Store
  Store
  Store
  Store
  Store
  Store

கடவுள் இருப்பதற்கு இதோ ஆதாரம்

இந்து மத வரலாற்று தொடர் 10

    னது ஆரம்ப பாடசாலை ஒரு கிறிஸ்துவ பள்ளிக்கூடம்.  அப்போது அங்கு பணியில் இருந்த ஆசியர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள்.  இதனால் பாடங்கள் முதல் வழிபாடு வரையிலும் கிறிஸ்துவ தாக்கமே அதிகமாக இருக்கும்.  அது மட்டுமல்ல.  குழந்தைகள் இடத்திலும் பாகுபாடுகள் வெளிப்படையாக காட்டப்படுவதும் உண்டு.  கிறிஸ்துவ குழந்தைகளுக்கு தனிச்சலுகைகளும், வாய்ப்புகளும் வழங்கப்படும்.  இந்து குழந்தைகள் நன்றாக படிப்பவர்களாக இருந்தால் கூட அவர்களை பல நேரங்களில் ஒரங்கட்ட படுவார்கள்.

    குழந்தைகள் தங்களுக்குள் பழகும்போதும்,  விளையாடும்போதும் கூட கிறிஸ்துவ குழந்தைகளின் மேலாதிக்கம் அதிகமாக இருக்கும்.  இத்தகைய ஒரு சூழலில் படிப்பை ஆரம்பித்த நான் எனக்குள் இயற்கையாலும் அப்போது பதிந்து இருந்த அதிகாரத்திற்கு உட்படக்கூடாது என்ற எண்ணம் மேலோங்கி கிறிஸ்துவ தாக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து அதே நேரம் வேறு வழியில்லாமல் அந்த பாடசாலையிலேயே படிக்க வேண்டிய நிலையிலும் பிள்ளை மனதிற்கு தகுந்த எதிர்புணர்ச்சியை பல நேரங்களில் காட்டி இருக்கிறோம்.  அதனால் சில சங்கடங்களும் எனக்கு அப்போது ஏற்பட்டது உண்டு.


    இந்த மாதிரியான நிலையில் ஒரு கிறிஸ்துவ பிரசங்கியார் ஒருநாள் எங்கள் வகுப்பிற்கு வந்து மத போதனை செய்தார்.  அவர் பேச்சு உலகிலேயே அறிவுடைய மதம் விஞ்ஞான ரீதியிலான மதம்.  கிறிஸ்துவம் மட்டும் தான் மற்ற மதங்கள் எல்லாம் முட்டாள் தனமானவை அர்ப்பத்தனமானவை என்று எங்களுக்கு பாடம் எடுத்தார்.

 இன்னும் ஒருபடி மேலே சென்று இந்துமதத்தில் சிலை வழிபாடும்.  ஆடு கோழி பலி இடுதலும், தீ மிதித்தலும் பெண்களை உயிரோடு எரித்தலும்,  இன்னும் பல மூட பழக்கவழக்கங்கள் மட்டுமே நிறைந்துள்ளதாக கூறினார்.  அவர் கூற்று அந்த வயதிலேயே என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  ஆனாலும் என்னுடைய அப்போதைய வயதும்,  அறிவும் அவருக்கு பதில் சொல்ல கூடிய அளவில் வளர்ச்சியடையவில்லை.

  ஆயினும்,  அவர் கூற்று என் மனதிற்குள் நெறிஞ்சி முள்ளாக உறுத்திக்கொண்டிருந்தது.  இந்த நிலையில் திருமுருக கிருபானந்தவாரியாரின் சொற்பொழிவை இலங்கை வானொலியில் கேட்டேன்.  அவர் சைவ சமயத்தின் சிறப்புகள் பற்றியும்.  அதன் தொன்மைகளை பற்றியும். அதிலுள்ள அறிவுப்பூர்வமான விஷயங்களை பற்றியும் மிக எளிமையான முறையில் விளக்கினார்.  பாலைவனத்தில் தண்ணீருக்கு அலைந்தவனுக்கு இளநீர் கிடைத்தால் எப்படி சந்தோஷபப்படுவானோ அதே போன்று அவர் பேச்சு என் மனதில் பாலை வார்த்தது.


