Store
  Store
  Store
  Store
  Store
  Store

யுத்த முனையில் தோன்றிய மதம்

இந்து மத வரலாற்று தொடர் 43


    ரு மதத்தின் வரலாற்றை ஆராயும் போது அதை உருவாக்கிய ஆச்சார்யாவின் காலத்திலிருந்தே துவங்குவது வழக்கம் இது ஒரு சமயத்தில் சரியாக இருக்கலாம் ஆனால் எல்லா சமயத்திலும் சரியாக இருப்பது இல்லை. அதாவது சீக்கிய சமயம் உருவாகிய காலம் ஏறக்குறைய பதினைந்தாம் நூற்றாண்டு அல்லது பாதினாராம் நூற்றாண்டு என்று குருநானக்கின் பிறப்பை அடிப்படையாக வைத்து கணிக்க படுகிறது. சீக்கிய மதத்தை பொறுத்தவரை இந்த முறை சரியானது தானா? என்பதை மிக ஆழமாக சிந்திக்க வேண்டிய நிலை இருக்கிறது. 

சிந்து நதி பாயும் இடத்தில் தோன்றிய நாகரீகத்தை சிந்துசமவெளி நாகரீகம் என பெயரிட்டு அழைப்பது வழக்கம் அந்த நாகரீகம் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்தியாவின் ஆதி நாகரீகம் அது தான் என்றும் வராலாற்று ஆய்வாளர்களால் சொல்ல படுகிறது. சிந்து வெளியில் தோன்றிய நாகரிகம் ஆரியர்களுக்கு சம்மந்தமில்லாதது ஆரியர்கள் இந்த நாட்டிற்குள் வருவதற்கு முன்பே உள்ளது திராவிடர்கள் அல்லது முண்டர்கள் என்ற இனத்தாரின் நாகரீகம் அது என்றும் நம்பப்பட்டு வருகிறது. சிந்து நாகரீகம் வராலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடும் படி ஐயாயிரம் வருஷங்களுக்கு முற்பட்டது தானா? அதில் ஆரிய கலப்பு உண்மையாகவே இல்லையா? என்பவைகள் எல்லாம் இன்றுவரையிலும் பல வாதங்களை உருவாக்கிய வண்ணமே இருக்கிறது. நாம் அந்த வராலாற்று குழப்பங்களுக்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை. சிந்து பூமியில் அந்த நாகரீக சுவடுகளின் வெளிதோற்றத்தை ஒரு சிறிது மட்டுமே பார்க்க போகிறோம்.


சிந்து நகரத்தின் வீடுகள் திட்டமிட்டு முறைப்படி வரிசையாக அமைக்கப்பட்டு இருந்ததும் அந்த வீடுகளில் நவீன நாகரீக வீடுகளை போலவே பல அறைகளும் குளியல் அறைகளும் கழிவு அறைகளும் இருந்ததாகவும் வீடுகளில் புழங்குகின்ற தண்ணீர் சரியான முறையில் பாதாள சாக்கடை வழியாக வெளியேற்ற பட்டதையும் அறிய முடிகிறது. அவைகளில் மிகவும் முக்கியமான ஒரு சங்கதி இருக்கிறது. சிந்து நகரத்தின் மையபகுதியில் நீள்சதுர அமைப்பில் மிக பெரிய நீர்நிலை ஒன்று அதாவது தற்காலத்திய நீச்சல் குளம் போல அமைக்க பட்டிருந்தாகவும் அதில் அக்கால மக்கள் பல சமய சடங்குகளை செய்ததாகவும் ஆராய்ந்தவர்கள் சொல்கிறார்கள். 

