Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஜைனர்களின் தமிழ் தொண்டு

இந்து மத வரலாற்று தொடர் 37

    ந்தியாவில் ஜைனமதம் புத்த மதம் தோன்றுவதற்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது ஆகும் அம்மதத்தை வளர்ப்பதற்கும் வளப்படுத்துவதற்கும் அவ்வப்போது தீர்தங்கர்கள் என்ற மகான்கள் தோன்றினார்கள் என்பது உலகறிந்த செய்தியாகும். அப்படி வந்த மகான்களில் வர்த்தமான மகாவீரர் கடேசியாக வந்த தீர்தங்கர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது. மகாவீரர் காலத்திலேயே ஜைன மதம் வட இந்தியா முழுவதும் ஓரளவு பரவியது.

பின்னர் சக்ரவர்த்தி சந்திரகுப்தர் காலத்தில் வடக்கு பகுதியில் மிக கடுமையான வறட்சியும் பஞ்சமும் ஏற்படவே எராளமான ஜைனர்கள் சந்திரகுப்தர் குருவாகிய பத்திரபாகு என்பவருடன் தெற்கு நோக்கி பயணப்பட்டு மைசூர் அருகில் உள்ள சிரவண பெலகுளா என்னும் ஊரில் தங்கினார்கள். அங்கிருந்த வண்ணமே தக்காணம் முழுவதும் ஜைன மதத்தை ஆத்ம பூர்வமான ஈடுபாட்டோடு பரப்பினார்கள்.

தக்காணத்தில் கங்கர், கதம்பர், சாளுக்கியர், ராஸ்டிரகூடர் ஆகிய அரசர்களின் வம்சத்தார்கள் ஜைன மதத்திற்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்தார்கள். சாளுக்கியர்களுக்கும் தமிழ்நாட்டினருக்கும் இருந்த தொடர்பினால் ஜைன மதம் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்தது சுமார் ஏழாம் நூற்றன் வரையில் தமிழகத்தில் ஜைன மதம் முழு செல்வாக்கை பெற்று புகழோடு திகழ்ந்தது. பாண்டியர், சேரர், சோழர், பல்லவர் ஆகிய தமிழ் மன்னர்கள் வைஷ்ணவம், சைவம் ஆகிய வைதீக மதங்களில் மீது மிக தீவிரமான ஈடுபாடு கொண்டவர்களான இருந்தாலும் கூட ஜைன மதத்திற்கு மிக சிறப்பான வரவேற்ப்பையும் பாதுகாப்பையும் கொடுத்தார்கள்.


சைவ சமயம் தமிழகத்தில் மீண்டும் தலையெடுத்து தனியாட்சி நடத்த துவங்கிய போது தமிழகத்தில் ஜைனர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய ஆரம்பித்தது ஆனாலும் ஜைனர்களின் கொல்லாமை புலால் உண்ணாமை ஆகிய அகிம்சை நெறிமுறைகள் தமிழ் மக்களின் நெஞ்சோடும் வாழ்க்கை முறையோடும் மிக ஆழமாக பதிந்து விட்டது. ஜைனர்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் ஆற்றியுள்ள தொண்டு மிக அதிகமாகும். தமிழர்கள் தங்களது இலக்கிய இலக்கண நூல்களில் வட மொழி சொற்கள் அதிகமாக இல்லாமல் தனி தமிழ் சொற்களே மிகுதியாக இருக்கும்வண்ணம் கையாண்டு வந்தனர். வட மொழி சொற்களை பயன்படுத்தியே ஆக வேண்டிய இடங்களில் கூட பல புதிய தமிழ் சொற்களை உருவாக்கி பயன்படுத்தி கொண்டார்கள்.
தமிழில் தனி தமிழ் சொற்கள் உருவாக்கம் பெறுவதற்கு ஜைனர்களின் அறிவு பூர்வமான பங்கு பணிகள் மிக அதிகம் என்றே துணிந்து சொல்லலாம்.

தமிழ்நாட்டில் இருந்த ஜைனர்கள் தமிழ் மொழியில் பல நூல்களை உருவாக்கியது போலவே வட மொழியிலும் நூல்களை உருவாக்கினார்கள் நம் தமிழ் மொழியில் உள்ள நேமிநாதம் நன்னூல், அகப்பொருள் விளக்கம் போன்ற இலக்கண நூல்களையும் யாப்பெருங்கலகாரிகை, யாப்பெருங்கலவிருத்தி ஆகிய யாப்பிலக்கண நூல்களையும் திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு போன்ற அகராதி நூல்களையும் நாலடியார் அறநெறி சாரம் பழமொழி ஏலாதி ஆகிய நீதி நூல்களையும் சீவகசிந்தாமணி, வளையாபதி ஆகிய காப்பியங்களையும் யசோதர காவியம் சூடாமணி நீலகேசி ஆகிய சிறுபஞ்ச காவியங்களையும் படைத்திருகிறார்கள் இவற்றில் நீலகேசி என்பது தனித்துவமான தத்துவ நூலென்று அறிஞர்களால் போற்றபடுகிறது.