     நான் பிறந்த மதம் மூடத்தனமானது அல்ல.  அதே நேரம் அதுதான் உலகிலேயே முதல் முதலில் தோன்றிய மதம் என்ற பெருமிதம் எனக்குள் துளிர் விட ஆரம்பித்தது. நாளாவட்டத்தில் அந்த பெருமிதம் மதங்களைப் பற்றிய பல விஷயங்களை தேடிப் படிக்கும் ஆர்வத்தை எனக்குள் வளர்த்தது.  அப்படி நான் தேடலில் பெற்ற பல கருத்துக்கள் வியப்பையும்.  மலைப்பையும் எனக்கு தந்தது.

 ஏசுநாதர் பிறப்பதற்கு 10,000 வருடங்களுக்கு முன்பே இந்து மதத்தின் முக்கிய பிரிவான சைவ சமயம் அமெரிக்காவில் இருந்தது என்றும்,  ஒரு காலத்தில் லிங்க வழிபாடுதான் உலகம் முழுமையும் பரவிக்கிடத்தது.  என்று அறியும் போது நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.

  அதன் விவரங்களை எனது நூலான யார் ஞானியில் தெளிவாக கூறியிருப்பதை வாசகர்கள் அறிவார்கள்.  அதனால் முதல் சமயமான சைவ சமயம் இந்து மதத்தின் இதயமாக எப்படி இருக்கிறது என்பதை நாம் அனைவருமே நன்கு உணர்ந்திருக்கிறோம்.  அப்படிப்பட்ட சைவ சமயத்தின் கருத்துக்களை ஒரளவு சிந்தனை செய்தால் நமது மதத்தின் வரலாற்று பின்னனியை நன்றாகவே தெரிந்து கொள்ளலாம். அப்படி தெரிந்து கொண்டால்தான் நம்மை பற்றிய பெருமிதம் நமக்கே வரும்.


    இன்றைய நிலையில் சைவ சித்தாந்தம் தமிழ் பேசும் மக்களிடம் மட்டுமே அதிகமாக வழக்கத்தில் உள்ளது.  காஷ்மீர சைவம் எனப்படும் சைவ பிரிவு இந்தியாவின் வடபகுதியில் நடைமுறையில் இருந்து வருகிறது.  ஆனால் காஷ்மீர சைவத்திற்கும் தென்கோடியில் வழங்கும் சைவத்திற்கும் பல மாறுபாடுகள் உள்ளன.  இதைபோலவே கர்நாடக பகுதியில் வழக்கத்திலிருக்கும் வீர சைவத்திற்கும்,  தமிழ் சைவத்திற்கும் பல வேற்றுமைகள் உண்டு.  எனவே சைவ சித்தாந்தம் என்றால் அது தமிழர்களுக்கே பிரத்யேகமாக உரிய சொத்தாகும்.   இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது.

    தமிழர்களுக்கு சைவ சித்தாந்தம் சொந்தமென்றால் அது தமிழ்நாட்டில் எப்போது தோன்றியது?  ஆதிகாலம் தொட்டே இருக்கிறதா? அல்லது இடையில் வந்ததா?  என்றொரு கேள்வி எழும்பும்,  ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் அங்கிங்கெனாதிபடி எங்கும் பிரகாசமாய் வியாபித்திருந்த சைவம் இடத்திற்கு இடம் ஏற்பட்ட சில மாறுபாடுகளால் வடக்கிலும்,  கன்னட தேசத்திலும் தனி பெயரோடு தனிக் கொள்கையோடு இன்று இருந்தாலும் சைவத்தின் மூலக் கொள்கைகளை சிந்தாமல் சிதறாமல் தமிழகம் மட்டுமே வைத்துள்ளது எனலாம்.


    சைவ சித்தாந்தத்தை தமிழர்களுக்கே உரிய தனிசொத்து என்று சொல்வதில் மிகப் பெரும் சிக்கல் ஒன்று உள்ளது.  அது என்னவென்றால் தமிழர்களின் மதம்மான சைவம் அதன் மூல நூல்கள் தமிழில் இல்லாமல் வடமொழியில் இருப்பதற்கு என்ன காரணம்?   அப்படியென்றால் இது தமிழருக்குறிய மதம் அல்ல என்ற சிக்கலை சிலர் எழுப்புகிறார்கள்.

