Store
  Store
  Store
  Store
  Store
  Store

காற்றாய் வீசு மனிதா !


      மங்கலமாக பேசகூடாது நல்ல வார்த்தைகளை அதுவும் மங்களகரமான வார்த்தைகளை பேசி பழகுங்கள் கோபம் வரும் போது கூட அத்து மீறி வார்த்தைகளை வெளியிடாதீர்கள் காரணம் ஒருவேளை நீங்கள் கோபத்தால் சொல்லுகின்ற சொல் பலித்துவிட போகிறது. வீணாக மற்றவர்களுக்கு துன்பம் கொடுத்த பாவம் உங்களை வந்து சேர்ந்துவிடும் என்று நமது பெரியவர்கள் நமக்கு அறிவுரை சொல்லவதை பலமுறை கேட்டுருக்கிறோம். அந்த அறிவுரை அப்போது நமக்கு எரிச்சலாக தேவையற்றதாக தெரிந்தாலும் வயது ஏற ஏற அதிலுள்ள சத்தியம் நமக்கு புரிய ஆரம்பிக்கிறது. நாமும் பெரியவர்களை போல நமது குழந்தைகளுக்கு இதே உபதேசத்தை செய்கிறோம்.

கடினமான வார்த்தைகளை பயன்படுத்தி மற்றவர்களை வேதனைபடுத்துவது ஒருவித குற்றமென்றால் அதே வார்த்தைகளை பயன்படுத்தி தன்னை தானே நோகடித்து கொள்வதும் குற்றம் தான் சில மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எதற்கெடுத்தாலும் எந்த ஒரு சிறிய துன்பம் வந்தாலும் நான் செத்து விட போகிறேன். சாவதை தவிர எனக்கு வேறு வழியே இல்லை என்பார்கள். வேறு சிலர் எனக்கு வந்த கஷ்டமட்டும் மற்றவர்களுக்கு வந்திருந்தால் தூக்கில் தொங்கியிருப்பார்கள் ஆற்றிலோ குளத்திலோ விழுந்து உயிரை மாய்த்திருப்பார்கள் என்றும் சொல்வார்கள். தான் செத்துவிடுவேன் என்று சொல்வதும் அவர்களும் செத்துவிடுவார்கள் என்று சொல்வதும் மங்கலமல்ல அமங்கலமே ஆகும்.

பூமியில் பிறந்த அனைவருமே ஒருநாள் சாகபோகிறோம். கடன்காரனிடமிருந்து தப்பிக்கலாம் வருமான வரிதுரையிடமிருந்து தப்பிக்கலாம். தாலிகட்டிய பாவத்திற்காக கூடவே இருந்து சித்தரவதை கொடுக்கும் மனைவியிடமிருந்து கூட தப்பிக்கலாம் ஆனால் கையில் பாச கயிற்றுடன் நெருங்கி வரும் எமனிடமிருந்து யாரும் தப்பிக்க முடியாது. இன்று அவன் என்றால் நாளை நான் சாக வேண்டும். முன்பின் என்று கால வித்தியாசம் இருக்குமே தவிர சாவு என்பது சர்வ நிச்சயமானது. அப்படி மரணம்வந்து நமது வாசல் கதவை தட்டி நிற்கும் காலம்வரை ஓரளவாவது பண்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும். படுபாவி ஒழிந்தான் என்று எதிர்த்த வீட்டுக்காரன் சந்தோசப்படும் படி சாக கூடாது.

நிம்யதியாக வாழ்வதற்கும் நிம்மதியாக சாவதற்கும் விரும்பாத மனிதர்கள் யாருமே இல்லை ஆனால் எப்படி நிம்மதியாக வாழ்வது என்பது தான் யாருக்கும் புரியவில்லை ஆனால் அது புரியாத புதிரல்ல மிகவும் சுலபமான வழி அது ஒருவன் நம்மை பார்த்து காரி உமிழ்வது நமக்கு பிடிக்காது. ஓங்கி அறைய வருவது நமக்கு ஆகாது. ஆபாசமான வார்த்தைகளை யாரும் நம்மை நோக்கி பிரயோகம் செய்ய கூடாது. என்று நாம் எதிர்பார்க்கிறோம். அது அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் நாமும் இந்த கொள்கையை மற்றவர்களிடத்தில் கடைபிடிக்க வேண்டும். அதற்கு ஒரே அருமருந்து கரடுமுரடான வார்த்தைகளை விட்டு விட்டு இனிமையான அன்பான மங்களகரமான வார்த்தைகளை பேசி பழகவேண்டும். அன்பால் உங்கள் இதையத்தில் இருந்து புறப்படுகிற ஒரு சிறிய சொல் கொலைகாரனை கூட சிந்திக்க வைத்துவிடும். வார்த்தைக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.