ஜைன மதத்தை உருவாக்கிய வர்த்தமான மகாவீரர் தனது போதனைகள் மாளிகையில் உள்ள சீமான்களுக்கானது அல்ல குடிசைகளிலும் சாலை ஓரங்களிலும் குடியிருக்கும் சாமான்ய பொதுமக்களுக்கானது என்பதில் மிக உறுதியாக இருந்தார். அதையொட்டியே அவரும் அவருடைய சீடர்களும் அக்காலத்திய பொது ஜனங்கள் வெகுவாக பயன்படுத்திய அர்த்தமாகதி பிராகிருத மொழிகளிலேயே தங்களது உபதேசங்களை செய்து வந்தார்கள் இதனால் ஆதிகால ஜைன நூல்கள் அனைத்துமே பிராகிருத மொழிகளிலேயே இருந்தது. ஏசுநாதர் பிறப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தான் ஜைன மத உபதேசங்கள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது. அவற்றில் கி.பி. முதலாம் நூற்றாண்டு உமாசுவாமி என்பவரால் எழுதப்பட்ட தத்துவார்த்த சூத்திரம் என்ற நூல் மிகவும் புகழ்வாய்ந்தது ஆகும்.

இந்த நூலுக்கு பல அறிஞர்கள் விளக்க உரை தந்திருந்தாலும் சமந்த பந்திரர் என்ற அறிஞர் தந்த கந்த ஹஸ்தி என்ற மகபாஷ்யமே மிக சிறந்த நூலாகும். அந்த நூலில் உள்ள ஒரு சில ஸ்லோகங்கள் மட்டுமே இப்போது கிடைக்கிறது. இந்த நூலுக்கு தேவனந்தி, பூஜ்யபாதர், அகலந்தர், வித்யானந்தர் போன்ற அறிஞர்களும் விளக்க உரை எழுதியிருக்கிறார்கள்.

ஜைன மதத்திற்கு என்றே தனி புராண நூல்களும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு இருக்கிறது. அவைகளில் தலைமையானது மகாபுராணம் என்பதாகும். இது ஆதிபுராணம், உத்ரபுராணம் என்ற இரண்டு பிரிவுகளாக இருக்கிறது. ஆதி புராணத்தை ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜினசேனர் இயற்றியுள்ளார். உத்திர புராணத்தை பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த குணபத்திரர் எழுதியுள்ளார். இந்த இரண்டு புராண பகுதிகளும். அறுபத்தி மூன்று மகா ஞானிகளை பற்றிய விஷயங்களை கூறுகின்றன.


இது தவிர எட்டாம் நூற்றாண்டில் ஸ்ரீ ராமருடைய வாழ்க்கையை பற்றி எழுதியுள்ள பதும புராணத்தை ஜைன ராமாயணம் என்றும் அழைக்கிறார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய வாழ்க்கையை பற்றி ஜினசேனர் எழுதியுள்ள ஹரி வம்சம் என்னும் நூலை ஜைன பாரதம் என்றும் அழைக்கிறார்கள்.

ஜைனர்கள் இலக்கணம், நிகண்டு, அலங்காரம், தர்க்கம், கணிதம் சம்மந்தப்பட்ட பல நூல்களை எழுதி மக்கள் பயன்படும் வண்ணம் தந்திருக்கிறார்கள். ஆயிரம் நூல்களையும் ஆயிரம் உபதேசங்களையும் ஜைனர்கள் தந்திருந்தாலும் கூட அவர்கள் சொல்லிய அஹிம்சா தர்மமே மிக சிறந்த தர்மம் என்று உலகோரால் போற்றபடுகிறது.

கண்ணில் தென்படுகின்ற தென்படாத எல்லா உயிர்களையும் தன் உயிர் போலவே மதிக்கும் உயர்ந்த பண்பாட்டை இந்து மதத்தின் ஆதர வேதத்திலிருந்து எடுத்து பாமரரும் பயன்படும் வண்ணம் உலகுக்கு தந்த வர்த்தமான மாகாவீரரும் இன்றும் என்றும் நிலைத்திருக்கும் சனாதன தர்மத்தின் மிக முக்கிய தூண் என்றால் அது மிகையாகாது.



Contact Form

Name

Email *

Message *