இதை அப்படியே மனதில் வைத்து தற்போதைய சீக்கிய கோவிலான பொற்கோவில் இருக்கும் இடத்திற்கு வருவோம். இங்கும் ஆலயத்தை சுற்றி தெளிவான சுத்தமான தண்ணீர் தேக்கபட்டுள்ளதை காண முடிகிறது. கண்களை மூடி நமது சிந்தனை தேரை சிந்து சமவெளி நாகரீக காலத்திற்கும் இப்போதைய பொற்கோவிலின் அமைப்பிற்கும் ஒரு பயணத்தை மேற்கொண்டோம் என்றால் பழைய சிந்து நாகரீகத்திற்கும் சீக்கிய மதத்திற்கும் ஒரு தொடர்பு நூலிழை போல இருப்பதை அறியலாம். இப்படி நான் சொல்வதற்கு மிக முக்கிய காரணங்கள் இருக்கிறது. சீக்கிய சமய வழிபாட்டில் நிலமும் நீரும் பின்னி பிணைந்துள்ளதை பார்க்கும் போது சீக்கிய மத தொடர்ச்சி குருநானக்கின் காலத்திற்கு முன்பே துவங்கியதாக எண்ணலாம். வேண்டுமானால் மக்கள் மனதில் நீருபூத்த நெருப்பாக புகைந்து கொண்டிருந்த இயற்கையோடு கலந்த இறைவழிபாட்டு முறையை மகான் குருநானக் சாம்பலை விலக்கி நெருப்பை தூண்டி விட்டார் என்று சொல்லலாம். 


பாரத திருநாட்டின் பூர்வகுடி மக்கள் வாழ்ந்த சிந்து நதி கரையின் மீது அடுக்கடுக்கான அந்நிய தாக்குதல்கள் ஒருமுறை அல்ல பலமுறை நிகழ்ந்தது. ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தபோதும் சிந்துநதி ஓரமாக வாழ்ந்த மக்களை போரில் வென்றுதான் உள்ளே நுழைந்தார்கள். அவர்களுக்கு பிறகு வந்த யவனர்கள், ஹூணர்கள், சைத்தியர்கள், துருக்கியர், ஆப்கானியர், மத்திய ஆசியர் அனைவருமே பஞ்சாப்பின் செழுமையான மண்ணை மிதித்து இரத்த களரியாக்கிய பிறகே மற்ற பகுதிகளுக்குள் நுழைந்தனர். அதாவது நம் நாட்டின் மீது நடந்த ஒவ்வொரு படையெடுப்பையும் முதலில் அனுபவித்தது பஞ்சாப் மக்களே ஆவார்கள். 

தொடர்ச்சியான போராட்டங்களால் பண்பட்ட பஞ்சாப் பண்பாடு சீரழிந்தது. மக்களில் இனக்கலப்பு என்பது சர்வசாதரணமாக நடந்தது. எதிரிகளால் மட்டுமல்ல உள்நாட்டில் உள்ள பல மக்களும் பஞ்சாப் வயல்களின் செழுமையை கபளீகரம் செய்ய அப்பகுதியில் வலுகட்டாயமாக குடியேறினர். இதனால் ஆதி சிந்துமக்களின் இனமே முழுமையான கலப்படத்தை அடைந்து விட்டது. இதை பற்றி பல வடமொழி நூல்கள் விரிவாகவே சொல்கின்றன. ஒருகாலத்தில் இனக்கலப்பு ஏற்பட்ட பஞ்சாப் பகுதிகளுக்குள் சென்று வருவதே தீட்டு என்று கருதப்பட்டது. அங்கே சென்று வந்த பல வைதீகர்கள் தோடி என்ற பரிகாரத்தை செய்த பிறகே தங்களது கூட்டத்தாரோடு சேர்த்து கொள்ளபட்டார்கள். அந்த அளவு பஞ்சாப் மண் கற்பழிக்க பட்டது. 


