Store
  Store
  Store
  Store
  Store
  Store

உறங்குவது அரசா? அதிகாரியா?



        ந்திர மாநிலத்தில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் பல அப்பாவி உயிர்கள் பலியாகி இருக்கின்றன பலர் படுகாயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் நடந்த சம்பவத்தை நேரில் கண்ட கணக்குவழக்கற்ற மக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு கொடுமையான மன அழுத்தத்தால் வருந்தி கொண்டிருக்கிறார்கள் உறவுகளை பறிகொடுத்த பல சொந்தங்கள் அடுத்ததாக நமது வாழ்வின் கதி என்னவாகும் என்று அச்சத்தோடு சிந்தனை செய்து கொண்டிருக்கிறார்கள். போனவர்கள் போனவர்கள் தான் ஆண்டாண்டு காலம் அழுது புலம்பினாலும் மாண்டார் வருவதில்லை செத்தவர்களை மறந்து விட்டு ஆகவேண்டிய காரியங்களை கவனிப்போம் என்று பலரும் இயல்பு வாழ்க்கையை நோக்கி நடைபோட துவங்கி விட்டார்கள்.

பத்திரிக்கைகளும் தொலைகாட்சிகளும் வேலையில்லாமல் கிடந்தவன் கையில் கந்தல் துணியை கொடுத்து கிழி என்று சொன்னது போல் குண்டு வெடிப்புக்கான காரண காரியங்களை அலசி ஆராய்ந்து ஓய்ந்து விட்டார்கள். ஆளும் கட்சியை எதிர்கட்சியும் ஆளும் கட்சி தனது அலுவலர்களையும் பரஸ்பரம் குற்றம் சாட்டி ஓய்ந்தாகி விட்டது குண்டு வைத்தது அவனா இவனா என்ற பட்டிமன்றம் கூட அடங்கி விட்டது இது நமக்கு புதிய விஷயம் இல்லை பழகி போன ஹைதரலி காலத்து பழைய சங்கதி குண்டு வெடிப்பு சத்தம் சில நிமிடம் கேட்குமென்றால் அதை பற்றி விமர்சனம் வாத பிரதிவாதங்கள் சில மணி நேரங்கள் கேட்கும் அவ்வளவே. இதற்கு முன்பு எத்தனையோ குண்டு வெடிப்புகளை நாம் கண்டுவிட்டோம் அவற்றிலிருந்து பெற்ற பாடங்களில் சிறிதளவாவது கடைபிடிக்கிறோமா என்றால் வருத்தம் மட்டுமே மிஞ்சுகிறது எதையும் நாம் கடைபிடிப்பது இல்லை.

மத்திய அரசு சொல்கிறது எங்களது உளவுத்துறை முன்பாகவே தகவலை மாநில அரசுக்கு கொடுத்துவிட்டது மாநில அரசோ நகரத்தின் காவல் துறையோ தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை அதனாலையே விபரீதம் நடந்திருக்கிறது என்று மத்திய அரசுக்கு எந்த பாதிப்பும் வந்துவிட கூடாது என்பதில் கரிசனமாக இருக்கும் ஆந்திர மாநில அரசு நடந்த சம்பவத்திற்கு நாங்களே பொறுப்பாளி என்று நல்லபிள்ளையாக பழியை தன் மீது போட்டு கொள்கிறது. இவற்றை பார்க்கும் போது அழுவதா சிரிப்பதா என்று நமக்கு புரியவில்லை நாங்கள் சொல்லிவிட்டோம் அவர்கள் கவனிக்கவில்லை என்று பொறுப்பை தட்டி கழித்து பேசுவது ஒரு நல்ல அரசின் பொறுப்பாக தெரியவில்லை மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எடுக்க வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் கடமையும் மத்திய அரசுக்கு இருக்கிறது. நகர காவல் துறையினர் நிலைமையை உணர்ந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநில அரசின் செயல்பாடே கேலிக்குரியதாக இருக்கிறது.

