Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆத்திகர்கள் நாத்திகர்களை வெறுத்திருந்தால்...?

  விழுப்புரத்தில் புகழ் பெற்ற ஒரு மருத்துவமனையில். ஸ்கேன் எடுப்பதற்காக சென்றிருந்தேன்.  அங்கிருந்த ஸ்கேன் ஆப்ரேட்டர் நெற்றியில் நாமமும், காவி உடையில் இருந்த என்னை ஒரு புழுவை பார்ப்பது போல் பார்த்தார்.

 ஒரு வேளை அவர் பார்வையே இப்படி தானோ என்று நான் நினைத்தேன்.  என்னை தேவையில்லாமல் இப்படி படு, அப்படி படு என தொல்லை படுத்தினார்.

 அப்போது கூட அவர் என்னை விரோதியாக பார்க்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

  ஸ்கேன் வேலைகள் எல்லாம் முடிந்தவுடன் இதற்கான பணத்தை யாரிடம் மோசடி செய்து பெற்றிர்கள் என என்னை கேட்டார். 

அவருக்கும் எனக்கும் எந்த விதமான முன் அறிமுகமும் இல்லை.  விரோதமும் இல்லை.  நான் பிறந்த நாளில் இருந்து இதுவரை அன்று தான் அவரை முதல் முறையாக பார்த்திருக்கிறேன். 


எதற்காக இப்படி கேட்கிறீர்கள் என அவரிடம் நான் திருப்பி கேட்கவில்லை.  அந்த கேள்வி அவரிடமிருந்து வந்தவுடன் அவரின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

நீங்கள் வேலை செய்து மாதாமாதம் வாங்குகின்ற சம்பளம் மோசடியாகப் பெறப்பட்டதென்றால் நான் கட்டிய கட்டணமும் மோசடியானதுதான் என்றேன்

எனது பதில் அவரால் உடனே புரிந்து கொள்ளப்பட்டதோ என்னவோ தெரியவில்லை.  மவுனமாகி விட்டார். 

அவர் மேல் மட்டும் எனக்கு கோபம் வந்திருந்தால் நிர்வாகத்திடம் சொல்லி வீட்டுக்கு அனுப்பியிருக்கலாம்.  ஆனால் அப்படி செய்தால் அவருக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

நாத்திகவாதிகளில் பலர் ஆத்திகமம் என்றாலே மோசடி மூடத்தனம் என்று கருதுகிறார்கள் 


 ஆனால் நாத்திகவாதிகளில் பலரும் கூட மற்றவர்களை ஏய்த்து பிழைப்பவர்களாகவும் சிந்தனையே இல்லாத மூடர்களாகவும் இருக்கிறார்கள் நல்லது கெட்டது எல்லா இடத்திலேயும் இருக்கிறது

  அவர் என்னை ஒரு சந்நியாசி என்பதினால் மட்டும் வெறுக்கவில்லை.  ஆஸ்திர்கர்களையே அவருக்கு பிடிக்காது.  அவர் மிக தீவிரமான பெரியார் விசுவாசி என்பதை பின்னர் தெரிந்து கொண்டேன்.

  பெரியார் தனது வாழ்நாளில் ஒரு முறை கூட சக மனிதரை அவமதித்தது கிடையாது.  எதிர் கருத்தை சொல்லுவதென்றாலும் கூட தயவு செய்து என்னை மன்னிக்க வேண்டும் என்று சொல்லி தான் பேசத் துவங்குவார் பெரியார்.

  நாத்திகவாதிகள் கடவுள் பெயரால் நடக்கும் மூடத்தனங்களை மோசடிகளை எதிர்த்தார்களே தவிர கடவுள் நம்பிக்கையுடையவர்களை எதிர்க்கவில்லை. 


 கடவுள் எதிர்ப்பு என்ற ஒரு கொள்கையில் மட்டும் பெரியாருக்கும் நமக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாமே தவிர அவரின் மற்ற சீர்திருத்தக் கருத்துக்களை மனசாட்சியுடைய எவனும் எதிர்க்கமாட்டான்.

 பகுத்தறிவு வாதம் என்பதெல்லாம் இன்று நேற்று ஏற்ப்பட்டது அல்ல.  வேத காலத்திலேயே துவங்கி விட்ட கருத்து மோதல்களாகும்.

  சார்வாகர் என்பவர் சொல்லியிருக்கும் கடவுள் எதிர்ப்பு கருத்துக்களை விட காட்டமான கருத்துகளை இன்று வரை யாரும் சொன்னது இல்லை.

  சுடு நெருப்புக்கு சமமான சார்வார்க தத்துவம் வேதங்களில் அப்படியே பதிவாகியுள்ளது.

 நாம் கடவுள் என்று வழிபடும் ஸ்ரீராமன் இடத்திலேயே ஜபாலி என்பவர் நாத்திக கருத்துக்களை நேருக்கு நேராக பேசிய சான்று ராமாயணத்தில் உள்ளது.


   ஆத்திகர்கள் நாத்திகத்தை வெறுத்துயிருந்தால் இவைகளை பதிவு செய்யாமலே விட்டுயிருக்கலாம்.

  மாற்று கருத்து உடையவர்களை ஏற்று கொள்ளாமல் இருப்பது தவறல்ல.  வெறுத்து ஒதுக்குவது மாபெரும் பாவமாகும்.

 எனக்கு ஒரு விஷயத்தை நம்புவதற்கு உரிமையிருப்பது போல நம்பாமல் இருப்பதற்கு இன்னொருவருக்கு உரிமையிருக்கிறது. 

ஆனால் நவீன நாத்திகவாதிகள் இங்கிதம் இல்லாமலும் பிடிவாதக்காரர்களாகவும் மற்றவர்களின் மனதை புண்படுத்துவதில் சந்தோஷம் காண்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

 பல பொது நிகழ்வுகளில் அவர்களின் இத்தகைய போக்கை நேருக்கு நேராகவே அனுபவித்துயிருக்கிறேன்.

 கண்ணுக்கு தெரியாத கடவுளை விமர்சிக்கலாம்.  அதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை.

  காரணம் கடவுளை பொறுத்தவரை இகழ்வதும் புகழ்வதும் ஒரே சத்தம் தான்.  அவர் கோபதாபங்களுக்கு அப்பாற்பட்டவர்.

 ஆனால் கண்ணுக்கு தெரியும் சக மனிதனை அவன் ஆத்திகனாக இருந்தாலும் நாத்திகனாக இருந்தாலும் வெறுப்பது என்பது மனிதாபிமானம் அற்ற செயலாகும்.  





 

Contact Form

Name

Email *

Message *