Store
  Store
  Store
  Store
  Store
  Store

இந்திய மூளை வெங்காயமா?

   விலங்கியல், பொறியியல், வேதியியல் என்ற வார்த்தைகளை கேட்டவுடன் இவைகளெல்லாம் அயல்நாட்டார் கண்டுபிடித்த விஞ்ஞானம்.  இந்தியாவிற்கும் அதற்கும் எள் முனை அளவேனும் சம்பந்தமில்லையென்று பலர் கருதுகிறார்கள்.

   இந்தியர்களின் அறிவில் உதித்தது.  கலைகளும் இலக்கியங்களும் தான் பௌதீக வாழ்க்கைக்கு தேவையான எதையும் ஆதிகால இந்தியர்கள் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை.  அதை பற்றிய அறிவு என்பதே அவர்களுக்கு இருந்ததில்லை என்றும் சிலர் பேசுகிறார்கள் இப்படி பேசுவது சரியா?  முறையா?  என்பதை பற்றி கூட அவர்கள் சிந்திப்பது இல்லை.  வெள்ளைகாரர்களையும், அயல் நாட்டினரையும் கால் பிடித்தே பழக்கப்பட்டவர்களால்.  இந்தியர்களின் அறிவு கம்பீரத்தை புரிந்து கொள்ளவும் முடிவதில்லை, தெரிந்து கொள்ளவும் முயலவில்லை.


  சமீபத்தில் என்னை சந்தித்த எழுத்தாளர் ஒருவர் இந்தியா, இந்திய தன்மை என்பது பற்றி பேசுவதெல்லாம் சுத்தமான பழமைவாதம்,  மனித சமுதாயத்தை தூக்கி நிமிர்த்துவதற்கான எந்த முயற்சிகளையும் அக்காலம் முதல் இக்காலம் வரை எந்த இந்தியராலும் நிகழ்த்தப்பட்டதே கிடையாது.  இது தெரியாத உங்களை போன்ற பத்தாம் பசலிகள் இந்தியாவில் இல்லாதது எங்குமே இல்லை என்று பேசி கொண்டு  திரிகிறார்கள்.  அயல்நாட்டார் தந்த நன்கொடை தான் இன்றைய இந்தியாவின் வளர்ச்சி என்றார்.

எங்கள் அருகில் இருந்த வேறொரு நண்பரும் இவர் சொல்வது சரி தான்.  நமது  குழந்தைகளின் பாடப்புத்தகத்தில் கூட இந்தியர்களின் கண்டுபிடிப்பு பற்றி எந்த குறிப்பும் இல்லையே ரசாயண உயிரியல் என்பவைகள் கூட வெளிநாட்டினர் கண்டு பிடித்து சொன்னதாக தானே இருக்கிறது என்று பக்கவாத்தியம் பாடினார்.  அவர்கள் இருவரின் பேச்சும் எனக்கு வேதனையாக இருந்தது.  இவ்வளவு பெரியவர்களாக வளர்ந்த பின்னும் நமது தேசத்தை பற்றிய அடிப்படை ஞானம் கூட இல்லாமல், தெரியாமல், தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்களே என்று ஆதங்கம் ஏற்பட்டது.

   வெறுமனே ஆதங்கம் பட்டால் மட்டும் போதுமா?  ஆதங்கம் படுவதற்கான காரண  காரியங்களை சொல்ல வேண்டாமா?  இந்த நண்பர்கள் ராசாயணம் மற்றும் அதை போன்ற துறைகள் எல்லாம் இந்தியர்களுக்கு தெரியாது என்று சொன்னார்களே அது அப்படி அல்ல.  நம்மவர்களுக்கு அது தெரியும் அதில் அவர்கள் மேதமை பெற்றிருந்தார்கள் என்பதை ஆதாரத்துடன் விளக்க முடியுமா?  என்று சிலர் கேட்கலாம்.  அவர்களுக்கு பதில் கூற வேண்டியது நம் கடமை.

