குருஜி அவர்களுக்கு வணக்கம் நாங்கள் அண்ணன் தம்பி நான்கு பேர்கள் எனது தகப்பனார் என்னை தவிர மற்ற அனைவரிடமும் அன்பாக இருக்கிறார் அவருக்கு ஏனோ என்னை கண்டாலே சிறிய வயது முதல் ஆகாது இவன் பிறந்து தான் என் சந்தோசங்களை கெடுத்தான் என்று சொல்லி கொண்டே இருப்பார் இத்தனைக்கும் நான் பிறந்த பிறகு தான் சில சொத்துக்களை என் தகப்பனார் வாங்கினார் எனக்கு அவர் மீது கோபமே வரமாட்டேன் என்கிறது அவர் வெறுத்து ஒதுக்கினாலும் அவருக்கான சேவையை செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன் அவரோ என்னையும் என் மனைவியையும் குழந்தைகளையும் கூட பக்கத்தில் விட மாட்டேன் என்கிறார் இந்த நிலை மாறுமா? என் தகப்பனார் என்னை ஏற்றுக்கொள்வாரா? என்பதை தயவு செய்து சொல்லவும்.
இப்படிக்கு,
ரமேஷ்பிரபா,
காங்கேயம்.
“பெற்றமனம் பித்து பிள்ளைமனம் கல்லு” என்று தான் கேள்விபட்டிருக்கிறோம் உங்கள் விஷயத்தில் அது நேர்மாறாக இருக்கிறது இப்படி பட்டவைகளை இறைவன் படைப்பில் உள்ள காரணம் புரியாத விசித்திரங்கள் என்று தான் சொல்ல வேண்டும் பெற்றவர்களை பிள்ளைகள் கவனிக்க மாட்டார்கள் எல்லா பெற்றோரும் பிள்ளைகளை பொறுப்போடு வளர்க்க மாட்டார்கள் என்று கூறி அதற்கான காரண காரியங்கள் பலவற்றை சமூக நோக்கோடு விளக்கினாலும் கூட அதற்கு என்னை பொறுத்தவரை பூர்வ ஜென்ம கர்மாவே மூல காரணம் என்று சொல்லலாம்.
சென்ற பிறவியில் உங்கள் பெற்றோர் உங்கள் மீது விழுந்து விழுந்து அன்பு செலுத்தினாலும் அதை ஏற்று கொள்ளாமல் புறக்கணித்திருப்பீர்கள் அவர்களை மனம் நோகும்படி செய்திருப்பீர்கள் அதற்கான தண்டனையே இப்போது நீங்கள் வலிய சென்று அன்பு செலுத்தினாலும் அதை தகப்பனார் ஏற்று கொள்ளாமல் உங்கள் மனதை காயபடுத்துகிறார். இப்படி நான் நினைக்கிறேன் இது சரியாக கூட இருக்கலாம்.
ஆனால் இந்த உலகில் மிகவும் சக்திவாய்ந்த ஒரு ஆயுதம் இருக்கிறது என்றால் அது அன்பு ஒன்றே ஆகும். சம்மட்டி கொண்டு அடித்தாலும் உறுதியாக எழுந்து நிற்கின்ற கற்பாறை கூட சின்ன உளிக்கு நெக்கு விட்டுவிடும் என்பது போல அன்பு என்ற ஆயுதம் கரடுமுரடான மனிதனை கூட ஒரே வினாடியில் கீழே வீழ்த்திவிடும். இது தான் உலக உண்மை எனும்போது உங்கள் தகப்பனார் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருப்பாரா என்ன? கண்டிப்பாக மாறுவார் காத்திருங்கள்
இருந்தாலும் ஒரு ஜாதகரின் ஜாதகத்தில் ஐந்தாமிடத்து அதிபதி இருக்கிற இடத்திலிருந்து ஒன்று ஐந்து ஒன்பது ஆகிய இடங்களில் கேது இருந்தால் அவர் தனது குழந்தைகளிடம் பகைமையை பாராட்டுவார் என்று ஜோதிட நூல்கள் சொல்கின்றன. உங்கள் தந்தையரின் ஜாதகமும் அப்படி இருக்கிறது எனவே இது அவர் குற்றம் அல்ல அவர் பிறந்த நேரத்தின் குற்றமாகும். கடவுளிடம் பிராத்தனை செய்யுங்கள் கல்லையும் கனிவிக்கும் ஆற்றல் முள்ளையும் மலராக்கும் சக்தி அவன் ஒருவனுக்கே உண்டு.