Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஷேர் மார்க்கட்டில் இறங்கலாமா...?


   ன்புள்ள குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் நான் பிறந்தது மதுரை என்றாலும் தற்போது வத்தலகுண்டுவில் வசித்து வருகிறேன். எனது பூர்வீக சொத்தில் எனக்கு கிடைத்த பாகத்தில் பெருமளவு பணத்தை ஷேர் மார்க்கட்டில் முதலீடு செய்தேன். ஆரம்பத்தில் லாபகரமாக இருந்த ஷேர் மார்க்கட் திடீரென்று நஷ்டத்தை தந்து முதலீடு செய்த பணம் முழுவதும் கையை விட்டு போய்விட்டது பிறகு சொற்பமான பணத்தை வைத்து மளிகைக்கடை ஒன்று நடத்தி வருகிறேன். சுமாராக தொழில் நடக்கிறது. இருந்தாலும் குடும்பத்தை நடத்த இந்த வியாபாரம் போதுமான வருவாயை தரவில்லை எனவே சில நண்பர்களிடம் பணம் கடனாக பெற்று மீண்டும் ஷேர் மார்க்கட்டில் நுழையலாம் என்று விரும்புகிறேன் இருந்தாலும் முன்பு பட்ட கசப்பான அனுபவம் தயக்கத்தை தருகிறது. மீண்டும் நான் அந்த தொழிலை செய்தால் நல்ல முறையில் நடக்குமா? அல்லது பழையபடியே தோல்வியில் முடியுமா? என்பது தெரியவில்லை தயவு செய்து என் ஜாதகத்தை கணித்து பார்த்து எனக்கு நல்ல வழி காட்டுமாறு பணிவோடு வேண்டுகிறேன்.

இப்படிக்கு     
சையத் அஹமத்
வத்தலகுண்டு



  தொழுவத்தில் ஒரு மாடு கட்டபட்டிருக்கிறது அதை கட்டியிருக்கும் கயிறு பத்தடி நீளமுள்ளது அந்த கயிற்று நீளத்திற்குள் மாடு நடமாடினால் அதற்கு எந்த பிரச்சனையும் கிடையாது. அதையும் தாண்டி போகவேண்டுமென்று மாடு விரும்பும் போது தான் கயிறு மாட்டை பின்னோக்கி சுண்டி இழுக்கிறது மாடும் தடுமாறி கீழே விழுகிறது. கஷ்டபடுகிறது.

மனிதர்களாகிய நாமும் ஏறக்குறைய தொழுவத்தில் கட்டப்பட்ட மாடுகள் போலவே இருக்கிறோம் நமது கழுத்தில் விதி என்ற கயிறு கட்டப்பட்டு இருக்கிறது அந்த வட்டத்திற்குள் நாம் நடமாடுகிற வரை எந்த தொல்லையும் கிடையாது. நமக்கென்று விதிக்கப்பட்ட விதியின் எல்லையை மீற துணியும் போது தான் துன்பமும் தோல்வியும் நம்மை வந்தடைகிறது.

நம் விதி என்ன என்பதை பட்டு அனுபவிக்கும் வரை நம்மால் உணர்ந்து கொள்ள முடியாது. உணர்ந்த பிறகு இழந்தவைகளை பெறுவது என்பது மிகவும் கடினம் ஆனால் நம் விதியை நாம் ஓரளவு அறிந்து கொள்ளவும் புரிந்து கொண்டு அதன் படி செயல் படவும் இறைவன் நமக்கு சில விஷேச அறிவை தந்திருக்கிறான். அத்தகைய விஷேச அறிவில் ஒன்று தான் ஜோதிடம் என்பது.

ஜோதிடம் நாம் அன்றாடம் சந்திக்கும் அனுபவிக்கும் எல்லா விஷயங்களையும் வரிக்கு வரி சொல்லாது அப்படி சொல்லும் என்று எதிர்பார்ப்பதும் மிகவும் தவறு நமக்கு வரக்கூடிய இன்ப துன்பங்களை ஓரளவு இன்னெதென்று அடையாளம் காட்டி மறைமுகமாக நம்மை எச்சரிப்பதே ஜோதிடத்தின் அடிப்படை அம்சமாகும். ஆனால் மனித மனதில் ஆணவமும் ஆசையும் பெருக்கெடுத்து ஓடும் போது ஜோதிடத்தை நம்ப மறுக்கிறான்.

