ஐயா எனக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது இதுவரையில் என் மனைவி என்னோடு குடும்பம் நடத்திய நாட்களை விட சண்டை போட்ட நாட்களே அதிகம். பல மாதங்கள் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு போய்விடுவாள். இதுவரை குழந்தைகள் இல்லை. இருவரும் சேர்ந்திருந்தால் தானே குழந்தையை பற்றி சிந்திக்கலாம். எனக்கு தாய் தகப்பன் கிடையாது ஒரே ஒரு அண்ணன் மட்டுமே இருக்கிறார். எனது ஆதரவற்ற நிலையை முழுமையாக புரிந்து கொண்டு என் மாமனாரும் மிரட்டுகிறார் இந்த நேரத்தில் எங்கள் வீட்டோடு வந்து இரு அல்லது உன்னை விவாகரத்து செய்துவிடுவேன் என்று மனைவி பயமுறுத்துகிறாள் தன் மானத்தை விட்டு மனைவியின் வீட்டில் போய் உட்கார எனக்கு பிடிக்கவில்லை என் வாழ்க்கை இப்படியே தான் போகுமா? அல்லது விடிவுகாலம் ஏதாவது வருமா? அல்லது என் மனைவி சொல்கிறபடி விவாகரத்து நடந்துவிடுமா? எதுவாக இருந்தாலும் மறைக்காமல் சொல்லி எனக்கு வழிகாட்டவும் ஏதாவது பரிகாரங்கள் இருந்தாலும் சொல்லுங்கள் தட்டாமல் செய்கிறேன்.
இப்படிக்கு,
வெங்கடேசபாண்டியன்,
தஞ்சாவூர்.
“ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே” என்று சொல்வார்கள் அதாவது எந்தவொரு காரியமும் குடும்ப அளவில் சிறப்பாக வளருவதற்கு பெண்களே காரணமாக இருக்கிறார்கள். அதே காரியங்கள் கெட்டுகுட்டிச்சுவராகி போவதற்கும் அவர்களே காரணமாக அமைகிறார்கள் என்பது இந்த பழமொழியின் பொருளாக நாம் கொள்கிறோம். இப்படி ஒரு குடும்பம் கெடுவதற்கும் வளர்வதற்கும் பெண்களே மூலகாரணம் என்று கூறுவது ஏறக்குறைய ஆணாதிக்கத்தனம். இந்த பழமொழியின் பொருள் அப்படி வந்தது அல்ல ஒரு குடும்பத்தின் அடுத்த தலைமுறையை அதாவது குழந்தைகளை நல்ல குழந்தைகளாக ஆக்கி தருவதும் பெண் எதற்கும் உதவாத குழந்தைகளாக வளர்ப்பதற்கு காரணமாக இருப்பதும் பெண் என்பது அர்த்தமென்று சொல்வார்கள். எப்படி அர்த்தத்தை திருப்பி திருப்பி போட்டு பார்த்தாலும் ஒரு குடும்பம் வளர்வதற்கும் தேய்வதற்கும் பெண்ணே காரணமாக இருக்கிறாள். இதில் ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்று பேசுவதெல்லாம் கவைக்குதவாத வாதங்களாகும்.
ஆணும் பெண்ணும் சரிசமமானவர்கள் அவர்களில் பேதங்கள் பார்ப்பது தவறு என்று பல மேடைகளில் முழங்குகிறார்கள் உரிமைகளையும் மரியாதையும் பெறுவதில் வேண்டுமானால் இருவரும் சமமானவர்காக இருப்பர்களே தவிர குடும்ப பொறுப்பில் பங்குபணியாற்றுவதில் ஆணும் பெண்ணும் ஒருபோதும் சமமானவர்களாக இருக்க முடியாது இருக்க கூடாது என்பது என் கருத்து. குடும்பம் நடத்துவதில் ஆணை விட பெண்ணுக்கு அதிகமான பொறுப்புகள் உண்டு. ஒரு ஆண் நினைத்தாலும் விரும்பினாலும் கூட ஒரு குழந்தைக்கு தாயாக முடியாது. தாய்மையின் உணர்வை பரிபூரணமாக பெற்றுவிட முடியாது. அது பெண்களுக்கு மட்டுமே இறைவன் கொடுத்த வரம்.
