Store
  Store
  Store
  Store
  Store
  Store

காணமல் போன சைக்கிள் சாம்பியன்


     ப்போதுமே இளைய தலைமுறையினருக்கு வயதானவர்களோடு அதிகம் பேச பிடிக்காது. அந்த பெரிசிடம் வாயை கொடுத்தால் சும்மா இருக்காது தொன தொணன்னு எதையாவது பேசி காதில் ரத்தம் வடிய வைத்து விடும் எப்போதும் பாரு நான் அந்த காலத்தில் அப்படி இருந்தேன் இப்படி இருந்தேன் இப்போது உங்களால் அப்படியெல்லாம் வாழ முடியாது என்று சொல்வார்கள். இன்னும் ஒருபடி மேலேய் போய் அந்த காலத்தில் இருந்தது எதுவும் இப்போது உருப்படியாக இல்லை எல்லாம் கெட்டு குட்டிசுவராகி விட்டது என்றும் அங்கலாய்ப்பார்கள் இப்படியெல்லாம் இளைஞர்கள் பெரியவர்களை பற்றி கருத்து சொல்வதை கேட்டிருக்கிறோம். 

இன்று சிறிய பிள்ளைகளாக இருக்கும் எவரிடமும் நம்மால் சரிக்கு சமமாக பேச முடியவில்லை நீங்கள் வாழ்ந்த காலம் ஒரு காலமா? அதை போய் இப்போது பெரிதாக பேசுகிறீர்களே? சாதரணமாக சென்னைக்கு ஒரு போன் செய்ய வேண்டும் என்றால் டிரங்கால் புக் செய்து மணிக்கணக்காக காத்திருக்க வேண்டும் லயன் கிடைத்து பேச ஆரம்பித்து விட்டால் பாதியிலேயே கட்டாகி விடும் சொல்ல வந்த விஷயம் நல்லதா கெட்டதா என்று கூட மறுமுனையில் இருப்பவர்களுக்கு தெரியாது. இன்று அப்படியா? ஒரு சிறு பட்டனை தட்டினாலே ஆப்பிரிக்காவில் எதோ ஒரு மூலையில் இருக்கும் உங்கள் பையனோடு பேசலாம் சின்னதாக ஒரு கம்யூட்டர் இருந்தால் அவனை நேருக்கு நேராக பார்த்து கூட பேச முடியும் இதுவல்லவா பொற்காலம் என்கிறார்கள் 

அவர்கள் சொல்வதும் ஒருவகையில் வாஸ்தவமான பேச்சி தான் முப்பது வருடத்திற்கு முன்பு எனது பெரிய தந்தையாரின் மூத்த மகன் கொழும்பில் காலமாகி விட்டார் அவர் காலமான செய்தியை ஊருக்கு தந்தியில் தெரியபடுத்தி இருந்தார்கள் அது எப்போது வந்து கிடைத்தது தெரியுமா? அவர் இறந்து நான்கு நாட்கள் கழித்து தான் இப்படி தகவல் பரிமாற்ற தாமதங்களால் எத்தனையோ விஷயங்கள் தள்ளிபோய் கிடைத்ததுண்டு சில கிடைக்காமலும் போனதுண்டு. ஆனால் அந்த நிலைமை முற்றிலுமாக இன்று மாறி விட்டது. சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே உரியவர்களுக்கு தெரியபடுத்தி விடலாம். 

நம் காடகநூர் முருகன் ஒரு நாள் என்னோடு பேசிகொண்டிருந்த போது ஒரு தகவலை சொன்னார் பக்கத்து ஊரில் எங்கள் பெரியப்பா காலமாகி விட்டார் உடனடியாக உறவினர்களை செல்போனில் அழைத்து தகவலை சொல்லி விட்டோம். எல்லோருமே மாலை நான்கு மணிக்கு முன்பு வந்து விட்டார்கள் முன்பு இந்த மாதிரி எந்த காரியமும் உடனடியாக செய்ய முடியாது ஒரு துக்க சமாச்சாரம் நடந்து விட்டால் துக்கம் சொல்ல ஆளை தேட வேண்டும். அவர்கள் பேருந்து பிடித்து ஊர் ஊராக சென்று சொல்ல வேண்டும் எல்லோருக்கும் தகவல் தெரிந்து வந்து சேர்வதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும் என்று சொன்னார். நிச்சயம் இது மிக சரியான கருத்து தான். 

