Store
  Store
  Store
  Store
  Store
  Store

சங்கீதத்தை கொல்லும் பாடகர்கள் !


  ர்னாடக சங்கீதம் என்கிறார்களே அப்படி என்றால் என்ன? கர்னாடக மாநிலத்தின் சங்கீதமா அது நம்ம ஊரு சங்கீத காரர்களுக்கு சுத்தமாக அறிவே கிடையாதா கர்நாடாகாகாரன் காவேரியில் தண்ணீர் விட மறுக்கிறான் யாரு பேச்சையும் கேட்க மாட்டேன் என்கிறான் நம்ம தமிழன் பெங்களூரில் எதாவது தொழில் செய்து பிழைத்து கொள்ளலாம் என்று போனால் அடித்து உதைத்து அனுப்புகிறான் அப்படி பட்ட ஊர்க்காரனின் சங்கீதத்தை மூச்சை பிடித்து கொண்டு பாடி நம்ம ஊரில் பரப்ப வேண்டுமா? என்று சில அப்பாவிகள் நிஜமாகவே எரிச்சலாக கேட்கிறார்கள் 

காதுக்கு இனிமையானது என்ற பொருள் கொண்டது தான் கர்னாடக சங்கீதம் என்று அழைக்கப்படுகிறது இப்படிபட்ட அடிப்படை விஷயங்கள் கூட அறிந்து கொள்ளாத தெரிந்து கொள்ள முயற்சிக்காத ஞான சூன்யங்களிடம் எவ்வளவு விளக்கினாலும் புரிந்து கொள்ளவே மாட்டார்கள் தாம்பிடித்த முயலுக்கு தான் மூன்று கால் என்று பிடிவாதம் பிடிப்பார்கள் என்றும் பலரும் பதில் சொல்லி கெளரமாக தப்பித்துக் கொள்கிறார்கள் 


இப்படி பதில் சொல்லி தப்பித்துக்கொள்வது வேண்டுமானால் தற்காலிக தீர்வாக இருக்குமே தவிர புத்திசாலி தனமான முடிவாக இருக்காது எது எப்படி இருந்தாலும் கர்நாடக சங்கீதம் என்பது கர்நாடக மாநிலத்திற்கு சொந்தமானது என்று நம்புகிற அளவிற்கு இனிமையான அந்த சங்கீத முறை மக்கள் மத்தியில் அந்நிய பட்டு போனதற்கு யார் காரணம் அல்லது எது காரணம் என்று சிந்திக்க பலர் மறுக்கிறார்கள் 

நேற்று வந்த சினிமா பாடல் கூட மேல்தட்டு முதல் அடித்தட்டு வரை உள்ள மக்கள் மனதை ஆக்கிரமித்து உள்ளது உண்மையை சொல்லப்போனால் புகழ்பெற்ற திரைபடபாடல்கள் வெற்றி பெறுவதற்கு உழைப்பதை விட ஒரு தியாகராஜர் கீர்த்தனையை பாவம் மாறாமல் பாடுவதற்கு அதிகமாக உழைக்கவேண்டியது உள்ளது ஆனால் இத்தனை உழைப்பிருந்தும் நாடு தழுவிய அளவில் முக்காலா முக்காப்புலா பெற்ற வெற்றியை மகா கணபதிம் கீர்த்தனை பெறவில்லை இதற்கு என்ன காரணம் 

கர்நாடக சங்கீதத்தில் பாடப்படும் பாடல்கள் தமிழில் இல்லை பெருவாரியான பாடல்கள் தெலுங்கிலும் வடமொழியிலும் இருக்கிறது இந்த பாஷைகள் மக்களில் பலருக்கு தெரியாது அதனால் இந்த கீர்த்தனைகளை பாகவதர் ஏதோ கழுத்து சுளுக்கில் கத்துகிறார் என்று மக்கள் நினைக்கிறார்களே தவிர அந்த இசையின் மகத்துவத்தை அவர்களால் முழுமையாக கிரகித்து கொள்ள இயலவில்லை ஆனால் தமிழ் பாடல்களை கர்நாடக இசையில் பாகவதர்கள் பாடினால் மக்கள் நிச்சயம் ரசிப்பார்கள் கர்நாடக இசையும் வளரும் என்று சிலர் சொல்கிறார்கள் 


இவர்கள் கூறுவது சரியான கருத்து என்றால் ஆந்திர மாநில முழுவதும் கர்நாடக சங்கீதம் மிகவும் புகழ் பெற்ற நிலையில் மக்கள் மத்தியில் பரவி இருக்க வேண்டும் காரணம் கீர்த்தனைகள் பல சுந்தர தெலுங்கில் தான் இருக்கிறது ஆனால் ஆந்திரத்தில் கர்நாடக சங்கீதம் அறிந்தவர்கள் ஒன்றும் தமிழ்நாட்டை விட அதிகமாக இல்லை எனவே தமிழ் மொழியில் பாடல்கள் பாடபெற்றால் இசை வளரும் என்பது பகல் கனவு காண்பது போன்ற ஒரு நிலையாகத்தான் இருக்கும் 