சில ஊடகங்கள் சந்தேகத்தின் பெயரில் குறிப்பிட்ட மதத்தை சார்ந்த பலரை விசாரணை இல்லாமலே அடைத்து வைத்திருக்கிறார்கள் இது  மனிதாபிமானம் அற்ற செயல் என்று கருத்துக்களை வெளியிட்டது அதனால் எங்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்ற கருத்துக்களை ஆந்திர காவல் துறையினர் பரப்பி வருகிறார்கள். காவல் துறை என்பது பாராட்டுகளுக்காக மட்டுமே செயல்பட கூடியதோ எதிர்ப்புகளை கண்டு முடங்கி விட கூடியதோ அல்ல யார் என்ன சொன்னாலும் தனது கடமையை செய்துவர வேண்டிய மிகபெரிய பொறுப்பு காவல்துறைக்கு உண்டு. சிறையில் நடக்கும் வன்கொடுமை விசாரணையில் நடக்கும் மனித உரிமை மீறல் அப்பாவி மக்கள் மீது நடத்துகின்ற அத்துமீறல்கள் போன்றவைகள் கூட ஊடகங்களால் விமர்சிக்க படுகிறது. அதற்காக அந்த விமர்சனங்களை கண்டு காவல் துறை தனது தவறான போக்கை எந்த நேரத்திலும் திருத்தி கொள்ளவில்லை திருந்தவும் நினைக்கவில்லை. ஆனால் குறிப்பிட்ட மதத்தாரை மட்டும் குறிவைத்து கைது செய்கிறார்கள் என்று மற்றவர்கள் குறை கூறியதால் நாங்கள் செய்யவில்லை என்று கூறுவது எந்த வகையிலும் நியாயம் இல்லாதது அபாயகரமானது.

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த கூடிய செயல்களை செய்வது எந்த மதத்தவராக இருந்தாலும் அவர்களின் மதத்தை பார்க்காமல் செயல்களை மட்டுமே பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. மதங்களை பார்த்து சலுகை செய்வது  அரசியலுக்கு வேண்டுமானால் நல்லதாக தெரியலாம் ஆனால் நாட்டு பாதுகாப்புக்கு அது எந்த வகையிலும் நல்லது அல்ல. ஒவ்வொரு மதத்தாருக்கும் தனிதனி சலுகைகள் என்ற ரீதியில் அரசாங்கம் நடந்தால் அந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? அல்லது பக்கம் சார்ந்த ஆட்சி நடக்கிறதா? என உலகம் எண்ணி பார்க்க துவங்கி விடும். குற்றம் செய்தவன் எவராகவும் இருக்கலாம் எந்த மதத்தவராகவும் இருக்கலாம் அவர்களை தண்டிக்க வேண்டியது அரசின் தலையாய கடமை ஆனால் துரதிஷ்ட வசமாக நமது நாட்டில் மட்டும் அரசியலும் அரசாங்கத்தின் செயல்பாடும் ஒன்றுக்கொன்று கலந்து குழம்பிய குட்டையாக கிடக்கிறது. இந்த நிலை மாறாத வரையிலும் அந்நிய சக்திகளின் ஆதிக்கம் அதிகரிக்கவே செய்யும்.

அப்சல் குரு தூக்கு தண்டனை நிறைவேற்ற பட்ட போது உமர் அப்துல்லா தனது மாநில அரசியலுக்காக விமர்சனத்துக்குரிய ஒரு கருத்தை வெளியிட்டார். இனி நாட்டில் நடக்க போகும் விபரீத விளைவுகளுக்கு இந்த சம்பவம் பல வகையிலும் வழிவகுக்கும் என்ற ரீதியில் அவர் கருத்தை வெளியிட்ட உடனேயே தக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஒரு தீவிரவாதியை சட்டப்படி தண்டனைக்கு உட்படுத்துவதை ஒரு மாநில முதல்வர் எதிர்ப்பது மிகவும் தவறு. இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டே உமர் அப்துல்லா முதல்வர் பதவியில் இருக்கிறார் அவரை முதலமைச்சராக அமர வைத்திருக்கும் அதே சட்டமே அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை கொடுத்தது. தனக்கு பதவியை கொடுத்த சட்டத்தை மதிக்காத ஒரு முதல்வரை அந்த பதவியில் தொடர்ந்து அமர செய்வதே நமது நாட்டு சட்டத்தை அவமதிப்பதாகும். அதே நேரம் உமர் அப்துல்லாவின் பேச்சு உறங்கிகிடந்த தீவிரவாதிகளை உசுப்பி விட்டதாகவும் நாம் எடுத்துகொள்ளலாம்.