    சமஸ்கிருதத்தில் உள்ள வேதங்களும், ஆகமங்களும் சைவ சித்தாந்தத்தின் ஆதார நூல்களாகும்.  அதாவது அந்த நூல்களில் தான் இந்த சித்தாந்தத்தின் முழுமையான கருத்துக்கள் காணகிடக்கின்றது.  வேதாகமங்கள் அனைத்தும் வடமொழியிலேயே இயற்றப்பட்டிருக்கிறது.  என்பது நாம் நன்கு அறிந்த சங்கதிதான்.  தமிழரது தனித்தன்மையான தத்துவம் இது என்றால் இது தமிழில் எழுதப்படாமல் வடமொழியில் எழுதப்பட்டதற்கு என்ன காரணம் என்ற இக்கேள்விக்கு பலவகையான பதில்கள் தரப்படுகின்றன.  அந்த பதில்கள் கூட ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக தோற்றம் தருகிறதே தவிர ஒற்றுமையான கருத்துக்களை தரவில்லை.  அப்பதில்களை பார்ப்போம்.

    தத்துவக்கருத்துக்கள் முதல்முதலில் சமஸ்கிருத்திலேயே உருவாக்கப்பட்டன.  அவர்களில் ஒருசாராருடைய கருத்துக்களை தென்பகுதி மக்களான தமிழர்களும்,  எற்றுக் கொண்டனர்.  அதனால் வடமொழியில் இயற்றப்பட்ட ஆகம நூல்கள் சைவ சித்தாந்த பிரமாண நூல்களாயின.  என்பது ஒரு பதில்


  இன்னும் ஒரு விந்தையான பதிலை மறைமலையடிகள் கா.சு.பிள்ளை போன்றோர்கள் தருகிறார்கள்.  ஆதிகாலத்தில் வேதங்களும் ஆகமங்களும் தமிழில் தான் இருந்தன.  ரிக், யஜுர், சாமம் அதர்வனம் போன்ற வேதங்கள் அதே பெயரிலேயே தமிழில் இருந்தது. இவற்றில் ஒன்றாகிய சாம வேதம் ராவணனால் பாடப்பட்டது.  காலப்போக்கில் தமிழ் வேதங்கள் அழிந்துவிட்டன.  வடமொழி வேதங்கள் மட்டுமே நிலைத்து நின்றன.  எனவே அவைகளை தமிழர்கள் வேறு வழியின்றி பிரமாண  நூல்களான கொண்டனர்.  என்பதே மேற்குறிப்பிட்ட அறிஞர்களின் கருத்துக்களாகும்.

    ஏறக்குறைய இதே கருத்துக்களை மேலும் விருத்தி செய்து அதற்கு கண், காது, மூக்கு வைத்து சிலர் புதுமையான ஒரு கருத்தை உலாவவிட்டார்கள்.  வேதங்கள் உபநிஷதங்கள்,  ஆகமங்கள் ஆகியவைகள்,  தமிழில் மட்டுமே ஆதியில் இருந்தது.  பின்னர் அவைகளை வடமொழியில் சிலர் பெயர்தெழுதி மூலமான தமிழ் நூல்களை அழித்து விட்டனர்.  அசல் மறைந்து விட்டதனால் வடமொழி நகல்கள் மட்டுமே இன்று இருக்கிறது.  என்றும் சொல்கிறார்கள்.

    சற்று நடுநிலைமை உடையவர்கள் வேறு ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள்.  தமிழர்களின் சொந்தக்கருத்துகளான வேதங்கள் ஆகமங்கள் ஆகியவை பரத வருஷம்.  என்று அழைக்கப்படும் இந்திய துணைகண்டம் முழுவதுமுள்ள மக்கள் அறிந்து கொள்வதற்காக வடமொழியில் தமிழ்ச்சான்றோர்களால் இயற்றப்பட்டது.  என்றும் கூறுகிறார்கள்.  இவைகளையெல்லாம் பார்க்கும்போது நமக்கு குழப்பம் தான் மிஞ்சும்.  ஆகவே இக்கருத்துக்களை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு,  வேறொரு முடிவிற்கு நாம் வரலாம்.