குப்தர் காலத்திற்கு பிறகு வடமேற்கு பகுதிகளில் ஜைனம் பெளத்தம் போன்ற மதங்கள் மிகபெரிய செல்வாக்கை பெற்றது. தட்சசீல நகரத்தில் பெளத்த மதத்தை போதிப்பதற்காகவே தனி பல்கலைகழகம் இருந்தது. இவ்வட்டாரத்தில் சர்வாஷ்தி வாதம் என்ற பெளத்த பிரிவு தோன்றியது. அது பஞ்சாப் பகுதியில் உள்ள மலைபிரதேசங்கள் வரை பரவியது. அப்பகுதில் சக்தி தேவியை வழிபடும் சாக்த பிரிவும் தாந்தீரிக பிரிவும் பெரும் செல்வாக்கை பெற்றிருந்த போதும் புத்த மதம் மூக்கை நுழைப்பதற்கு எந்த தடையும் அங்கே இருக்கவில்லை புத்த மதமும் சாக்த மதமும் பஞ்சாப் மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு ஒரு புதிய வடிவத்தை அங்கே எடுத்தது என்றே சொல்லலாம். அதாவது புத்த மதத்தில் உள்ள ஆழமான அறிவு பகுதி சாக்தம் மற்றும் தாந்தீரிக பிரிவுகளோடு. இரண்டற கலந்தன.

இன்று கூட சாக்தமத தாக்கத்திலிருந்து பஞ்சாப் முற்றிலுமாக விடுபடவில்லை என்றே சொல்ல வேண்டும். பஞ்சாப் மாநிலத்தின் தலைநகர் கூட சக்தி தேவியின் பெயராலையே அழைக்கபடுகிறது. அதாவது தேவியின் சண்டி என்ற திவ்விய நாமமே சண்டிகார் என்று விளங்கி வருகிறது. புகழ் பெற்ற பல காளி கோவில்கள் அமிர்ததரஸ் நகர பகுதிகளில் இருக்கிறது. இதுவும் அல்லாமல் பஞ்சாப்பின் வடக்கே உள்ள சிம்லா என்ற நகரமும் சக்தி தேவியின் சியாமளா என்ற பெயரின் மறுவடிவமே ஆகும். சாக்தம் மற்றும் தாந்தீரிகம் விவசாய பகுதிகளை பின்புலமாக கொண்டது. எனவே பஞ்சாப் விவசாயிகளின் மனதை இவைகள் கவர்ந்ததில் வியப்பில்லை. அதே போல வீரசைவம் காஷ்மீர சைவம் என்பவைகளும் பஞ்சாப் மக்களின் உயிர் துடிப்பாக இருந்தது. 


பத்தாம் நூற்றாண்டிருக்கு பிறகு வந்த சூபிய ஞானிகளின் இனிய தத்துவ பாடல்களும் நாதர் மரபு என்ற சித்தார்களின் வழிபாட்டு முறைகளும் கபீர் பந்தியினரின் செல்வாக்கும் பஞ்சாப் மக்களின் வாழ்க்கையோடு இணைந்து இருந்த போதே இஸ்லாமிய படையெடுப்புகள் அப்பகுதியில் மிக கொடூரமாக நடந்ததாலும் ஆயுத முனையில் பல அப்பாவிகள் இஸ்லாமியர்களாக மாற்ற பட்டதாலும் கள்ளம் கபடம் இல்லாத உழவர் பெருமக்களான பஞ்சாபியர் அரபு மதமான இஸ்லாமியத்தில் இருந்து கூட சில பகுதிகளை தங்களது வழிபாட்டுக்கு என்று எடுத்து கொண்டார்கள்.

சிந்து சமவெளி நாகரீகம் துவங்கி முஸ்லிம் படையெடுப்புகள் வரை எதற்காக சொல்கிறேன் என்றால் சீக்கியர் மத கருத்துகளுக்குள் இவைகள் அனைத்தும் செல்வாக்கு மிக்கதாக அடங்கி உள்ளது. அதனால் சீக்கிய மதம் பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு இளைய மதம் என்று கருத இயலாது அதற்கு சில ஆயிரம் ஆண்டுகள் பின்னணி உண்டு என்பதை வாசகர்கள் விளங்கி கொள்ளவே சிறிது தொட்டு காட்ட வேண்டிய நிலை வந்தது. இனி சீக்கிய மதத்தின் உயிர் மூச்சான கொள்கைகள் என்னவென்று சிறிது காண்போம்.



Contact Form

Name

Email *

Message *