Store
  Store
  Store
  Store
  Store
  Store

கோட்டையில் கொக்கரிக்கும் கோட்டான்...!


   ரு ஊரில் ஒரே ஒரு மாடி வீடு அந்த வீட்டு எதிரில் பெரிய புளியமரம் அந்த புளியமர அடியில் ஒரு பாட்டி ரொம்ப நாட்களாக ஆப்பம் சுட்டு விற்று கொண்டிருந்தாளாம் ஒரு நாள் அந்த மாடி வீட்டுக்காரருக்கு மயக்கமும் தலை கிறுகிருப்பும் வந்ததாம் பயந்து போய் டாக்டரிடம் ஓடினாராம் தண்ணி அடிச்சால் தான் மயக்கம் வரும் நான் டாஸ்மார்க் பக்கமே போறவன் இல்லே எனக்கு மயக்கமா வருது காரணம் என்னென்னு டாக்டரை கேட்டாராம்

தூங்குகிற நேரத்தில் கல்லாபெட்டிக்குள் காசு வருகிறது என்றால் கண்ணை மூடி கொள்ள டாக்டர் என்ன கெளதம புத்தரா கிடைத்த மனுசனை புரட்டி பார்த்து சோதனையும் செய்து உனக்கு சக்கரை வியாதி வந்தாச்சி இனி நீ சீனி போட்டு காப்பி குடிக்க கூடாது பச்சரிசி பக்கமே தலைவைத்து படுக்க கூடாது என்று சொல்லி அனுப்பி வச்சாராம்

வீட்டுக்கு வந்த சோம்பேறி மனுஷன் கட்டிலில் படுத்துக்கொண்டு யோசனை செய்தானாம் சீனி காப்பியும் பச்சரிசி சாதமும் சக்கரை நோய்க்கு காரணமா? நான் சீனி போட்டு காப்பி குடிக்கிறேன் பச்சரிசி சாதம் சாப்பிடவில்லையே புழுங்கல் அரிசியில் தானே பெண்டாட்டி சாதம் வடிக்கிறாள் ! ஒ ...! எதிர்த்த மரத்தடியில் ஆப்பம் சுடுகிறாளே பாட்டி அவள் சுடுகின்ற ஆப்பம் பச்சரிசியல் செய்தது அன்றோ ! அதை நான் தினசரி பார்ப்பதனால் சர்க்கரை நோய் வந்துவிட்டது என்று அரைகுறை தூக்கத்தில் உண்மையை கண்டுபிடித்து அலறி அடித்து எழுந்து வீட்டுக்கு வெளியே ஓடி வந்தானாம்


வந்தவன் அப்பாவி கிழவி கட்டிவைத்திருந்த மண் அடுப்பை கடப்பாரை கொண்டு இடித்தானாம் பானை சட்டியெல்லாம் உடைத்தானாம் தடுக்க வந்த கிழவியும் கீழே தள்ளி மிதித்தானாம் ஏனையா நேற்றுவரை நன்றாகத்தானே இருந்தாய் இன்று உனக்கு என்ன வந்தது ஏரிக்கரை ஓரத்தில் காத்திருந்த முனியப்பன் பிடித்துவிட்டானா? என்று அடிபட்ட கிழவி வலியை தாங்கி கொண்டு அந்த முட்டாள் முரடனிடம் கேட்டாளாம்

அதற்கு அவன் அப்பாவி போலிருந்து ஆப்பம் சுட்டு பிழைக்கிறாய் என்று நினைத்திருந்தேன் நீயோ அடப்பாவி என்பது போல் பச்சரிசியில் ஆப்பம் சுட்டு நான் பார்க்கும் வண்ணம் கடைபரப்பி வைத்துவிட்டு எனக்கு சக்கரை நோய் வருவதற்கு காரணமாக இருந்து விட்டாயே உருப்படுவாயா நீ என்று உறுமினானாம்

இந்த கதையாகத்தான் இருக்கிறது நம்ம பிரதம மந்திரியின் சமீபத்திய செயல்பாடுகள் எல்லாம் நாடு முழுவதும் ஊழல் மலிந்து விட்டது சேரும் சகதியும் குண்டும் குழியும் நிறைந்த சாலைகள் போல அரசாங்க அலுவலங்கள் எல்லாம் லஞ்சலாவன்யத்தால் புழுத்து விட்டது லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட வியாபாரிகளை போல இருந்த அரசியல் வாதிகள் அனைவரும் தெருக்களில் சுத்தும் குண்டர்களாகி விட்டார்கள் வல்லான் வகுத்ததே வழியென்று ஆகிவிட்டது