    சமஸ்கிருதம் என்பது அன்னியமொழி அதற்கும் தமிழருக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.  அது யாரோ ஒரு குறிப்பிட்ட கூட்டத்தாருடைய பாஷை அந்த இனத்தினர் எல்லாவிதத்திலும், தமிழருக்கு முற்றிலும் மாறு பட்டவர்கள் என கருதினால்தானே வடமொழியில் எழுதப்பட்டது ஏன்?  தென்மொழியில் எழுத படாதது ஏன் என்றெல்லாம் கருத்துக்கள் உருவாகும்.  சமஸ்கிருதம் என்பது தனி ஒரு இனத்திற்கு சொந்தமானது அல்ல.  அது பாரத தேசம் முழுமைக்கும் பொதுவான சொத்து.  தமிழர்களும், பாரத தேசத்து மக்கள் தான் மற்றைய இந்திய மக்களுக்கு சமஸ்கிருதத்தில் எவ்வளவு உரிமை உண்டோ அதே உரிமை தமிழர்களுக்கும் உணடு.  எனவே வடமொழி என்பதும் தமிழர்களது மொழிதான்.எனவே தான் அந்த மொழியில் ஆகம நூல்கள் எழுதப்பட்டிருக்கிறது என்ற சிந்தனை வருமானால் எந்த சிக்கலும் எப்போதுமே வராது.  வருங்கால தலைமுறையும் நம்மைப்போல் வேண்டாத மொழிச்சண்டையில் ஈடுபடாமல் அமைதியாக வாழ்வார்கள்.

    வேதங்கள்.  ஆகமங்கள் என்ற வார்த்தைகளை நாம் பலமுறை பயன்படுத்துகிறோம்.  இதில் வேதம் என்ற வார்த்தைக்கு முழுமையான அறிவு என்ற பொருள் உள்ளது நம்மில் பலருக்கு தெரிந்திருக்கலாம்.  ஆனால் ஆகமங்கள் என்ற வார்த்தையின் உண்மைப்பொருள் நிறையபேருக்கு தெரியவில்லை.  என்பது உண்மையாகும்.  எனவே ஆகமம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை புரிந்துகொண்டு மேலே சென்றால் நமக்கு பலவிதத்திலும் நன்மை உண்டு. 


  நேரிடையாக ஆகமம் என்ற வார்த்தை வடமொழி இலக்கணப்படி ஒன்றிலிருந்து வந்தது என்ற பொருளை சுட்டும்.  இதன் கருத்தாக்கம் என்னவென்றால் ஒரே பரம்பொருளான சிவபெருமானிடம் இருந்து வந்தவைகள் ஆகமங்கள் என்பதாகும். இது சரியான முறையான கருத்துத்தான் என்றாலும் கூட தத்துவ நோக்கில் இந்த வார்த்தைக்கு வேறொரு பொருள் தரப்படுகிறது.   ஆ என்பது பாசத்தையும், கா என்பது பசுவையும் அதாவது ஜீவன்களையும்,  மா என்பது பதி அல்லது இறைவனையும் குறிப்பதாகும். என்றும் சொல்லப்படுகிறது.  தத்துவ நோக்கில் பார்த்தாலும் பக்தி நோக்கில் பார்த்தாலும்.  மனிதனை இறைவனோடு சம்மந்தப் படுத்துவதே ஆகமங்கள் என்று துணிந்து கூறலாம்.

    பொதுவாக ஆகமங்கள் 28 வகை என்று கூறுகிறார்கள்.  இதில் 10 நேரிடையாக இறைவன் சொன்னது என்றும்,  மீதமுள்ள 18 யோகிகள் உருவாக்கியது என்றும் வழி வழியாக நம்பப்படுகிறது.  ஒவ்வொரு ஆகமமும்,  ஞான காண்டம் யோக காண்டம் கிரியா காண்டம்.  சரியா காண்டம் என்று நான்கு பகுதிகளை தனக்குள் கொண்டுள்ளது.  இதில் ஞான காண்டத்திலேயே மனிதனின் ஆன்மீக கேள்விகளுக்கு சரியான பதில்கள் பல தரப்பட்டுள்ளன.  வேதங்களை போலவே ஆகமங்களும்,  காலவரையரை செய்ய முடியாத அளவிற்கு வயதில் மூத்தவைகளாகும்.