நவீன தகவல் தொடர்பு சாதனங்களால் இப்படி சில நன்மைகள் இல்லை என்று சொல்லிவிட முடியாது. அவசரமாக ஆம்புலன்சுகளை அழைக்கும் போதும் தேவைபடுபவர்களுக்கு தேவைப்பட்ட ரத்த வகைகளை சேகரிப்பதற்கும் செல்போன்கள் மிகவும் வசதியாக இருக்கிறது. இது ஒரு புறம் இன்னொருபுறம் இதனால் ஏற்பட்டிருக்கும் கலாச்சார சீரழிவுகளையும் பல குடும்பங்களில் பிரச்சனைகளையும் நம்மால் மறுத்து விட இயலாது. எனவே இந்த காலம் நன்றாக இல்லை அந்த காலம் நன்றாக இருந்தது என்று சொல்பவர்களை இன்றைய தலைமுறையினர் ஒரு விசித்திர உயிரினமாகவே கருதுகிறார்கள் ஆனால் பெரியவர்கள் அப்படி ஏன் சொல்கிறார்கள்? என்று யாரும் சிந்தித்து பார்ப்பதே கிடையாது.

இப்போது இருக்கும் இளைஞர்களை குறை கூறுவதை விட நாம் இளைஞர்களாக இருந்த போது எப்படி இருந்தோம் என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும். இரவு இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்து விட்டு வந்தால் அப்பா திட்டுவார் அதனால் அவர் நமக்கு விரோதி. வேலை வெட்டிக்கு போகவேண்டும் என்று சிந்திக்காமல் ஊர் பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து கொண்டு திரிந்தால் அப்போதும் அப்பா திட்டுவார் அதனால் அவர் நமக்கு விரோதி. தலைக்கு எண்ணெய் போடாமல் முகத்தை சவரம் செய்யாமல் காதலில் தோற்ற சினிமா கதாநாயகன் போல் தெருவில் திரிவோம் அப்போதும் அப்பா திட்டுவார் அதனாலும் அவர் நமக்கு விரோதி. ஏறக்குறைய நம் அப்பாவும் அவர் அப்பாவோடு அப்படி தான் நடந்திருப்பார் நாமும் அப்படியே நடந்தோம் இன்று நம் பிள்ளைகளும் அப்படி நடக்கிறார்கள் இது காலம் தோறும் தொடர்ந்து வரும் ஒரு சங்கலி போன்றது தான்.

இருந்தாலும் இப்போது உலகம் கண்டுகொண்டிருக்கும் அதிவேக வளர்ச்சியில் பழையகாலத்தில் இருந்த பல விஷயங்கள் கண்ணுக்கே தெரியாமல் மண்மூடி போய்விட்டன. அவைகளை சற்று ஆழமாக சிந்தித்து பார்த்தோம் என்றால் அந்த விஷயங்கள் மறைந்ததன் மூலம் எத்தனை குடும்பங்கள் அழிந்து போயிருக்கின்றன எத்தனை உயிர்கள் ஊசலாடி கொண்டிருக்கின்றன என்பது தெளிவாக தெரியும். வளர்ச்சி என்று சொல்வது இன்னொன்றை விட அதிகமாக வளர்வது தானே தவிர இன்னொன்றை அழிப்பது அல்ல ஆனால் இன்றைய வளர்ச்சி அழிக்கிறது அதனாலேயே பழையகாலத்தை நினைத்து ஏக்கம் அடையவேண்டிய நிலை இருக்கிறது. 

இன்று வீடுகள் தோறும் தொலைக்காட்சி பெட்டிகள் இருக்கின்றன அஞ்சரை பெட்டிகள் இல்லாத வீடுகள் இருக்கலாம் தொலைகாட்சி பெட்டி இல்லாத வீடுகள் எதுவுமே இல்லை. அமெரிக்காவில் நடப்பதை அடுப்பங்கரையில் உட்கார்ந்து பார்த்து மகிழ்கிறோம். நவீனம் தந்த நல்ல பரிசு தொலைக்காட்சி பெட்டி ஆனால் இந்த பெட்டி நம் வீட்டிற்குள் நுழைந்த பிற்ப்பாடு எவை எவையெல்லாம் வீட்டை விட்டு அல்ல உலகத்தை விட்டே போயிருக்கிறது என்பதை நினைத்து பார்க்க தவறி விடுகிறோம். 

ஊருக்கு வெளியே பெரிய மைதானம் இருக்கும் அங்கே வந்து ஒரு கும்பல் கூடாரம் அடிக்கும் அதில் ஒருவர் கம்பீரமாக சைக்கிளில் ஏறி வட்டமாக சுற்றி வருவார் ஒருநாள் அல்ல இருநாள் அல்ல பத்து பதினைந்து நாட்கள் இரவு பகலாக அவர் சுற்றி கொண்டே இருப்பார்.உணவு, உறக்கம், இயற்க்கை உபாதை எல்லாமே அவருக்கு அந்த சைக்கிளில் தான் நடக்கும் வேடிக்கை பார்க்க இரவு நேரத்தில் ஊர் முழுவதுமே கூடி விடும். மக்களை மகிழ்விக்க அந்த கும்பலிலிருந்து எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர் என்று வேடமணிந்த கலைஞர்கள் வந்து ஆடுவார் பாடுவார்கள் மொத்த ஊருமே உற்சாகத்தில் பொங்கி வளிந்து காசுகளை கொடுப்பார்கள் இன்று அந்த சைக்கிள் சாம்பியன் எங்கே போனார் அவரை நம்பி இருக்கும் ஒரு கூட்டம் என்ன ஆனது? யாருக்கும் விடை தெரியாது.