பலவிதமான வாழ்க்கை அனுபவங்களை பெற்ற பிறகே ஜோதிடம் என்பதிலும் உண்மை இருக்க கூடுமோ என்ற எண்ணம் நமக்கு வருகிறது. அப்படி வருவது கண்கெட்ட பிறகு சூரியநமஸ்காரம் செய்வது போல் என்றாலும் இனி வரும் காலத்தை ஓரளவு எச்சரிக்கையோடும் அக்கறையோடும் நடத்தி செல்ல உதவும்.

இந்த கேள்வியை கேட்டிருக்கும் அன்பரும் நம் அனைவரை போலவே பட்ட பிறகு ஞானம் பெற்றிருக்கிறார். ஒருமுறை பால்குடித்து சூடு பட்ட பூனை மறுமுறை பாலைகுடிக்க தயங்குவதை போல பங்கு சந்தையில் பெற்ற அனுபவம் மீண்டும் அவரை அதில் இறங்க யோசிக்க வைத்திருக்கிறது. அதுவரையில் இவர் அதிஷ்டசாலி என்றே சொல்லலாம்.

உங்கள் ஜாதகத்தை மிக துல்லியமாக கணித்து பார்த்ததில் லாட்டரி ரேஸ் புதையல் போன்ற திடீர் அதிஷ்டங்கள் உங்களுக்கு இல்லை என்று தெளிவாக தெரிகிறது. யூகத்தின் அடிப்படையில் எதிர்பார்ப்பின் கணக்கு படி செய்கின்ற தொழில் அனைத்துமே லாட்டரி ரேஸ் போன்றதே ஆகும். அந்த வகையில் ஷேர் மார்கட் என்பதும் அதிஷ்டத்தை நம்பி நடக்கும் தொழில் என்றே சொல்லலாம். என்ன ஒரு வித்தியாசம் என்றால் லாட்டரி வாங்குவதற்கு அறிவு அவசியமல்ல ஆனால் ஷேர் மார்க்கட்டில் ஈடுபட சிறிதளவாவது புத்திசாலி தனம் அவசியமாகும்.

மேலும் எந்த ஒரு தொழிலை செய்தாலும் அதில் நமது சொந்த பலத்தை நம்பியே ஈடுபட வேண்டும். மரம் ஏறி கைவிட்டவனும் கடன் வாங்கி தொழில் செய்தவனும் ஒன்று என்று பெரியவர்கள் சொல்வார்கள். வட்டிக்கு பணம் வாங்கி அட்டிகை செய்து விட்டு அட்டிகையை விற்று வட்டியை மட்டுமே கொடுப்பது போல கடன் வாங்கி செய்யும் தொழிலும் ஆகிவிடும். எனவே மீண்டும் கடன் வாங்கி நஷ்டப்பட்டு வீணாக சங்கடப்பட்ட வேண்டாம் என்று உங்களுக்கு எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்.

மேலும் உங்கள் ஜாதகப்படி தானியம் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்தால் அது நல்ல விதத்தில் வளரும் உங்களை வாழ்விக்கும் என்று சொல்லலாம். எனவே மளிகைக்கடை வியாபாரத்திலேயே முழுக்கவனம் செலுத்துங்கள் இறைவன் உங்களை கண்டிப்பாக வளர வைப்பான். உங்கள் தொழில் பலவிதத்திலும் மேன்மையை நோக்கி செல்ல வாய்ப்பிருக்கிறது அடுத்து வரும் குரு பெயர்ச்சி கோச்சாரப்படி நல்ல வளர்ச்சியை தருமென்று தெரிகிறது. எனவே பொறுமையோடு காத்திருங்கள் கடவுள் உங்களுக்கு நன்மையை செய்வான்.





Contact Form

Name

Email *

Message *