
இப்படிக்கு
ராமச்சந்திரன்
வந்தவாசி

இராவணன் கூட சீதையை கடத்தி சென்று அசோகவனத்தில் சிறை வைத்த போது அவளின் மனதை கவர பல வடிவங்களை எடுத்து செல்கிறான். அவளிடம் ஒரு சிறு சலனத்தை கூட அவனால் ஏற்படுத்த முடியவில்லை. கடேசியாக ராமனை போன்ற வடிவத்தை எடுத்து சென்றாலாவது சீதையின் மனம் மாறுகிறதா என்று பார்ப்போம் என ராமன் வடிவத்தை எடுக்கிறான். இராவணன் ராமனாக மாறுகின்ற போதே அவனுக்கு சீதையின் மீதிருந்த காதல் மறைந்து மண்டோதிரியின் நினைப்பே வந்தது. இராமன் வேடம் கூட ஒருவனை தூய்மை படுத்தும்.
இராமச்சந்திரன் என்ற பெயரை வைத்திருக்கும் நீங்கள் கட்டிய மனைவியை மறக்க முடியாமல் தவிப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை பல பெண்களை தேடி போனால் தான் அதிசயம் இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையை சிந்தித்து பார்க்க வேண்டும் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அக்கினி சாட்சியாக கரம்பிடித்தவள் இருக்கும் போது அந்நிய பெண்ணை நாடி செல்வது பெரிய பாவம் அந்த பாவத்திற்கு பிராயசித்தமே கிடையாது என்று இந்து தர்மம் சொல்கிறது. அதே நேரம் மனைவி இறந்து விட்ட போது குழந்தைகளை கவனிக்க பெற்றோர்களை காப்பாற்ற வேறொரு திருமணம் செய்து கொள்வதை இந்து தர்மம் வரவேற்கவில்லை என்றாலும் எதிர்க்க வில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இந்து தர்மப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் பிறப்பு இறப்பு எப்படி ஒரே ஒரு முறை மட்டும் நடக்கிறதோ அதே போலவே திருமணம் என்பதும் ஒரே ஒருமுறை தான் நடக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. இதை மறுத்து சொல்ல எனக்கு தகுதி கிடையாது. ஆனால் இந்து தர்ம சாஸ்திரப்படி திருமாணம் என்றால் என்னவென்று சிந்திக்க வேண்டும். வேத மந்திரங்கள் முழங்க அக்கினியை சாட்சியாக வைத்து உற்றார் உறவினர்கள் முன்னிலையில் புரோகிதரால் நடத்த படுவதே திருமணம்ஆகும் தவிர்க்க முடியாத இரண்டாவது திருமணங்களை கோவிலிலோ அரசாங்க பதிவு அலுவலகங்களிலோ வைத்து கொள்ளலாம். அது சாஸ்திர விரோதம் அல்ல இரண்டாவது திருமணத்தின் மூலமாக நீங்கள் பெறுவது மனைவியை அல்ல துணைவியை என்பதை மனதில் வையுங்கள்.
திருமண உறவு என்பது உடல் சம்மந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல. அதையும் தாண்டி சமய சமூக தனிமனித கடமைகள் எத்தனையோ உண்டு அவைகளுக்காகவும் ஆனது திருமணம் என்பதை உணர வேண்டும். சாஸ்திரப்படி இரண்டாவது திருமணம் செய்து கொள்வதில் உண்மையாகவே விருப்பம் இல்லை என்றால் பிரம்மசரிய வாழ்வை நெறி தவறாமல் கடைபிடிக்க முடியும் என்றால் தாரளமாக ஒருவர் அப்படி வாழலாம். அதற்கு தடை ஏதும் இல்லை. தனிமனிதனாக வாழும் போது ஆத்திர அவசரத்திற்கு துணையாக யாரும் இல்லையே என்று வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. நம்மால் முடிந்த நன்மையை பிறருக்கு செய்துவரும் போது நமக்கு உதவ ஆயிரம் பேர் காத்திருப்பார்கள். நாமே பெற்றால் சில பிள்ளைகள் தான் நமது மரணத்திற்காக அழுவார்கள் மற்றவர் குழந்தைகளை நமது குழந்தையாக கருதினால் ஊரே நமக்காக அழும். எனவே இரண்டாவது திருமணத்தில் சாஸ்திர தர்மத்தை நினைத்து வருந்த வேண்டாம் உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மனதில் வைத்து முடிவு செய்யுங்கள் அனைத்தும் நல்லதாக நடக்கும்.