குருஜி அவர்களுக்கு வணக்கம் எனது நண்பர் ஒருவர் இந்தியாவை வெறுமனே இந்தியா என்றோ பாரதம் என்றோ அழைக்க கூடாது இந்திய தேசம் பாரத தேசம் என்று தான் சொல்ல வேண்டும் என்கிறார். நாடு என்பது ஒரு நிலபகுதி தானே அதை எப்படி அழைத்தால் என்ன? இப்படி தான் அழைக்க வேண்டுமென்ற விதி இருக்கிறதா? தயவு செய்து விளக்கம் தாருங்கள்.
ராபர்ட் வின்சன்ட்
குளைச்சல்
கன்னியாகுமரி
இந்தியா என்பது ஒரு நிலபரப்பாக இருக்கலாம் கல்லும் மண்ணும் நிறைந்தவொரு பூமியாக இருக்கலாம் ஆனால் இதை நமது முன்னோர்களும் ஞானிகளும் உயிரற்ற ஜடபொருளாக காணவில்லை. ஆத்மாவும் உணர்வும் நிறைந்தவொரு உயிர் துடிப்பு மிக்க பூமியாகவே கருதினார்கள். பிறந்த நாட்டை தாய்நாடு என்று பெற்ற அன்னையோடு ஒப்பிட்டு அழைத்தவன் உலகிலேயே முதல்முறையாக பாரத நாட்டை சேர்ந்தவன் தான் இவனை பார்த்து தான் மற்ற நாட்டு காரர்களும் தங்களது நாட்டை தாய்நாடு என்று அழைத்தார்கள்.
நமது பாரத திருநாட்டில் வீதிவோரகமாக கிடக்கின்ற ஒரு சிறிய கல் கூட புனிதமிக்கது வாழ்க்கையின் தத்துவத்தை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து கூறுகின்ற தகுதிமிக்கது. இங்குள்ள மரம் செடி கொடி நதி மலை அனைத்துமே தெய்வாம்சம் பொருந்தியது. ஒரு உயிர் இறைவனின் திருப்பாத மலர்களில் ஐக்கியமாகின்ற முக்தி நிலையை பெறவேண்டும் என்றால் மனிதனாக பிறக்க வேண்டும். தேவனாக இருந்தால் கூட மனிதனாக பிறந்தால் மட்டுமே அவனுக்கு முக்தி கிடைக்கும். மனிதனாக பிறந்தவன் பாரத பூமியில் பிறப்பெடுத்தால் மட்டுமே முக்தி நிலையை நோக்கி நடக்க முடியும் அப்படி பாரத புத்திரனாக பிறக்கின்ற வரையில் மீண்டும் மீண்டும் மனிதனாகவே வரவேண்டும் என்று சுவாமி விவேகனந்தர் மிக தெளிவாக தனது உரைகளில் கூறுகிறார்.
விவேகனந்தர் இந்தியாவை நேசித்தவர் மிக அதிகமான தாய்நாட்டு பற்றில் அப்படி கூறுகிறார் என்று நாம் எண்ண வேண்டிய அவசியமில்லை. உலகில் வேறு எந்த நாட்டிலும் காணமுடியாத அளவிற்கு ஞான விஷயங்களை இங்கு மட்டுமே காண முடியும். உடல் சுகத்திற்காக மற்ற நாடுகள் வழிவகைகளை தேடி கொண்டிருந்த போது இந்தியா மட்டுமே ஆத்ம சுகத்திற்கான வழிகளை கண்டுபிடிப்பதில் முனைப்பு காட்டிக் கொண்டிருந்தது.
யுவான்-சுவாங் என்ற சீன யாத்திரிகன் தனது இந்திய பயண குறிப்பில் இந்த நாடு முழுவதும் சுற்றி பார்கிறேன் திருட தெரிந்த ஒருவனையும் காணவில்லை. பொய் சொல்ல தெரிந்த மனிதன் இந்த நாட்டில் இல்லவே இல்லை. மக்களை அடிமை படுத்தும் மன்னனும் அரசனுக்கு அடங்கி நடக்காத மக்களும் இங்கில்லை. வறுமை பசி பட்டினி விபச்சாரம் எதுவுமே கண்ணில் தென்படவில்லை. இங்கு மட்டுமே ஆடம்பரம் வரவேற்கபடாமலும் எளிமை மீறப்படமல் இருப்பதை காணமுடிகிறது. என்று எழுதினான் ஒருநிமிடம் கண்களை மூடி அந்த பழைய தேசத்தை கற்பனை செய்து பாருங்கள் அடைத்துக்கொண்டு தகராறு செய்யும் உங்கள் சுவாசம் கூட தங்கு தடையில்லாமல் சுகமாக வெளியில் வரும்.
அந்நிய கலாச்சாரம் அந்நிய மோகம் என்று இந்த நாட்டிற்கு வந்ததோ அன்று முதலே சந்தனத்தில் சகதி கலக்க துவங்கிவிட்டது. கோட்டை மதிலெல்லாம் குப்பைமேடாக ஆகிவிட்டது தன்னை பெற்றவர்கள் எதற்கும் உதவாத உதாவாக்கரைகள் கழிசடைகள் என்று எவனாவது நினைத்தால் அவன் வாழ்க்கை முழுவதும் அரும்பாடு பட்டாலும் முன்னேற முடியாது. நான் உயர்ந்தவன் என்ன சார்த்து அனைத்துமே உயர்ந்தது என்ற சுய கெளரவம் இருப்பவனால் மட்டுமே முன்னேற முடியும். இந்த நியதி தனிமனிதனுக்கு மட்டும் உரியது அல்ல ஒரு தேசத்திற்கே உரியது.
ஓங்கி உலகளந்த உத்தமனான நாராயணன் உறைகின்ற நூற்றி எட்டு புனித ஆலயங்களை திவ்விய தேசம் என்று அழைப்பார்கள். திவ்விய என்ற வார்த்தை தெய்வத்தன்மை பொருந்தியது என்ற பொருள்படும். தேசம் என்றால் பூமி நாடு என்ற பொருளையும் தாண்டி கடவுளின் பூமி என்ற பொருளை தரும். எனவே தான் உங்களது நண்பர் நாட்டை தேசம் என்ற வார்த்தையால் அழைக்க சொல்லி அறிவுரை தந்திருக்கிறார். அவர் நல்ல நண்பர் அவருக்கு பாராட்டுகள்.