     இனி சைவ சித்தாந்த ஞான பொக்கிஷமான ஆகமங்களின் கடவுளை பற்றி கூறப்பட்டிருக்கும் கருத்துக்களை எளிமையான முறையில் சிந்தித்துப் பார்த்தபோம்.  கடவுள் என்ற தனித் தமிழ் சொல்லிலேயே மிக பெரும் அறிவுப் பூர்வமான உண்மை அடங்கியுள்ளது.  கடவுள் என்ற தனிச் சொல் புறநானூறு தொல்காப்பியம் போன்ற மிக பழமையான தமிழ் நூல்களில் கையாளப்பட்டிருக்கிறது.  கடவுள் என்ற ஒரே சொல்லுக்கு சிவபெருமானின் திரிசூலம் போல 3 கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன.  கடவுதல் என்றால் இயக்குதல் எனவே கடவுள் என்பது உலகத்தை இயக்குபவரை குறிப்பது முதலாவது பொருள்.  இரண்டாவது தாக கடவுள் என்பது உள்ளத்தை மனதை கடந்தவர் எனப் பொருள் கொள்ளலாம். மூன்றாவதாக கடவுள் உலகத்தை கடந்தவர்.  அதே நேரம் உலகின் உள்ளும் உள்ளவர்.  ஒவ்வொரு உயிர் உள்ளும் நிறைந்து நிலைத்து நின்று அவற்றை கடந்தும் இருப்பவன் என்றும் பொருள் கொள்ளலாம். இவைகள் சைவ சித்தாந்தம் கடவுளுக்கு சொல்லும் அறிவியல் பூர்வமான உண்மைகளாகும்.  கடவுள் என்ற வார்த்தையின் ஆராய்ச்சியை இம்மட்டோடு நிறுத்தி கடவுளை பற்றி சைவ சித்தாந்த கருத்துக்கள் இன்னும் என்னென்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.

    இந்த விஷயத்தில் சைவம் இரண்டு பிரிவுகளான கருத்துக்களை கொண்டுள்ளது.  ஒன்று கடவுள் இருக்கிறார் என்பதை நிருபிப்பது மற்றொன்று கடவுளுக்குரிய குணங்களையும், இயல்புகளையும் விவரிப்பது.  கடவுள் உண்டு என்பதை நிருபிக்கும் முதல் பிரிவுக்குள் மேலும் இரு பிரிவுகள் உண்டு.  அவை சுபக்கம்.  பரவக்கம் என்ற வார்த்தைகளால் சைவ சித்தாந்திகள் குறிப்பிடுகிறார்கள்.  கடவுள் உண்டு என்பதை காரணங்கள் காட்டி நிருபிப்பது சுபக்கம் ஆகும்.  கடவுளை மறுப்பவர்களின் வாதங்களை பொருந்தாது என்று புறம் தள்ளுவது பரபக்கம் ஆகும்.


     ஒரு பொருள் இருக்கிறது என்பதை நிருபித்துக்காட்ட மூன்று வழிகள் உண்டு.  அவைகளை பிரமாணம்,  பிரதியட்சம், அனுமானம் ஆப்தவாக்கியம் என்று சொல்லலாம்.

    சைவ சித்தாந்தத்தில் ஆப்த வாக்கியம் என்பதற்கு  மிக முக்கிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  தனது உழைப்பால் கடவுளை அறிந்த மகான்களின் அனுபவ வாக்கியமே ஆப்த வாக்கியம் எனப்படும்.  இதையே சுருதி என்றும்,  சொல்லலாம்,  வேதம் ஆகமம் எல்லாமே சுருதி என்ற வட்டத்திற்குள் வந்துவிடும் என்பதாலும் தவத்தால் அனுபவத்தை நேரிடையாக பெற்ற ஞானிகளின் அமுத மொழிகளும்,  அவைகளுக்கு இணையானதே என்று சைவ சித்தாந்தம் கூறுவதில் மிக ஆழ்ந்த பொருள் இருக்கிறது.

    வேதங்கள் என்பது எந்த ஒரு தனி மனிதனாலும் உருவாக்கப்பட்டது அல்ல.  உடலை சுருக்கி உயிரை பெருக்கி ஞானக்கண்களால் தரிசிக்கப்பட்ட கருத்துக்களை உள்ளூணர்வால் வெளிப்படுத்திய பொக்கிஷங்களே வேதங்கள் ஆகும்.  அப்படி பெற்ற கருத்துக் கருவூலங்கள் வேதங்களின் சேர்க்கப்படாமல் வெளியிலேயும்,  உலா வரலாம். காலத்தால் மிகவும் பின்தங்கியும்,  அது வெளிப்பட்டு இருக்கலாம்.  எனவே காலங்கள் கடந்து நிற்கும் அனுபவ மொழிகளை ஏற்றுக்கொண்டு கடவுளை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நம்ப வேண்டும். அப்படி நம்புவதும் நம்பாமல் இருப்பதும் தனிப்பட்ட மனிதனின் சுதந்திரம் என்றாலும் கூட முன்னோர் வாக்கை புறம் தள்ளுவது அறிவுடைமை ஆகாது என்று சைவ சித்தாந்தம் நம்புகிறது.