  இந்தியர்கள் ராசாயணத்தை பற்றிய அறிவை எந்த காலத்தில் பெற்றார்கள் என்று எவராலும் கால நிர்ணயம் செய்து கூற முடியாது.  காரணம் அவ்வளவு பழங்காலம் முதலே ராசாயணத்தை பற்றிய முழுமையான அறிவை இந்தியர்கள் பெற்றிருந்தார்கள்.  யஜூர் வேதத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, காரியியம், வெள்ளியீயம் ஆகிய உலோகங்களின் தன்மைகள் விரிவாக விளக்கப்பட்டு இருக்கிறது என்றால் வேதகாலத்திற்கு முன்பே அந்த உலோகங்களை பற்றிய அறிவு இந்தியர்களுக்கு இருந்தது என்பது தானே உண்மையான அர்த்தமாகும்.

 இது மட்டுமல்ல சாந்தோக்கிய உபநிசத்தில் தங்கத்தை வெங்காரத்தினாலும் வெள்ளியை தங்கத்தினாலும் வெள்ளியியத்தை வெள்ளியாலும், காரியியத்தை வெள்ளியாலும் இரும்பை காரியியத்தாலும் கூட்டலாம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.  அதாவது இரும்பு இரும்பாக இருந்தால் அதை ஒன்றும் செய்ய இயலாது.  அதனோடு காரீயத்தை முறைப்படி கலவை செய்தால் நாம் விரும்பும் பொருட்களாக இரும்பை மாற்றலாம் என்ற தொழில் நுட்ப அறிவு மிக தெளிவாகவே அக்கால மக்களுக்கு இருந்தது.  உபநிசத வாக்கியம் இதை உறுதி செய்கிறது.

 ரிக் வேதத்தில் தாவரங்களில் இருந்து பெற கூடிய மருந்துகளை பற்றிய விவரங்களை அறியலாம்.  அதர்வண வேதத்தில் மன நோயை நீக்க கூடிய மருந்துகளை உலோக கலப்பால் செய்யும் விவரத்தையும் காண முடிகிறது.  வேதகாலத்தை விட்டு வரலாற்று காலத்திற்கு வந்து ஆதாரங்களை தேடி பார்த்தால் இந்தியர்களின் தத்துவ ஞான அறிவை மட்டுமல்ல தொழில் நுட்ப அறிவையும் படம் பிடித்து காட்டக்கூடிய கல்வெட்டு ஆதாரங்கள் ஏராளமாக கிடைக்கின்றன.  பழங்கால சுவடிகளும் எண்ணற்ற தகவல்களை தருகின்றன.


  இரும்பை வார்த்தெடுப்பதிலும் அதை கொண்டு பலவிதமான கருவிகளை செய்வதிலும் உலகில் எந்த பகுதி மக்களையும் விட இந்தியர்கள் மிக அதிகமான அறிவை நிபுண தன்மையை பெற்றிருந்தார்கள் என்று இன்று வரை நிருபித்து காட்டும் பல சான்றுகளை கண்ணால் காணமுடிகிறது.

  உதாரணமாக டில்லிக்கு அருகிலுள்ள பத்து டன் கனமுள்ளதும் 24 அடி உயரமுள்ளதுமான சரணாத் சிம்ம துணையும் பூரி ஜெகநாதரின் ஆலயத்திலுள்ள பிரம்மாண்டமான இரும்பு விட்டங்களையும் சோமநாதர் ஆலயத்திலுள்ள மிகப்பெரிய இரும்பு கதவுகளையும், தஞ்சை கோட்டை சுவரிலுள்ள இரும்பு பீரங்கியையும் எடுத்து காட்டலாம்.

  டெல்லி இரும்பு துணை பற்றி பேராசியர் பர்குஜன் என்ற ஆஸ்திரேலிய நாட்டு அறிஞர் அந்த தூணில் செதுக்கப்பட்ட எழுத்துகளில் இருந்து அதை கி.பி. 365 முதல் கி.பி. 400 வரையில் எதாவது இடைப்பட்ட காலத்தில் குப்த அரசர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்.  அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரையில் ஐரோப்பாவிலோ அல்லது உலகில் எந்த மூலையிலோ இவ்வளவு பெரிய தூண் செய்யப்பட்டதாக தெரியவில்லை.  1600 வருடங்களானாலும் மழையில், காற்றில் வெய்யிலில், பனியில் கிடந்தாலும் ஒரு சிறிதளவு கூட துரு ஏறாத அதிசயத்தை காணும் போது பழங்கால இந்தியர்களின் தொழில் நுட்ப அறிவை கண்டு வியக்க மட்டும் தான் முடிகிறது என்கிறார்.


