Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஐந்து பைசாவில் உலகம் சுற்றலாம் !


      டித்தவன் பாட்டை கெடுத்தான் எழுதியவன் ஏட்டை கெடுத்தான் என்று சொல்வார்கள் இதன் அர்த்தம் என்ன? பாட்டு என்பதும் எழுத்து என்பதும் ஒழுங்கு படுத்தப்பட்ட கருவிகள் இவைகள் இப்படி தான் இருக்க வேண்டுமென்ற இலக்கணத்தோடு இருப்பவைகள் இவைகளை படித்தவனும் எழுத தெரிந்தவனும் கெடுத்து விடுவான் என்பது தான் இதன் பொருளா? என்று சிந்தித்தால் நிச்சயம் இல்லை என்று தான் தெளிந்த சிந்தனைக்கு பிறகு பதில் கிடைக்கும். அப்படி என்றால் இதன் உண்மை பொருளென்ன?

இந்த இடத்தில் படிப்பு என்பதற்கும் எழுத்து என்பதற்கும் வேறு பொருள் இருக்கிறது. வீட்டு கணக்கு கடை கணக்கு பால் கணக்கு என்று பல கணக்குகள் இருக்கிறது இவைகளை முறைப்படி எழுதுபவனை எழுத்தன், எழுத்தாளர் என்று சொல்வார்கள் ஆனால் உண்மையில் இவர்கள் எழுத்தாளர்களா? நிச்சயம் கிடையாது இருப்பதை பதிவு செய்கிறார்கள் அதில் இவர்களது அறிவுக்கும் கற்பனைக்கும் இடமே கிடையாது. எழுத்தாளர்கள் என்று அழைக்கபட்டாலும் கூட இவர்கள் அது அல்ல உண்மையான எழுத்தாளர்கள் யார்? மனதில் ஊறி கிடக்கும் கருத்துக்களை பிறருக்கு புரியும் வண்ணம் பிறருக்கு பயன்படும் வண்ணம் எழுதுபவன் எவனோ அவனே எழுத்தாளன். படிப்பாளி என்பதும் பல புத்தகங்களை படித்தவனை மட்டுமே குறிப்பிடுவது கிடையாது படித்ததை தானும் புரிந்து நடைமுறைபடுத்தி மற்றவர்களுக்கு வழிகாட்டுபவனே படித்தவன் படிப்பாளி .

வெறும் பக்கங்களை மட்டுமே படிப்பவன் எழுத்துக்களை மட்டுமே எழுதுபவன் நிச்சயம் படித்ததையும் எழுதியதையும் புரிந்துகொள்ளாமல் கெடுத்துவிடுவான் அதனால் தான் படித்தவன் பாட்டை கெடுத்தான் எழுதியவன் ஏட்டை கெடுத்தான் என்று நமது பெரியவர்கள் மிக அழகாக சொன்னார்கள். அதாவது படிப்பும் எழுத்தும் அறிவுபூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்க வேண்டும் அப்போது தான் அதில் அழகு இருக்கும். இன்று நிறையப்பேர் உணர்வும் அறிவும் இல்லாமல் வறண்ட பாலைவனம் போல இருப்பதற்கு என்ன காரணம் சற்று ஆழமாக சிந்திக்க வேண்டிய விஷயம்.

கடந்த இருபது வருடமாகவே நமது கல்வி முறை இயந்திரமயமாகி விட்டது பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி குழந்தைகளை புத்தகங்களில் இருப்பதை படி மனப்பாடம் செய் அதை அப்படியே வாந்தி எடுப்பது போல் எழுது என்று தான் மீண்டும் மீண்டும் நிர்பந்திக்க படுகிறது. இதனாலையே தற்போதைய இளைய வர்க்கம் உலக வாழ்க்கைக்கான அறிவை முழுமையாக பெறாமல் அரைகுறையாக வெந்து அஜீரணத்தை ஏற்படுத்தும் பதார்த்தத்தை போல தன்னையும் சமூகத்தையும் கெடுத்து கொண்டிருக்கிறார்கள். இன்றைய குழந்தைகளின் கற்பனை சிறகுகள் அறிவு வானில் சிறகடித்து பறக்க வேண்டுமென்ற ஆசை எத்தனிப்புகள் நெருப்பு வைத்து கொளுத்தபடுகிறது. படிப்பது என்பது சம்பாதிக்க மட்டுமே எந்த படிப்பு வருமானத்தை தருகிறதோ அதுமட்டுமே படிப்பு என்ற நிலை உருவாகி விட்டது இது மிகப்பெரும் அபாயம்.