மாநிலத்துக்கு மாநிலம் பிரச்சனைகள் பல இருந்தாலும் இந்தியாவின் ஒற்றுமை என்று வருகின்ற போது மாநிலங்கள் தங்களது சொந்த அரசியல் பிரச்சனைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு நாட்டு ஒருமை பாட்டை கட்டிக்காப்பதில் முனைப்பு காட்ட வேண்டுமே தவிர அதையும் அரசியலாக்கி சுயலாபம் தேட முயற்சிக்க கூடாது. இந்தியாவை விட சட்டரீதியான சுதந்திரம் அமெரிக்காவில் அதிகம் அதே நேரம் ஒரு அமெரிக்க மாநிலத்தின் ஆளுநர் ஒட்டுமொத்த அமெரிக்காவின் நலன் என்று வருகின்ற போது தனது மாநில நலனையே விட்டு கொடுத்து போயிருப்பதை பலமறை அமெரிக்க சரித்திரம் கண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில்  மாநில நலனை விட நாட்டு நலனை விட தனது சொந்த நலனையே தலைவர்கள் அதிக அக்கறையோடு பேணுவதை காண முடிகிறது. இதனால் தான் தீவிரவாதிகளின் கோர தாண்டவம் நமது நாட்டில் அதிகமாக நடக்கிறது. நாட்டு நலனை எண்ணிப்பார்க்காத அரசியல் தலைவர்களை உடனடியாக வீட்டுக்கு அனுப்புவதை பற்றி மக்கள் சிந்தித்தாக வேண்டிய காலகட்டாயம் தற்போது வந்துள்ளது.

ஆரம்ப காலங்களில் வடமாநிலத்தையே குறிபார்த்த தீவிரவாத தாக்குதல்கள் இப்போது சிறிது சிறிதாக நகர்ந்து தென்மாநிலங்களை நோக்கி வந்துள்ளது இது நகர்ந்துள்ளது என்று சொல்வதை விட விரிவடைந்துள்ளது என்று சொன்னால் தான் சரியாக இருக்கும் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இந்தியாவின் எந்த மூலை முடுக்கையும் மிக சுலபமாக யார் வேண்டுமானாலும் தாக்கிவிடலாம் என்ற நிலை இருப்பதை மறுப்பதற்கில்லை. இந்த குண்டு வெடிப்பை சாதாரணமாக பார்க்க கூடாது இதன் பின்னணியில் கண்டிப்பாக அந்நிய கைகள் இருக்கிறது. அது பாகிஸ்தான் கையாகவோ சீனாவின் கையாகவோ இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அது இந்தியாவின் பாதுகாப்பிற்கு விடப்பட்ட சவாலாகவே எடுத்துகொள்ள வேண்டும். இது தீவிரவாதிகளின் தாக்குதல் என்றாலும் கூட அந்நிய சக்திகளின் மறைமுக போர்தாக்குதலே ஆகும்.

தற்போது நமது நாட்டில் ஒரு தவறுதலான கருத்து பரவி வருகிறது. இந்திய இராணுவமும் காவல் துறையும் பலகீனம் அடைந்து விட்டது எதிரிகளின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க கூடிய சக்திகள் அவர்களிடம் இல்லை என்பதே அந்த கருத்தாகும். இது மிகவும் சுத்தமான வடிகட்டிய முட்டாள் தனமான கருத்தாகும். நமது இராணுவ வீரர்களும் காவல் துறையினரும் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல. நாட்டுக்காக எதையும் தியாகம் செய்யும் பலர் அவற்றில் உள்ளனர். ஆனால் அவர்களை வழிநடத்த கூடிய தலைவர்கள் பொறுப்பற்றவர்களாக சுயநலகாரர்களாக இருக்கிறார்கள். அவ்வளவே. இத்தகைய தலைவர்களை இனம் கண்டு ஒதுக்கிவிட்டால்  நமது நாட்டில் தீவிரவாதிகளுக்கும் வேலை இல்லை. அந்நிய சக்திகளுக்கும் வேலையில்லை. திருத்த வேண்டியது தலைவர்களை தான்.


Contact Form

Name

Email *

Message *