    மேலும் வேதங்களிலும் ஆகமங்களிலும் கடவுளைப்பற்றி கூறப்பட்ட விஷயங்களை நிருபித்து காட்டுவதற்கு ஞானிகள் நிச்சயம் முயன்றிருப்பார்கள்.  அம்முயற்சிகள் என்னவென்று சிந்திப்போம்.

    கடவுள் இருப்பது உண்மை என்பதை உலகத்தை வைத்து சைவ சித்தாந்திகள் நிருபிக்க முயன்றிருக்கிறார்கள்.  பானை ஒன்று இருக்கிறது என்றால் அதை செய்தவனும் இருக்க வேண்டும் அதே போன்று உலகம் இருக்கிறது. என்றால் அதை படைத்தவனும் இருந்தே ஆக வேண்டும். ஒரு பானை எப்படி தன்னைத்தானே உருவாக்கி கொள்ள முடியாதோ அதேபோலவே உலகமும்,  தன்னைத்தானே படைத்துக் கொள்ள முடியாது.

 உலகம் தன்னைத்தான் உருவாக்கி கொள்ளவில்லை என்றாலும்,  அது என்றோ ஒருநாள் உருவானது அல்ல என்றுமே காலகாலமாக அது இருந்து வருகிறது.  என்றும் வாதிக்கமுடியாது.  காரணம் என்னவென்றால் உலகம் என்பது பல பகுதிகளால் ஆனது.  பல கூறுகள் உடைய எந்த பொருளும்.  தானாகவே சேர்ந்து கொள்ள முடியாது.  அப்படி சேரும் என்பதற்கே எந்த அனுபவ சான்றுகளும் இல்லை.  பல பகுதிகளாக கிடப்பதை ஒன்று சேர்க்க ஒரு ஆள் வேண்டும்.  உதாரணமாக ஒரு குடையில் துணி, இரும்பு, மரம், என்று பகுதிகள் பல உண்டு,  இவற்றை ஒருவன் தனது அறிவை பயன்படுத்தி சேர்த்தால் தான் அது குடையாகும்.  அதே போன்றுதான் உலகமும் பலபல பகுதிகளாக கிடக்கிறது.  அதை ஒன்றுபடுத்தி உருவாக்க ஒரு சக்திவேண்டும். அந்த சக்திதான்  இறைவனாகும்.  என்று சைவ சித்தாந்திகள் இறைவனின் இருப்பை நிலைநிறுத்த முயன்றிருக்கிறார்கள்.


    உலகம் எப்போதுமே இருந்து வரும் பொருள் என்று கொண்டால் அதற்கு அழிவு என்பது இல்லை என்பதாக கருத வேண்டும்.  ஆனால் நாம் அப்படி அழியாத் தன்மையோடு உலகை பார்க்கவில்லை.  .பூமியில் உள்ள ஒவ்வொரு துளியும், அணுவும் ஒவ்வொரு விநாடியில் மாறிக்கொண்டேயும் அழிந்துகொண்டேயும் புதிதாக உருவாகிகொண்டேயும், வருகிறது. அழிந்தும் தோன்றியும் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும் ஒரு பொருள் என்றும் நிலைத்திருந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.  எனவும் சைவ சித்தாந்திகள் கருதினர்.

    அதே நேரம் வேறொரு உதாரணத்தையும்,  அவர்கள் காட்டி கடவுளை நிருபிக்க முயன்றார்கள்.  ஆத்மாக்கள் பிறப்பதும். சுக துக்கங்களை அனுபவிப்பதும் அவரவரின் கர்மாவே ஆகும்.  என்பதை எல்லா இந்துக்களும் ஒப்புக்கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல கடவுளே இல்லை என்று வாதிடும் ஜைனர்களும்,  பவுத்தர்களும் கர்மாவை உண்மையென்றெ நம்புகிறார்கள்.  அப்படிப்பட்ட கர்மா ஆத்மாவை தானக தேடி அடைய முடியாது.  கர்மாவிற்கு தானாக முடிவு எடுக்கும் அறிவு உண்டு என்றால் பலவிதமான சிக்கல்கள் மிகுந்ததாகி குழப்பங்களே மிஞ்சும்,  அதனால் இந்த ஆத்மாவின் கர்மாவை இதனோடு இணைக்கவேண்டும். என்று முடிவெடுப்பதற்கு ஒருவன் தேவை.  அவனே இறைவன்.  ஆகவே உலகை படைப்பதற்கும், கர்மாவை நெறிப்படுத்துவதற்கும் தானாக எதுவும் ஆகாது.  அதற்கு ஆண்டவன் என்பவன் நிச்சயம் தேவை என்று சைவ சித்தாந்தம் வாதிடுகிறது.


