ஒருகாலத்தில் மனிதரிடமிருந்த ஒழுக்க உணர்வு தற்போது குறைந்து வருகிறது. ஆணும் பெண்ணும் திசைமாறி போகும் அவல நிலையை எங்கும் காணமுடிகிறது. மக்கள் இப்படி ஆனதற்கு பல காரணங்களை அடுக்கடுக்காக சொல்லலாம். இருந்தாலும் கண்ணெதிரே தெரிவது வண்ண திரையும் சின்னத்திரையும் தான் எனவே உங்களிடம் ஒரு கேள்வி மக்களை அதிகமாக கெடுப்பது சினிமாவா? தொலைகாட்சியா?
ராஜகோபால், கூடங்குளம்
சினிமாவும் தொலைக்காட்சியும் கண்டுபிடிக்கும் முன்பு அனைத்து மனிதர்களும் உத்தமர்களாகவும் சத்திய சீலராகவும் இருந்தது போலவும் சினிமா வந்த பிறகு தான் அனைவரும் கெட்டுபோனது போலவும் பேசுவது மிகவும் தவறு ஒரு மனிதன் கெட்டுபோவதற்கு வெளிபொருட்கள் எதுவும் தேவையில்லை அவனது மனமே அதற்கு போதும்
இருந்தாலும் தற்காலிக ஊடகங்கள் மனித மனதை பாதிப்படைய செய்கிறது என்பதில் மாற்றுகருத்து இருக்க முடியாது கிளர்ச்சி ஊட்டக்கூடிய கருத்துக்களை திரும்ப திரும்ப சொன்னால் தராசு தட்டு ஒருபக்கம் சாய்வது போல மனித மனதும் கிளர்ச்சியை நோக்கி சாய்ந்து விடுவது இயற்கை
இன்றைய தொலைகாட்சி நிகழ்சிகள் பெருமளவு சினிமாவையும் சினிமா நட்சத்திரங்களையும் மையமாக கொண்டே இருக்கிறது. இதில் தொலைகாட்சியை மட்டும் தனியாக குற்றம் சொல்வது முறையல்லை என்றாலும் சினிமா தெருவிலிருக்கும் கொட்டகையில் இருக்கிறது. தொலைக்காட்சியோ அனைவர் வீட்டிலும் இருக்கிறது. எனவே மனிதனை கெடுப்பதில் இப்போது முக்கிய பங்கு வகிப்பது சின்னத்திரையே ஆகும்.
ஆலமரம் போல் அசையாமல் இருப்பது தான் நல்ல மனதின் லட்சணம் சினிமா டிவி போன்ற சிறிய சலசலப்புக்கே ஆடுகிறது என்றால் அது ஆலமரம் அல்ல காய்ந்து போன சுள்ளி குச்சி.