இருபது வருடங்களுக்கு முன்பு இளைஞர்களாக இருந்தவர்களின் மனதில் தெளிவும் கற்பனை வளமும் அறிவு கூர்மையும் மிக செழிப்பாக இருந்தது அதனாலேயே அவர்கள் இன்று கூட நெஞ்சில் ஈரமுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் அத்தகைய சூழல் எப்படி அமைந்தது? இப்போது ஏன் அப்படி அமையவில்லை? என்ற கேள்வி சுலபமானதாக இருக்கலாம் ஆனால் அது அவசியமான அர்த்தம் தேடும் கேள்வியாகும்.

ஒருமனிதனின் அறிவு வளர வேண்டுமென்றால் அவன் ஒரு பொருளை மற்ற பல பொருட்களோடு ஒப்பிட்டு பார்த்து பழக வேண்டும் அப்படி பழகினால் மட்டுமே அறிவு ஆழமாகவும் விசாலமாகவும் வளரும் அப்படி வளர உறுதுணையாக இருந்தது விடுகதைகள் இப்படி நான் சொல்வதை குழந்தை தனமென்று நீங்கள் யாரும் கேலி செய்தாலும் அதில் எனக்கு அக்கறை இல்லை அப்போதெல்லாம் வீட்டில் ஒரு பாட்டி அல்லது வயதான அத்தை இப்படி யாரவது இருப்பார்கள் அவர்களுடைய மிக முக்கியமான பணி குழந்தைகளுக்கு கதை சொல்வது. உறக்கம் வராமல் உருண்டு புரண்டு கொண்டிருக்கும் குழந்தைகளை அருகில் படுக்க வைத்து முதுகில் தட்டி கொடுத்து கதைகளை சொன்னால் அவைகள் உறங்கவும் செய்யும் நல்ல கருத்துக்களை கனவுகளோடு சேர்த்து மனதில் உறையவைத்து கொள்ளவும் செய்யும்.

குழந்தைகளுக்கு சொல்லப்படும் கதைகள் சிலநேரம் மிக சுருங்கி விடுகதைகளாக ஆகிவிடும். விடுகதை என்றால் ஒருபொருளை மறைத்து வைத்து அது இன்னதென்று கண்டுபிடித்து விடுவிக்கும் கதையே விடுகதையாகும். அப்பா பணத்தை எண்ண முடியாது அம்மா புடவையை மடிக்க முடியாது அது என்ன என்று குழந்தைகளிடம் கேட்டால் ஆரம்பத்தில் ஒன்றும் புரியாமல் திருதிருவென விழிப்பார்கள் பிறகு பணமென்றால் நாணயம் நாணயம் போலவே என்ன பொருள் இருக்கிறது? ஆற்றில் அடித்து வரும் கூழாங்கல்லா? விதைக்காக மூலையில் கொட்டி வைத்திருக்கும் வேர்கடலை பயிரா? என்று சிந்திப்பார்கள். அதன் பிறகு வானத்திலிருக்கும் நட்சத்திரங்கள் கூட காசுகள் போலவே இருக்கிறதே அதுவாக இருக்குமோ? என்று முடிவுக்கு வந்து அப்பா பணமென்றால் நட்சத்திரங்கள் தானே? என்று கேட்கும். அத்தை பாட்டி ஆமாம் என்று சொல்லிவிட்டால் அடுத்தது அம்மா புடவை வானமாகத்தான் இருக்கும் ஏனென்றால் வானத்தை தானே மடிக்க முடியாது என்ற முடிவிற்கு குழந்தைகள் வந்துவிடுவார்கள்.