மாநில சட்டசபைகள் அனைத்தும் சண்டை சபைகளாகிவிட்டன குழாய்யடி குடுமிபிடி சண்டை மைதானத்துக்கும் நாடாளுமன்றத்திற்கும் வித்தியாசமே இல்லாமல் போய்விட்டது வெளிநாட்டுக்காரன் எல்லாம் இந்தியாவில் இப்படி ஒரு கேடுகெட்ட ஆட்சியா என்று காரி துப்புகிறான் அண்டைநாட்டு காரன் இது தான் சமயம் என்று எல்லை ஓரங்களில் இராணுவ பலத்தை அதிகரிக்கிறான் பயங்கரவாதிகளை எல்லையை தாண்டி தாக்குதல் நடத்த தூண்டி விடுகிறான்

இதற்கெல்லாம் என்ன காரணம் யோசித்தார் நமது பிரதமர் படித்தவர் இல்லையா அவர் மூளை சாதரணமான காரணங்களையா கண்டுபிடிக்கும் இந்த நாடு கெட்டு போனதற்கு பல லட்சகணக்கான மக்கள் விவசாயத்தை செய்துவருவதே முக்கிய காரணம் என்ற அறிய பெரிய உண்மையை கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார் இதை நான் விளையாட்டாக சொல்லவில்லை நிஜமாகவே சொல்கிறேன் அவர் அப்படிதான் சொல்கிறார்

இந்திய மக்களில் பெரும்பகுதியினர் வறுமையில் வாடுவதற்கு அரசின் கொள்கை காரணம் அல்ல அவர்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி இருப்பதே காரணம் விவசாயத்தில் இருந்து வெளியேறினால் தான் அவர்களால் வறுமையில் இருந்தும் வெளியேற முடியும் என்று ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியிருப்பதை தான் இங்கு சுட்டிக்காட்டுகிறேன்


இன்று இந்தியாவில் இருக்கும் பெரும்பகுதி மக்கள் அரை வயிறு உணவையாவது பெறுகிறார்கள் என்றால் அது விவசாயத்தால் தான் ஓடுகின்ற உயிரை பிடித்து இழுத்து ஒட்டவைத்துக்கொண்டு போராடுகின்ற அடித்தட்டு மக்கள் விவசாயத்தையும் விட்டுவிட்டால் கும்பல் கும்பலாக பட்டினி கிடந்தது சாகவேண்டியது தான் இந்த உண்மை அவருக்கு தெரியாதா என்ன ஒரு வேளை நமது பிரதமர் மக்களும் அரசியல் வாதிகளை போல உழைப்பதை விட்டு விட்டு ஊர் பணத்தை கொள்ளையடித்து வாழபழக வேண்டும் வழிப்பறி செய்ய வேண்டும் இரவோடு இரவாக கஜானாக்களில் கன்னம் வைத்து அயல்நாட்டு வங்கிகளில் பணத்தை பதுக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ என்னவோ

தலைக்கு வெளியே மட்டுமே பாரம் தாங்கி உள்ள மன்மோகன் சிங் அரசாங்கம் நாட்டுக்கு வெளியேயும் உள்ளேயும் சகல துறையிலும் தோற்று விட்டது பலவீனமான இந்திய அரசாங்கத்தை எப்படி வேண்டுமானாலும் மிரட்டி பணியவைக்கலாம் ஆசை காட்டி காசை காட்டி விலைக்கு வாங்கிவிடலாம் என்று அந்நிய சக்திகள் துணிந்து விட்டன பணத்தை வாரி இறைத்தால் இந்தியாவில் வாங்க முடியாதது என்று எதுவுமே இல்லை என்று உள்நாட்டு ஆதிக்க சக்திகள் களம் இறங்க துவங்கி விட்டன