நீ புதியதாக எதையும் பேசவில்லை நேற்று யாரோ ஒருவர் பேசியதை இன்று நீ பேசுகிறாய் இதே வார்த்தையை வருங்காலத்திலும் யாரவது ஒருவர் பேசுவார்கள் சீசாவில் அடைக்கப்பட்ட காற்று எப்படி சுற்றி சுற்றி சீசாவிற்குள்ளையே வீசுமோ அதே போலவே நாம் பேசுகின்ற வார்த்தைகள் ஒலி அதிர்வுகளாக அயன வெளியில் சஞ்சாரம் செய்துகொண்டே இருக்கிறது. நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும். மரணம் என்பதே கிடையாது. பேசுகின்ற நான் ஒரு நாள் இல்லாமல் போய்விடலாம் ஆனால் நான் பேசுகின்ற வார்த்தை எப்போதுமே இல்லாமல் போகாது. அதனால் தான் நமது பெரியவர்கள் நல்லதை சிந்தனை செய் நல்லதை பேசு நல்லதை மட்டுமே பேசு என்று சொல்கிறார்கள்.

அயல்நாட்டில் ஒரு விஞ்ஞானி ரோஜா செடி ஒன்றிற்கு திட்டிக்கொண்டே தண்ணீர் ஊற்றினானாம் இன்னொரு ரோஜா செடிக்கு அமைதியாக தண்ணீர் ஊற்றினானாம் மற்றொரு செடிக்கோ புகழ் மொழிகளை பாராட்டு வார்த்தைகளே மட்டுமே சொல்லி கொண்டு தண்ணீர் ஊற்றினானாம். திட்டி வளர்க்கப்பட்ட செடி காய்ந்து போனதாம் மவுனமாக தண்ணீர் ஊற்றிய செடி அப்படியே இருந்ததாம் மாறாக பாராட்டு மொழிகளை கேட்டு தண்ணீர் பெற்ற செடி தளதளவென வளர்ந்து பூத்து குலுங்கியதாம். பேசவே பேசாத செடிகள் கூட நல்ல வார்த்தைக்கும் தீய வார்த்தைக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து வைத்திருக்கின்றன. ஆனால் எல்லாம் அறிந்த மனிதன் மட்டும்தான் உணர்ச்சியற்று இருக்கிறான்.

நாம் பேசுகின்ற வார்த்தைகளில் உள்ள ஒலி அதிர்வுகள் நம்மை சுற்றியே எப்போதும் இருக்கிறது. அந்த அதிர்வுகள் நல்லதாக இருந்தால் நாமும் உற்சாகமாக இருப்போம் நம்மை நாடி வருபவர்களும் குதூகலத்தோடு பேசு மகிழ்வார்கள். கெட்டதாக அமைந்துவிட்டால் நம்மை அறியாமலே நமக்குள் ஒரு மந்த கதி புகுந்து விடும். நம்மை நாடி வருபவர்கள் கூட ஏனடா இவனிடம் வந்தோமென்று சலித்து கொள்வார்கள். நோய்வந்து படுக்கையில் கிடக்கும் போது கூட நான் தேறிவிடுவேன் எழுந்து வந்துவிடுவேன். இது என்ன பிரம்மாதமான நோய் இதைவிட கொடிய நோய் வந்தால் கூட என்னால் அதை வெற்றிகொள்ள முடியும். என்று நினைப்பவனே நினைத்தை சொல்பவனே பரிபூரண குணமடைய முடியும்.

ஆனால் இந்த ரகசியம் பலபேருக்கு தெரிவதில்லை எனக்குதெரிந்த ஒரு பொற்கொல்லர் இருந்தார் எப்போது அவர் என்னை பார்கிறாரோ அப்போதெல்லாம் அழுது புலம்புவார் தொழிலே சரியில்லை மனைவி மக்களுக்கு சோறு சமைக்க அரிசி வாங்க கூட கையில் காசுயில்லை என்பார் ஆனால் அதிசயம் என்னவென்றால் போனமாதம் நன்றாக வியாபாரம் நடந்தது இப்போது தான் சரியில்லை என்பார் இதே வசனத்தை தான் கொஞ்சம் கூட மாறாமல் போனமாதம் சொல்லியிருப்பார். இவருக்கு வியாபாரத்தில் ஒன்றும் குறைவு கிடையாது. வருவது போதும் என்ற மன நிறைவு இல்லாததனால் எதிலும் அவரால் திருப்தியாக சந்தோசமாக மன சாந்தியோடு வாழமுடியவில்லை அவர் மட்டுமல்ல அவரிடம் வேலைபார்க்கும் சிறு பையன் கூட இப்படியே தான் பேசுவான்.