நல்ல குடும்பங்கள் உருவாக வேண்டுமானால் நல்ல குழந்தைகள் கண்டிப்பாக அவசியம் வேண்டும். நல்ல குழந்தைகளை உருவாக்கி தருவதில் பெண்ணின் பங்கு மிக கண்டிப்பாக அதிகம் இருக்க வேண்டும். நல்ல தாயால் வளர்க்கப்படாத குழந்தைகள் யாரும் சிறப்பானவர்களாகவும் பொறுப்பானவர்களாகவும் ஆகி விட முடியாது. உங்கள் மனைவியின் ஜாதகத்தை பார்க்கும் போது அவரது அம்மாவுக்கான கிரகம் மிகவும் பாதிப்படைந்துள்ளது ஒன்று அவர் தாயால் சரிவர வளர்க்க படாமல் இருக்க வேண்டும் அல்லது அவரது தாய்க்கே குழந்தைகளை வளர்க்கும் பொறுப்புகள் கொடுக்கப்படாமல் இருக்க வேண்டும். இதனால் தான் உங்கள் மனைவியிடம் பெண் தன்மையை விட ஆண் தன்மை அதிகமாக இருக்கிறது.
ஆணுக்குள் இருக்கின்ற பெண்மையும் பெண்ணுக்குள் இருக்கின்ற ஆண்மையும் ஒருவித கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இருந்தால் அவர்களால் சிறந்த மனிதர்களாக வாழ முடியாது. சில வருடங்களுக்கு முன்பு ஒரு மனிதர் என்னை வந்து சந்தித்தார் தன் மனைவி தனக்கு மனைவியாக மட்டுமல்ல குழந்தைகளுக்கு நல்ல தாயாகவும் இருக்கவில்லை நாடகம் சினிமா பக்கத்து வீட்டு பெண்களோடு அரட்டை அடித்தல் இவைகளில் காட்டுகிற அக்கறையை கூட குழந்தைகளுக்கு உணவு சமைத்து கொடுப்பதில் காட்டுவதில்லை குழந்தைகளை சரியான முறையில் பராமரிப்பது கூட இல்லை அவரோடு வாழ்வதை விட அவரிடமிருந்து பிரிந்து விடுவதே சிறந்தது எனவே பிரிவதற்கான வழிகளை கூறுங்கள் என்று என்னிடம் கேட்டார். அதற்கு ஐயா நீங்கள் கணவன் மனைவியாக மட்டுமிருந்தால் சுலபமாக பிரிந்து விடலாம் நீங்களோ தாயாகவும் தகப்பனாகவும் இருக்கிறீர்கள் இந்த நிலையில் பிரிந்தால் தனிப்பட்ட ரீதியில் உங்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளின் வாழ்வும் கெட்டுவிடும் எனவே பிரிவை பற்றி யோசிக்காதீர்கள் உங்கள் மனைவியின் மனதை மாற்ற சில மந்திர முறைகளையும் மூலிகை பிரயோகங்களும் இருக்கிறது அவற்றை பயன்படுத்துங்கள் நல்லபடியாக வாழலாம் என்று சொல்லி அவருக்கு தேவையானவற்றையும் செய்து கொடுத்தேன் இன்று அவர் குடும்பம் மிக நல்ல நிலையில் இருக்கிறது மூத்த பெண்ணுக்கு வரன் கூட தேட ஆரம்பித்து விட்டார்
உங்களுக்கும் ஏறக்குறைய அதே அறிவுரையை சொல்லலாம் என்று நினைக்கிறேன் ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் அல்லது செவ்வாய் பகை அடைந்தோ மறைவு ஸ்தானத்தில் அமர்ந்து இருந்தாலோ மனைவியால் இத்தகைய பாதிப்பு வரும் அதை தவிர்க்க உங்கள் ஊரில் உள்ள ஆலயம் எதாவது ஒன்றில் கன்னிமார் சன்னதி இருந்தால் அவர்களுக்கு ஒன்பது ஏகாதசி திதிகளில் நெய்விளக்கு ஏற்றி வழிபடுங்கள் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும். அப்படி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டால் அதன் பிறகு சொல்லுங்கள் அதற்கான வேறு வழிகளை சிந்திக்கலாம். என் மனதிற்குபடுகிறது உங்களது பிரச்சினை பெரிய அளவில் இல்லை சிறிய அளவிலே மட்டுமே இருக்கிறது கன்னிமாரின் அருள் பெற்றாலே போதும் சிக்கல் தீர்ந்து விடும் என்று தோன்றுகிறது. நம்பிக்கையோடு செய்யுங்கள் நாராயணன் உங்கள் கூடவே இருந்து வழிநடத்தி செல்வான்.