இந்த கொடுமைகளை மட்டும் அல்ல தனது அரசாங்கத்தில் நடைபெறுகின்ற குடுமி பிடி சண்டையை கூட தீர்க்க முடியாத பரிதாபகரமான நிலையிலேயே பிரதமர் இருக்கிறார் சிறு வணிகத்தில் அந்நிய முதலிட்டை எதிர்கட்சியினர் எதிர்ப்பது புரிந்து கொள்ளக்கூடிய விஷயம் ஆனால் ஆளும் காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினரே அதை எதிர்க்கிறார்கள் கேரள காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும் அரசுக்கு கடுக்காய் கொடுக்க தயாராகி விட்டார்கள் காங்கிரசின் நண்பர்களான மம்தா முலயாம் சிங் போன்றோர்களும் சாட்டை எடுத்து சுழற்ற ஆரம்பித்து விட்டார்கள் மகளுக்கு மந்திரி பதவி வாங்க வேண்டும் என்பதற்காக மட்டுமே திமுக வாலையாட்டுகிறது இது சமீபத்திய கூத்து


நெடுநாட்களாகவே நாட்டை ஆட்டிபடைத்து கொண்டிருக்கும் நதி நீர் பிரச்சனைகள் சேது சமூத்திர திட்டம் தெலுங்கானா தகராறு முல்லை பெரியாறு சிக்கல் அணுஉலைகளுக்கு எழுந்துள்ள எதிர்ப்பு இன்னும் வரிசையாக நீளுகின்ற மக்கள் நல பிரச்சனைகள் எவற்றையும் தீர்ப்பதற்கான அறிவோ செயல் திட்டமோ துணிச்சலோ இந்த அரசாங்கத்திற்கு கிடையவே கிடையாது

நம் நாட்டு மீனவர்களை இலங்கை இராணுவம் காக்கா குருவி போல் சுட்டு வீழ்த்துகிறது கட்டி வைத்து நிர்வாணம் படுத்தி ரத்த காயம் ஏற்படுத்தி அவமான படுத்துகிறது அதையெல்லாம் தட்டி கேட்பதற்கு வக்கத்து போன மைய அரசாங்க அதிகாரிகள் மீனவர்கள் மீன்பிடிப்பு பகுதியை சுருக்கி கொள்ள வேண்டும் என்று சாவு வீட்டில் சம்பந்தம் பேசுபவர் போல் மூளை இல்லாமல் பிதற்றுகிறார்கள் இந்த நிலையில் பிரதமர் வந்து விவசாயம் செய்யாதே என மக்களை பார்த்து சாபம் இடுகிறார் ஐயகோ இந்த நாட்டை காப்பாற்ற யாருமே இல்லையா கடவுள் கூட இந்தியர்களை கைவிட்டு விட்டாரா என்று லட்சோப லட்ச மக்கள் மனதிற்குள் வெந்து புழுங்கி செத்துக்கொண்டிருக்கிறார்கள்

மனதிற்குள் வெந்துகொண்டிருக்கும் மக்களிடத்தில் சொல்லவேண்டிய ஒரு செய்தி இருக்கிறது நமது பிரதமர் நம்மை பார்த்து விவசாயத்தை விட்டு வெளியேறு என்கிறார் நாம் வெளியேறுவதும் ஏறாததும் நம் விருப்பம் அதை சொல்ல இவருக்கு எந்த யோக்கியதையும் இல்லை 


ஆனால் இவரை பார்த்து சொல்ல நம்மிடம் சில வார்த்தைகள் இருக்கிறது ஐயா பிரதமரே நீங்கள் ஆண்டது போதும் இந்த நாட்டு மக்கள் மாண்டது போதும் கொள்ளை அடித்தவன் கொடும் செயல் புரிந்தவன் கோட்டையில் இருக்க அவர்கள் கொக்கரிப்பை கேட்டு நீங்கள் கும்மாளம் அடிக்க அதை நாங்கள் வேடிக்கை பார்க்க வெறும்பயல்கள் அல்ல அண்டம் சிதறினாலும் கடல் பொங்கி எழுந்தாலும் வானம் இடிந்து விழுந்தாலும் கலங்கவே கலங்காத இந்திய தாயின் வீர புதல்வர்கள் நாங்கள் ஆகவே எங்களை ஆழ எங்களுக்கு தெரியும் நீங்கள் முதலில் ஆட்சி பீடத்தில் இருந்து வெளியேறுங்கள் அதன் பிறகு மற்றதை பேசலாம் என்று அவருக்கு பதில் சொல்ல நம்மிடம் நிறையவே வார்த்தைகள் உண்டு ஆனால் அவைகள் வெறும் வார்த்தைகள் அல்ல வாட்கள் என்பதை வருங்காலத்தில் பிரதமர் புரிந்து கொள்வார்.

Contact Form

Name

Email *

Message *