    ஒரு பானையை பார்த்தவுடன் அதை செய்தவன் கண்முன்னே இல்லாவிடட்டாலும் அப்படி ஒருவன் இருக்கவேண்டும்  என்று நம்மனம் நம்பிக்கை கொள்கிறது.  இதே போலவே காட்சிக்கு புலனாகாமல் கடவுள் இருந்தாலும் அவரை இருப்பவர் என்று ஏற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று சைவ சித்தாந்திகள் கூற்றின் அடிப்படையாகும். இதற்கு மாறுபாடான கருத்துக்களும், இருக்கிறது.  அவற்றையும் தெரிந்து கொண்டால்தான் நமது ஞானம் என்பது பூர்த்தியானதாக இருக்கும்.

    உலகம் என்பது உண்மையாக இருக்கிறது என்றால்தான் அந்த உலகை படைத்தவனும்,  இருக்க வேண்டும் என்று நம்பவேண்டியது இருக்கிறது.  உலகம் என்பதே இல்லையென்றால் அதை படைத்தவன் தேவையே இல்லையல்லவா?

    ஆனால் உலகம் இருக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம்   இருக்கிறது.  நமது கண்களுக்கே தெரிகிறது என்பது மட்டும்தானே ஆதாரம்.  ஆனால் நமது கண்கள் காட்டும் காட்சிகள் அனைத்துமே உண்மையானதுதானா?  சத்தியமானதுதானா?  என்று பார்த்தால் பல நேரங்களில் நமது கண்கள் இருப்பதை இல்லாமலும்,  இல்லாததை இருப்பதாகவும் காட்டி பொய்யான பல சித்திரங்களை உருவாக்குகிறது. இப்படி புலன்கள் உருவாக்கும் பொய்சித்திரங்களை நம்பி பலமுறை நாம் ஏமாந்து இருக்கிறறோம்.  இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத புலன் உலகம் இருக்கிறது என்று காட்டுவதை எப்படி நம்ப இயலும்?


    ஆகவே புலக்காட்சி, சந்தேகம் எனும்போது உலகத்தின் இருப்பும் சந்தேகமாகி விடுகிறது.  சந்தேகமான ஒரு பொருளை உருவாக்க கடவுள் எதற்கு? எனவே கடவுள் என்பது தேவையில்லாத பொருள்,  என சிலர் கருதுகிறார்கள்.  இக்கருத்தை மேலோட்டாமாக பார்க்கும் போது அதில் உண்மை இருப்பது போல் நமக்கு தோன்றும்.  ஆனால் நமது அறிவை உள்முகமாக திருப்பி சிந்தனை செய்தால் எது உண்மை என்பது நன்கு புலப்படும்.

    புலன்கள் எல்லா நேரமும் உள்ளதை உள்ளபடி காட்டவில்லை என்பது உண்மைதான்.  என்பதற்காக உலகமே பொய் என்று வாதிடுவது அறிவுடைமை ஆகாது.  உலகத்தை மாயை என்று கூறும் சங்கர வேதாந்திகள் கூட அது ஆகாயத்தாமரை போலவோ மலடி மகன் போலவோ முற்றிலுமாக இல்லாதது அல்ல என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.  புலன்கள் நம்பகத்தன்மை அற்றது என வாதிடும் இம்மானுவேல் காண்ட் போன்ற மேலைநாட்டு தத்துவஞானிகள் கூட அவைகள் எதையோ காட்டுகின்றன என்பதை மறுக்கவில்லை. எனவே உலகத்தை ஒரு மாயா தோற்றம் என்று வைத்துக்கொண்டால் கூட அந்த தோற்றத்தை தோற்றுவிக்க ஒருவன் வேண்டும்.  ஆகையால் எந்த வகையில் பார்த்தாலும்.  இறைவன் ஒருவன் இருப்பது தெளிவாகும்.