ஒரு சிறிய விடுகதைக்குள் கற்பனை செய்து பார்க்க எவ்வளவு விஷயங்கள் அடங்கி கிடக்கிறது? இதுவாக இருக்குமோ? அதுவாக இருக்குமோ? என்று நினைக்கும் போதே அதை அதை பற்றிய அறிவும் ஞானமும் துளிர்விட ஆரம்பித்து விடுகிறது. இயற்கையின் மீது ஓர் ஆர்வமும் அதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற தூண்டுதலையும் குழந்தை பெறுகிறது. அதே குழந்தையிடம் ஐந்து பைசா செலவில் உலகமுழுவதும் சுத்துபவன் யார் என்று வேறொரு விடுகதையை போட்டால் காற்றா? அது சுற்றி வர காசு வேண்டாமே? பறவை சுற்றுவதற்கும் பணம் அவசியம் இல்லையே? பிறகு யார்? ஐந்து பைசா செலவில் உலகம் சுற்றும் வாலிபன் என்று குழம்பும் அதிகம் குழம்பாதே அது தபால்கார்டு என்றவுடன் அட ஆமாம் என்று அதிசயபடுமே இதை போல நாமும் எதாவது புதிதாக சொல்ல வேண்டும் என்ற துடிப்பு குழந்தைக்கு வந்துவிடுவது இயற்க்கை.

அப்போது எங்கோ தொலைவில் ரேடியோவிலிருந்து மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே என்ற பாட்டு காற்றில் மிதந்து வருகிறது. குழந்தையின் மெல்லிய மனது சிந்தனை சிறகை விரிக்கிறது அதற்கு புதிதாக ஒரு விடுகதை கிடைக்கிறது. அந்த விடுகதையை ஆரம்பமாவது தண்ணிக்குள்ளே அது ஆடி அடங்குவது ஒயருக்குள்ளே அது என்ன? சொல்லு பார்ப்போம் என்று நம்மிடம் கேட்கும் அனுபவத்தில் குழந்தையை விட சற்று வளர்ந்த நாமே இந்த விடுகதையை கேட்டவுடன் என்னவாக இருக்கும் அது என்று சிந்தித்து பார்ப்போம் மீன் என்பது தண்ணீருக்குள் ஆரம்பமாகிறது ஆனால் அது ஆடி அடங்குவது வயிருக்குள்ளே தானே ஒயருக்குள்ளே இல்லையே? என்று யோசிப்போம் அதன் பிறகு குழந்தை அது தான் கரண்ட என்று சொன்னவுடன் குழந்தையின் புத்திசாலி தனத்தை கண்டு வியந்து போவோம் அதை பாராட்டவும் செய்வோம் ஒரு மனிதனின் உயர்வுக்கு அறிவு வளர்ச்சிக்கு மற்றவர்களின் பாராட்டு என்பது தான் முதல் உரமாகவும்.

இன்று நம் வீடுகளில் பாட்டிமார்கள் இல்லை அத்தைகளும் இல்லை குறுக தரித்த குறள் போல நம் வீடுகளும் சுருங்கி விட்டது உறவுகளும் சுருங்கி விட்டது. இதனால் நம் குழந்தைக்கு கதை சொல்லி தூங்க வைக்க யாருமில்லை அதன் கற்பனைக்கு தீனி போட ஆளுமில்லை பிறகு எப்படி சுய சிந்தனை வளரும்? சுய அறிவு பெருகும்? ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்பது போல மனப்பாடம் மட்டுமே செய்ய தெரிந்ததனால் தான் இன்றைய படித்தவன் பாட்டை கெடுக்கிறான் எழுதியவன் ஏட்டை கெடுக்கிறான். நான் இங்கு பாட்டு என்று சொல்வது வாழ்க்கை பாட்டை ஏடு என்று சொல்வது பண்பாட்டு ஏட்டை இரண்டும் கெடாமல் இருக்க சற்று காலத்தை பின் நகர்த்தி மறைந்து போன இல்லை இல்லை மறைந்து கிடக்கின்ற விடுகதை போன்ற பொக்கிஷங்களை நமது குழந்தைகளுக்காக மீட்டெடுத்து வருவோம்.



 

Contact Form

Name

Email *

Message *