  அதர்வண வேதம் தோன்றி 1000 வருடங்களுக்கு பிறகு ஆயுர்வேதம் என்ற மருத்துவ பிரிவு வேதத்தில் இருந்து பிரிந்து தனியாக வளர ஆரம்பித்தது.  ஆயுர்வேத மருந்துகள் உருவாக ராசாயண கலை பெரும் துணை செய்தது என்று சொல்லலாம்.

 தாவரம் மற்றும் இயற்கை பொருட்களில் இருந்து உருவாக்கப்பட்ட ஆயுர்வேத மருந்துகள் உடனடியாக மனித உடலில் செயலாற்றுவதற்கு ராசாயணம் பெருந்துணை செய்தது.  மேலும் சரக சம்ஹீதை, சுசுருத சம்ஹீதை ஆகிய முதல் மருத்துவ நூல்களில் எந்த மருந்தோடு எத்தகைய ரசாயணம் எவ்வளவு கலக்க வேண்டுமென்று துல்லியமாக கூறப்பட்டுள்ளது.

 சற்றேக்குறைய வேதகால முடிவில் தோன்றிய இவ்விரு நூல்களுக்கு பிறகு வந்த ரசாயணம் பற்றிய நூலில் புகழ் வாய்ந்தது வாக்படர் எழுதிய அஸ்டாங்ஹிருதயம் என்ற நூலாகும்.  இது தவிர ரசாணர்வனம், ரசரத்னாகரம், ரசரத்னா சமுக்கியம், ரஜேந்திர சிந்தாமணி ஆகிய நூல்களும் இந்தியர்களின் ரசாயண அறிவை பற்றிய தெளிவை இன்றும் நமக்கு பறை சான்றிக் கொண்டிருக்கிறது.  இந்த நூல்களில் ஒரு உலோகத்தை இன்னொரு உலோகமாக மாற்றும் வழிவகை கூறப்பட்டுள்ளது.


  இந்தியர்களுக்கு பொதுவாகவே தங்கத்தின் மீது அதிகமாக காதல் உண்டு.  உயிரினினும் மேலான காதலியை தங்கமே என்று அழைக்கும் காவிய வரிகளும் உயிருக்கு உயிரான குடும்ப வாரிசுகளான குழந்தைகளை பொன்மயமான நிறத்தில் தூரிகை கொண்டு வரையும் ஓவிய வரிகளும் இந்தியாவில் மட்டும் தான் காணலாம்.

   நம்மை பார்த்து மற்றவர்கள் தங்கத்தின் மீது மோகம் கொள்ளலாமே தவிர மற்றவர்களை பார்த்து நாம் கற்று கொண்டோம் என்பது இந்த விஷயத்தில் கிடையாது.  தங்கத்தை அழகான ஆபரணங்களாக மட்டுமல்ல நாட்டின் பொருளாதார முதுகெலும்பாகவும் கொள்ள துவங்கியது இந்தியாவில் தான்.

  இதனால் தான் இந்திய ரசவாதிகள் சுலபமாக தங்கம் மக்களுக்கு கிடைக்க இரும்பை பொன்னாக்கும் கலையில் விற்பன்னர்களாக திகழ்ந்தார்கள்.  தகரத்தை தங்கமாக்கும் கலையை அதிகமான நபர்களுக்கு அவர்கள் கற்று கொடுத்திருந்தால் இன்று உங்கள் வீட்டு குளியல் தொட்டியை கூட சிமெண்டால் செய்வதை விட மிக குறைந்த விலைக்கு தங்கத்தில் செய்து விடலாம்.

