத்தை விற்று வட்டிக்கு விட்டால் நிறைய சம்பாதிக்கலாம் என யாரோ சொன்ன ஆலோசனைக்கு உடன்பட்டு பயிர் கொடுத்த பூமியை பலியிட்டு வந்த பணத்தை தராதரம் பார்க்காமல் கடன் கொடுத்து வசூல் செய்ய முடியாமல் ஓட்டாண்டி ஆகி நடுத்தெருவில் நின்றான்.

 இன்னொருவன் கையில் பணம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக தனக்கு தெரியாத தொழிலை செய்து கெட்டு போனான். லட்சியத்தோடு வாழாதவன் என்பது கூட குற்றமில்லை.  இது தான் லட்சியம், இப்படி தான் வாழ்வேன் என்றில்லாமல் காலை நேரம் ஒன்றும் மாலை நேரம் இன்னொன்றுமாக லட்சியங்களை மாற்றி கொள்வது தான் பெரும் குற்றம்.

 நடைபெற முடியாத, சாத்தியமே இல்லாத ஒரு லட்சியத்தை உடும்பு பிடியாக பிடித்து கொண்டு வீண் பிடிவாதத்தில் வாழ்வது நல்லதா என சிலர் கேட்கலாம்.  அந்த கேள்வியிலும் குற்றமில்லை.  அலங்காநல்லூல் பிறந்து விட்டு அமெரிக்க ஜனாதிபதியாவது தான் எனது லட்சியம் என்றால் அது முட்டாள் தனம்.  தமிழ்நாட்டு முதல்வராவது தான் என் நோக்கம் என்று நடுவீட்டிற்குள் கால் நீட்டி படுத்து கிடப்பது அதைவிட மடத்தனம் நடைமுறைக்கு சாத்தியமான லட்சியங்கள் வேண்டும்.  அது நம் தகுதியால் எட்டிபிடிக்க முடியாத உயரத்தில் கூட இருக்கலாம்.  அந்த லட்சியத்தை பற்றிய அறிவு அதை அடைவதற்கான மார்க்கம் அதை நோக்கிய விடாமுயற்சி இருந்தால் போதும் நிச்சயம் ஒரு நாள் அதை அடைந்தே தீருவோம்.


  ஆற்றங்கரையில் இருக்கும் நாணல் சுழன்றடிக்கும் காற்றுக்கு தலையை சாய்த்து கொடுத்து எழுந்து நிற்பது போல் எத்தனை சோதனைகள் வந்தாலும், எத்தனை வேதனைகள் நேரிட்டாலும் அத்தனைக்கும் வளைந்து கொடுத்து நீண்டு நெளிந்து லட்சியத்தை நோக்கி முன்னேறி செல்வது மட்டும் தான் நிஜமான சந்தோஷம்.

 சந்தோஷமாக இருப்பதற்கு ஒரே வழி, துன்பங்களை வெல்வதற்கு ஒரே வழி தொடர்ச்சியான உழைப்பு மட்டும் தான்.  ஒரு துன்பம் வந்து நம்மை அடித்து துவைத்து காயப்படுத்தினால் கூட அடுத்து செய்ய வேண்டியது என்ன என்று எழுந்து நடப்பவனே லட்சியத்தை அடையும் வீரன்.  ஆனந்தத்தை இன்னது என்று அடையாளம் கண்டு கொண்ட சந்தோஷ ஜீவன்.

 துக்கங்களை முதுகில் சுமக்காமல் கஷ்டங்களை கக்கத்தில் இடுக்காமல் தோல்விகளை திரையாக தொங்கவிடாமல் ஒரு பறவையை போல் சுதந்திரமாகவும் ஒரு கன்று குட்டியை போல் ஆனந்தமாகவும் ஒரு பட்டாம் பூச்சியை போல் ஏகாந்தமாகவும் வாழ்வதற்கு ஒரே வழி லட்சிய உறுதியோடு வாழ்வது தான்.  அதற்கு மனம் சிதறாத உழைப்பு என்பதே ஒரே ராஜபாட்டை.




Contact Form

Name

Email *

Message *