திருப்தியில்லாதவன் வாழ்க்கை ஓட்டை படகு போன்றது. அது எந்த பயணத்திற்கும் உதவாது இருப்பதை வைத்து கொண்டு வாழ நினைப்பவன் யாரென்றால் எப்போதும் பார்த்தாலும் சிரித்த முகத்தோடும் மங்களகரமான வார்த்தை பரிமாற்றங்களோடும் இருக்கிறானோ அவன் தான் எனவே மனதில் எதிர்மறை சிந்தனைகளுக்கு இடம் தராமல் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசி பழகி பாருங்கள் வாழ்க்கையில் உள்ள சுவைகள் அனைத்தும் தெளிவாக உங்கள் கண்களுக்கு தெரியும்.

நமது தோட்டத்தில் மேய்கின்ற கோழிகளை பாருங்கள் அவைகள் எவ்வளவு சுதந்திரமாக சுகமாக நடமாடுகிறது என்பதை உணர்வீர்கள் இதே கோழிகளை பிடித்து கசாப்பு கடைக்காரனிடம் கொடுங்கள் உற்சாகமாக இதுவரை கொக்கரித்து கொண்டிருந்த கோழி பெட்டி பாம்பாக கப்சிப் என்று அடங்கி விடும். காரணம் நமது வீட்டு தோட்டத்தில் யாரும் கோழிகளை கொல்ல வேண்டும். அதன் மாமிசத்தை துண்டு துண்டாக வெட்டி எடைபோட வேண்டும். என்று நினைப்பதில்லை ஆனால் கசாப்பு கடையில் அந்த சிந்தனையை தவிர வேறு எதுவுமே இல்லை கோழியை கூட மனித சிந்தனை பாதிக்கிறது. நீங்கள் நல்லது நினைத்தால் உங்கள் செல்ல பிராணிகள் கூட சந்தோசப்படும். கெட்டது நினைத்தால் அவைகளும். துக்கப்படும்.

உங்கள் கெட்ட எண்ணங்களுக்கு பிராணிகளை கூட தாக்கும் சக்தி இருக்கும் போது சதா அதே சிந்தனையில் நீங்கள் உங்கள் வீடுகளில் வாழ்ந்தால் அந்த வீட்டிற்குள் நல்ல அதிர்வுகள் எப்படி இருக்கும். வீட்டில் உள்ள மற்றவர்களின் மன நிலையும் எப்படி குளறுபடியாகும் என்பதை சற்று நினைத்து பாருங்கள் சிலர் சொல்வார்கள் எவ்வளவு நேரம் வெளியில் சுற்றினாலும் அலுப்பு தெரியவில்லை வீட்டுக்குள் வந்ததும். சோர்வு வந்துவிடுகிறது. என்பார்கள் இதற்கு காரணம் எதிர்மறை எண்ணங்கள் வீடு முழுவதும் நிறைந்திருப்பதே ஆகும்.

நாம் வாழுகின்ற வீட்டை வடமொழியில் கடாக்க்ஷா என்று அழைப்பார்கள் அதாவது அன்பு,அருள்,தயவு என்பதன் இதன் பொருளாகும். அன்பு,அருள்,தயை என்பது தான் அன்னை மாகாலக்ஷ்மியின் அடையாளமாகும். நல்ல எண்ணங்களும் நல்ல வார்த்தைகளும் எந்த வீட்டில் நிறைந்திருக்கிறதோ அந்த வீட்டிலேயே மகலக்ஷ்மியாகிய திருமகள் வாசம் செய்வாள் என்று நமது முன்னோர்களின் கூற்று நல்ல எண்ணத்தின் அலைகள் மட்டுமே வெற்றியை தேடி தரும். எனவே இடுக்கண் வருங்கால் நகுக என்று வள்ளுவன் சொன்னானே அதை உங்கள் வாழ்க்கை தத்துவமாக கொள்ளுங்கள். அண்டம் சிதறினாலும் கடல்பொங்கி எழுந்தாலும் கலங்கிடவே மாட்டேன் என்று உறுதியை இதையத்திற்குள் நிரப்புங்கள் உங்களால் நல்லதை மட்டுமே சிந்திக்க முடியும். நல்லதை மட்டுமே பேச முடியும்.

மங்களகரமான வார்த்தைகள் வாழ்க்கை பாதையையே மாற்றி விடும். நேற்றுவரை தூக்கத்தில் இருந்தவன் கூட நன்றாக சிரித்து பழகும் ஒருவரின் நட்பு கிடைத்துவிட்டால் தனது தூக்கத்தை மறந்து துக்கத்தை துறந்து ஒரு போராட்ட காரனாக எழுந்து நிற்பான் எனவே அமங்கலம் தவிர்த்து மங்களம் மட்டுமே பேசுங்கள் இனிய தென்றல் காற்றாய் எங்கும் வீசுங்கள்.



Contact Form

Name

Email *

Message *