   தங்கம் செய்வதில் மட்டும் இந்திய ரசவாதிகளின் கவனம் இருந்தது என்று சொல்லி விட முடியாது.  மனிதர்களை தாக்கும் பலவித நோய்களை விரட்டி அடிப்பதற்கும் ரசாயண அறிவை பயன்படுத்தினர்.  உயிர்காக்கும் மருந்து பலவற்றை பாதரசம், செம்பு, இரும்பு போன்ற உலோகங்களை கலந்து செய்தனர்.  மருந்தின் மூலப்பொருட்களை அப்படியே பயன்படுத்தும் போது அதன் வேகம் மட்டு பட்டுத் தான் இருக்கும்.  அதே வேளை உலோகங்களை கரையும் பொருளாக புடம் போட்டு மருந்தில் கலக்கும் போது அதன் வீரியம் பல மடங்கு அதிகக்கிறது.  ஆயுர்வேத மருந்துகளில் சாராயம், கஞ்சா போன்றவைகள் எந்தளவு பயன்படுத்தப்படுகிறதோ அந்தளவு உலோகங்களையும் ரசாவாதிகள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.  இன்றும் அந்த  முறையில் தான் ஆயுர்வேத மருந்துகள் பல உருவாக்கப்படுகிறது.

 இன்னும் ஒரு உண்மையை இந்த இடத்தில் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.  இன்று ஐரோப்பிய நாடுகள் ரசாயண துறையில் பெற்றிருக்கும் வளர்ச்சிகள் அனைத்திற்கும் இந்தியா தான் மூல காரணம் என்றால் அது மிகைப்படுத்தி கூறியதாக இருக்காது. 


  கிரேக்கத்திலிருந்து தேலியஸ், எம்மடாக்கிலிஸ், டிமாக் ரீட்டஸ் முதலிய அறிஞர்கள் இந்தியாவிற்கு வருகை தந்து இந்திய தத்துவ ஞானத்தையும், இந்திய விஞ்ஞான முறைகளையும் கற்று கிரேக்க நாடு முழுவதும் பரப்பியதாக பல கிரேக்க இலக்கியங்கள் அழுத்தி சொல்லுகின்றன.  மேலும் கி.மு. 327 க்கு பிறகு அதாவது அலெக்ஸாண்டரின் இந்திய படையெடுப்பிற்கு பிறகு இந்திய அறிவுத் துறைகள் மேலை நாடு முழுவதும் பரவியது எனலாம்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு பிறகு அரேபியர்களின் எழுச்சி கிரேக்க மற்றும் எகிப்தில் ஏற்பட்ட பிறகு இந்திய ரசாயண அறிவை அரபுக்களும் பயன்படுத்த துவங்கினர்.  ஹரூன் என்ற அரபு கலிபாவின் உத்தரவுப்படி சரக சம்ஹீதை, சுசுருத சம்ஹீதை, பதம், அஸங்கா, நிதான அஸ்டாங்கா போன்ற வடமொழி ரசாயண நூல்கள் அரபு மொழியில் பெயர்த்து எழுதப்பட்டது.  அல்பெருனி என்ற இஸ்லாமிய அறிஞர் இந்த நூல்களை அரபு மொழியில் எழுதியுள்ளார்.

    இவ்வளவு சீரும் சிறப்பும் பெற்ற இந்திய ரசாயண முறை கி.பி. பதினாறாம் நூற்றாண்டிற்கு பிறகு அதாவது போர்ச்சுகீசியர் தங்களது நாடுகளிலுள்ள மருந்துகளை இந்தியாவிற்கு இறக்குமதி செய்த பிறகு நமது ரசாயண அறிவு படிப்படியாக குறைந்து தேய்ந்து மறைந்து விட்டது என்றே சொல்லலாம்.  சுதந்திர இந்தியாவின் அரசுகள் எதுவும் இந்திய சார்புடைய அல்லது பழைய இந்தியாவின் அறிவுத்துறை எதற்கும் ஊக்கம் வழங்காமல் அமெரிக்கா மற்றும் ரஸ்ய நாடுகளை முற்றிலுமாக சார்ந்து விட்டதனால் இந்திய பெருமைகள் எல்லாம் அஸ்தமித்து விட்ட கொடுமை நடந்து வருகிறது.



Contact Form

Name

Email *

Message *