தமிழிசை என்று நடத்தப்படுகிற பல நிகழ்சிகளை நான் பார்த்திருக்கிறேன் பாடகர் தொடையை தட்டி எதோ பாடி கொண்டிருப்பார் முன்வரிசையில் இருக்கின்ற ஒரு சிலரை தவிர மற்றவர்கள் வம்பளந்து கொண்டிருப்பார்கள் அல்லது வாய்க்குள் ஈ நுழைவது கூட தெரியாமல் உறங்கி கொண்டிருப்பார்கள் என்ன இந்த ஜனங்களுக்கு ரசிப்பு தன்மையே இல்லையா? நாமாவது கச்சேரியை ரசிப்போம் என்று உட்கார்ந்தால் சில நிமிடங்களில் நமது தலையும் தூக்கத்தில் ஆட ஆரம்பித்து விடுகிறது அதாவது பாடலை பாடுகின்ற பாடகர்கள் பாடல் வரிகளை ஒப்புவிக்கிரார்களே தவிர அதன் அர்த்தத்தை உணர்ந்து உணர்சிகளை உள்வாங்கி பாடுவது கிடையாது எதோ பத்து பேர் எதிரே உட்கார்ந்து விட்டார்கள் சபாக்காரர்கள் பணம் கொடுத்து நம்மை கூட்டி வந்து விட்டார்கள் நான் பாடுவது தான் பாட்டு கேட்க வேண்டியது உன் தலை எழுத்து என்பது போல கச்சேரிகள் இருப்பதனால் நமது மனது இசையோடு ஓட்ட மறுக்கிறது 

தமிழிசை மன்றங்கள் மட்டும் தான் இப்படி இருக்கிறது கர்நாடக சங்கீத சபாக்கள் உணர்ச்சி வெள்ளத்தில் தத்தளிக்கிறது என்று சொல்லிவிட முடியாது நான்கு கீர்த்தனைகளை கூட சரிவர பாட முடியாதவர்கள் மேடையில் ஏறி அமர்ந்து கொண்டு சரிகமபதநி என்று திரும்ப திரும்ப பாடி நம் கழுத்தை அறுக்கிறார்கள் இவர்களை எல்லாம் மேடை ஏற விட்டது யார் என்று நாம் தோண்டி துளாவி விசாரித்து போனால் அங்கே கத்தை கத்தையாக காந்தி நோட்டுக்கள் நம்மை பார்த்து பல் இளிக்கின்றன 


தமிழிசையும் சரி சாஸ்திரிய இசையும் சரி இப்போது திரைமைக்காக மேடையேற்ற படவில்லை சிபாரிசுகளாலும் பணம் பரிவர்த்தனைகளாலும் மேடை ஏற்றப்படுகிறது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது இது என்ன பெரிய அதிசயம் காலகாலமாக நடந்து வரும் சங்கதிதானே இது என்று சிலர் முனுமுனுப்பது நான் அறியாதது அல்ல 

பணம் மேடையேறி திறைமைகள் மூலையில் ஒதுக்கப்பட்ட பிறகு தான் நமது பாரம்பரிய சங்கீதம் பெருவாரியான மக்களின் மனதில் இருந்து விலகி போக ஆரம்பித்தது அந்த நிலை இப்போதும் மிக தீவிரமாக தொடர்வதால் தான் சங்கீதம் என்பது மக்களுக்கு முற்றிலும் அன்னியமாகி கொண்டு வருகிறது 

சென்ற மார்கழியில் சென்னை சபாக்களில் நடந்த பல சங்கீத விழாவாக இருக்கட்டும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட சங்கீத நிகழ்சிகளாக இருக்கட்டும் அவைகளில் பல செயற்கையாகவும் வீண் ஜம்பமாகவும் இருந்ததையே நம்மால் காண முடிந்தது நிலைமை இப்படியே போனால் காதுக்கு இனிய கர்நாடக சங்கீதம் மக்கள் மனதை விட்டு மட்டும் அல்ல நாட்டை விட்டே விலகி போனாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை 

இசை என்பது பாடுபவனையும் கேட்பவனையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த வல்லது பாடகனின் ஆத்மாவில் இருந்து இசை வெளிவந்தால் தான் அது கேட்பவனின் ஆத்மாவையும் தொடும் இன்றைய இசை தசையும் நரம்புகளுமான தொண்டையில் இருந்து மட்டும் தான் வெளிவருகிறதே தவிர ஆத்மாவில் இருந்து புறப்படவில்லை 

இசை கடவுளோடு மனிதனை இணைக்க கூடியது ! அல்ல அல்ல இசை கடவுளாகவே இருப்பது அதனால் தான் அது நாத பிரம்மம் என்று அழைக்கபடுகிறது பாடும் போது நாத வெள்ளத்தின் நடுவே நாயகன் இருப்பதை கேட்பவன் உணர வேண்டும் ஆனால் இன்றைய இசை விழாக்கள் நாயகனை காட்டவில்லை மாறாக ஆடம்பரத்தையும் தற்புகழ்சியுமே காட்டுகிறது இந்நிலை இனிவரும் காலங்களிலாவது மாறவும் மாற்றவும் வேண்டும் அப்படி மாறினால் தான் இசை வாழும் இசையால் மனித மனமும் வளரும் இல்லை என்றால் மனித மனம் என்பது இன்னும் சுருங்கி போய் மனநல மருத்துவமனைகளில் தான் அடைக்கலம் புக வேண்டிய கட்டாயம் வரும்.



Contact Form

Name

Email *

Message *