சைக்கிள் சாம்பியன் மட்டும் தானா? எப்போதாவது ஒருமுறை வந்து சின்னஞ்சிறுவர்களின் கண்களை அகல விரிய செய்யும் சர்க்கஸ் கூடாரம் புராண மாந்தர்களை கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தும் பொம்மலாட்டம், பாவைகூத்து இவையெல்லாம் எங்கே போனது? ஒரே மனிதன் ஆணாகவும் பெண்ணாகவும் மாறி மாறி குரல் கொடுத்து கூட்டத்தினரை மெய்சிலிர்க்க செய்வானே அந்த கலைகள் என்ன ஆனது? அதை நம்பி இருந்த நூற்றுகணக்கான தொழிலாளிகளின் வாழ்க்கை இருக்கிறதா? இல்லையா? யாருக்குமே விடை தெரியாது. கண்ணில் படுவதை எல்லாம் தின்று கொளுத்து ஏப்பம் விடும் பகாசூரனை போல் சின்னஞ்சிறிய தொலைக்காட்சி என்ற ஒரு மாய பெட்டி எல்லா கலைகளையும், எல்லா கலைஞர்களையும் நீற்குமளி போல அழித்து விட்டது.

மனிதனின் அறிவை வளர்க்க விட்டு திறமை சிறக்க விட்டு மகிழ்ச்சியை வாரிக்கொடுத்த இந்த கலைஞர்களை தொலைக்காட்சி என்ற நவீனம் கெடுத்து விட்டதை போல ஊரில் சொந்தமாக தொழில் செய்து கம்பீரமாக வாழ்ந்த பலரையும் நவீன தொழில்நுட்பமும், நவீன பொருளாதார சித்தாந்தமும் கண்ணுக்கு தெரியாமலே மறைந்து போக செய்து விட்டது. நெஞ்சு எரிச்சல் வயிற்று உப்பிசம் வந்தால் ஒரு சோடா குடி சரியாகி விடும் என்பார்கள் மூலைக்கடைக்கு போய் கோலிசோடா ஒன்று வாங்கி குடித்தால் நல்ல ஏப்பம் வரும் சில நிமிடங்களில் எதோ ஒன்றிலிருந்து விடுதலை பெற்றது போல உணர்வு வரும் இன்று கோலிசோடா இருந்த இடத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் சோடாக்கள் இடம்பிடித்து விட்டன இதனால் நேர்ந்தது என்ன?

சோடா கடை நடத்தி பெண்டு பிள்ளைகளை கரையேற்றிய செட்டியாரோ முதலியாரோ மூலையில் படுத்து விட்டார்கள். தயாரிக்கும் சோடாக்களை கடைதோறும் கொண்டு போட்டு காசு வசூல் செய்யும் அழகேசனும், முருகேசனும் வேலையில்லாமல் சாராய கடையிலே முடங்கி போனார்கள் இதனால் அவர்கள் குடும்பம் நடுத்தெருவிற்கு வந்து விட்டது . ஒருவர் ஒரு தொழிலை செய்தால் அதை நம்பி பத்து பேர் பிழைப்பார்கள். குறைந்தபட்சம் ஐந்து குடும்பமாவது. பசியில்லாமல் சாப்பிடும் ஆனால் இன்று வந்த பெரும் முதலாளிகளின் கோக்க கோலக்கலளால் முனியன் வாயிலும் குப்புசாமி வயிற்றிலும் மண் விழுந்து விட்டது 

இது மட்டுமா அம்மி கொத்துபவன், குடை ரிப்பேர் செய்பவன் என்று எத்தனையோ தொழிலாளிகள் காணமல் போய்விட்டார்கள். இன்று நமது பாழாய் போன அரசாங்கம் வெற்றிலை பாக்கு கடை கூட வெள்ளைக்காரன் வந்து வைக்கலாம் என்று கதவை திறந்து விட்டது இதனால் ஏற்பட போகும் அபாயத்தை நினைத்தால் நிஜமாகவே பாரதி சொல்வது போல நெஞ்சி பொறுக்கவில்லை நம் ஊர் நாடார் மளிகைக்கடை, செட்டியார் பாத்திர கடை, சேட்டு நகைக்கடை ஏன் நடுத்தெருவில் தள்ளுவண்டியில் பாணி பூரி விற்கிறானே அவன் கடை கூட வால்மார்ட் முதலாளிகளின் கைவசமாகி காணமல் போய்விடும். அதனால் தான் இந்த கொடுமைகள் இப்போது மட்டுமே நடப்பதனால் தான் அந்த காலம் எவ்வளவோ பரவாயில்லை என்று பழைய கதையை பேச வேண்டிய நிலமை இருக்கிறது



Contact Form

Name

Email *

Message *