    சரி உலகம் உண்மையென்றும், கடவுள் இருக்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம்.  அப்படி வைத்துக்கொண்டால் கடவுள் ஏன் இந்த உலகத்தை படைத்தார்.  அதனால் அவருக்கு என்ன லாபம்?  என்ற கேள்வி அடுத்ததாக எழும்புவது இயற்கை.  இதற்கு சைவ சித்தாந்திகள் நல்ல பதிலை தருகிறார்கள். உலகம் படைக்கப்பட்டு ஒரு காலகட்டத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிடுகிறது.  இதேபோன்று ஆத்மாகள் படைக்கப்பட்டு,  முற்றிலுமாக இல்லாத வகையில் அழிக்கப்படுவது இல்லை.  காலகாலமாக இறைவனைப்போல் நித்தியமாக இருக்கின்ற ஆத்மாக்கள் ஜனன மரணம் எடுத்து தனது நிலையை சுத்திகரித்து இறைவனோடு கலப்பதற்கு உலகம் என்பது நிச்சயம் தேவை.  எனவே உயிர்கள் பிறவி பெருங்கடலை கடப்பதற்கு கடவுள் உலகத்தை படைத்துள்ளார்.  என்பது சித்தாந்திகளின் அறிவார்ந்த பதில்களாகும்.

உயிர்களை கரையேற்றுவதற்கு இறைவன் உலகத்தை படைத்திருக்கிறான் என்றால் அப்படிப்பட்ட இறைவனின் இயல்புகள் என்னவாக இருக்கும் என்பது நமக்குள் எழும் அடுத்த கேள்வியாகும்.  அதற்கு சைவம் இறைவன் என்பவன் சத்சித் ஆனந்தம் என்ற மூன்று இயல்பாக இருக்கிறான் என்ற பதிலை தருகிறது.  சத் என்றால் உண்மையான பொருள் என்று அர்த்தம் சித் என்றால் தானே இயங்குதல் என்பது பொருளாகும்.  ஆனந்தம் என்றால் உண்மையே வடிவாய் தானே இயங்கி தன்னையும்,  மற்ற அனைத்தையும்,  இன்பமாக வைத்துக் கொள்ளுதல் என்பது பொருளாகும்.


ஆகவே இறைவன் இந்த மூன்று இயல்பாக இருக்கிறான் என்பது சித்தாந்தம் கூறுவதை அனுபவ அறிவு நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும்.

சைவ சித்தாந்தத்தின் கடவுள் கருத்தை இதுவரை சுருக்கமாக பார்த்தோம்.  இந்து மதத்தை தவிர உலகில் உள்ள வேறு எந்த மதத்திலும் இத்தகைய வினாக்கள் எழுப்பி அறிவு பூர்வமான பதில்களை கொடுக்கும் வழக்கமில்லை.  ஏன்? சில மதங்களில் கேள்விகள் கேட்பதற்கே அனுமதி இல்லை. அறிவுக்கு பொருந்திவரக்கூடிய சகல விஷயங்களையும்
 இந்து மதம் தனக்குள் கொண்டிருந்தாலும்.  அது தன்னை விளம்பர படுத்திக் கொள்ள விரும்வில்லை என்பதனால் அரைகுறையாக மற்ற மதங்கள் தாங்களே அறிவின் சிகரம் என்று குதியாட்டம் போடுகிறது.  நாம் நம்மை அலங்காரப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்றாலும் கூட சுத்தமாக இருப்பது தவறு என்று யாரும் சொல்லிவிட முடியாது.  மற்றவர்கள் நம்மை முட்டாள்கள் என்றே பட்டம் கட்டாமல் இருப்பதற்காகவது நமது அறிவு விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும்.

    சைவ சமயத்தில் இன்னும் பல பிரிவுகள் இருக்கிறதென்று ஆரம்பத்திலேயே பார்த்தோம். அந்த பிரிவுகளின் அனைத்து சிந்தனைகளையும் வரும் அத்தியாயங்களில் ஆழமாக சிந்திப்போம்.  அப்படி செய்தால்தான் இந்து மதத்தின் உண்மை வடிவை முழுமையாக தரிசிக்கலாம்.




Contact Form

Name

Email *

Message *