Store
  Store
  Store
  Store
  Store
  Store

உடம்பு வியர்த்தால் திருப்தி கிடைக்கும்



       சிலபேர் வாழ்நாள் முழுவதும் எதை தொட்டாலும் சலித்து கொள்வார்கள் எதிலும் அவர்களுக்கு திருப்தி இருக்காது நல்ல அழகாக வீடு ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசை படுவார்கள் எப்படியோ ஆண்டவன் கிருபையால் வீடு அமைந்து விட்டால் என்ன பெரிய வீடு நான் கிழக்கு பார்த்த வீடாக இருக்க வேண்டும் வீட்டுக்கு முன்னால் பெரிய திண்ணைகள் இருக்க வேண்டும் மாலை ஆறுமணி ஆனாலும் வீட்டிற்குள் இருட்டு வராமல் வெளிச்சமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் எனக்கென்று அமைந்தது பார் ஒரு வீடு எதற்கும் உதவாத புறாக்கூடு மாதிரி பகலும் இராத்திரியும் ஒரே மாதிரியே குகைக்குள் இருப்பது போல இருட்டாக இருக்கிறது நான் வெளியில் விடுகிற மூச்சி காற்று தான் அனல்காற்றாக என் மீது வீசுகிறது இப்படியும் ஒரு வீடா இது அமைந்ததை விட அமையாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று புலம்புவார்கள் 

கல்யாணம் கட்டினால் வாழ்க்கை வசந்தமாகி விடும் என்பார்கள் கல்யாணத்திற்கு பிறகு எதற்கு தான் இந்த சனியனுக்காக ஆசை பட்டேனோ எல்லாம் நாசமாக போச்சி என்பார்கள் கருப்பு சட்டை இருந்தால் வெள்ளை சட்டை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பார்கள் வெள்ளை சட்டையே கொடுத்தால் கூட இது சீக்கிரம் அழுக்காகிவிடும் என்று குறைபடுவார்கள் இப்படி எதை எடுத்தாலும் அவர்களுக்கு நிறைவு என்பதே வராது சதா சர்வகாலமும் தங்களிடம் இல்லாதது எதுவோ அது இருந்தால் நன்றாக இருக்கும் அது கிடைக்கும் வரை வாழ்நாள் வீணான நாள் என்று புலம்புவார்கள் இப்படிப்பட்ட நபர்கள் ஒன்றிரண்டு பேர்கள் அல்ல தினசரி நாம் பார்ப்பவர்களில் பத்துக்கு எட்டு பேர்கள் இப்படியே இருக்கிறார்கள் 

நாம் பல நேரங்களில் பிரபலமானவர்கள் அதிகாரபீடத்தில் இருப்பவர்கள் பணக்காரர்கள் என்று மேல்மட்டத்தில் இருப்பவர்கள் திருப்தியாக இருப்பார்கள் நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் தான் திருப்தி இல்லாமல் அல்லல் படுகிறோம் என்று நினைக்கிறோம் இது முற்றிலும் தவறு அதிகாரத்தில் இருப்பவன் தன்னைவிட அதிகாரத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவனை பார்த்து அவனை போல நான் ஆக முடியாதா என்று நினைத்து வேதனை படுகிறான் தமிழ்நாடு முழுவதும் அறிந்த பிரபலமான மனிதர்கள் இங்கிலாந்து அரச பரம்பரை போல் நாம் உலகம் அறிந்த பிரபலமாக இல்லையே என்று ஏங்குகிறான் இதே போன்ற ஏக்க பெருமூச்சை விடுபவர்களாக தான் பணக்காரர்களும் இருக்கிறார்கள் ஏழைகளும் இருக்கிறார்கள். ஆக உலகில் திருப்தியான மனிதன் என்று யாருமே இல்லையா? சில மணித்துளி கூட ஒரு மனிதனால் திருப்தி அடைய முடியாதா? என்ற கேள்வி நமக்கு எழுகிறது 

திருப்தியாக வாழ முடியவில்லை என்று நினைப்பவர்கள் முதலில் திருப்தி என்றால் என்னவென்று சிந்திக்க வேண்டும் நாமும் சரி நம்மை போன்ற மற்றவர்களும் சரி பெளதிகமான பொருள்கள் நமக்கென்று சொந்தமாக இருந்தால் தான் திருப்தி கிடைக்குமென்று தவறாக கணக்கு போடுகிறோம் உண்மையில் வெளியில் கிடைக்கிற பொருள்கள் எதற்குமே நிரந்தரமான திருப்தியை தரும் சக்தி கொண்டதாக இருப்பதில்லை பத்து ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தால் சந்தோசம் வருமென்று நினைக்கிறோம் அந்த நிலம் வந்துவிட்டால் அதை பராமரிக்க முடியாமல் அவதிபடுகிறோம் நிலத்தை பண்படுத்த வேலைக்காரர்கள் அமைய மாட்டார்களா? என்று அலைந்து வேலையாளை பிடித்துவிட்டால் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லையே சம்பளம் கொடுப்பதற்கு பணம் இல்லையே என்று ஒன்றை விட்டு மற்றொன்றை தேடி கொண்டே அலைகிறோம் இப்படி அலைந்து அலைந்தே வாழ்நாள் முழுவதும் வீணாகி விடுகிறது மரண படுக்கையில் விழுகிற வரை திருப்தி என்பதே காண முடியாத கைப்பற்ற முடியாத கானல் நீராக இருந்துவிடுகிறது 

அதனால் நிரந்தரமான திருப்தியை தருவது எது என்று முதலில் சிந்தித்து முடிவு செய்ய வேண்டும் அப்படி முடிவு செய்யாத வரை திருப்தி என்பதை நாம் அடையவே முடியாது அது நம் கைகளில் அகப்படவே அகப்படாது. அந்தகாலத்தில் வாழ்ந்த  ஜமின்தார் ஒருவர் தனியாக காட்டை சுற்றி பார்க்க ஆசைபட்டார் தனக்கு துணையாக யாரையும் அழைத்து கொள்ளாமல் ஒருநாள் காலை வேளையில் சாரட் வண்டியில் காட்டை பார்க்க கிளம்பி விட்டார் நடுகாட்டில் செல்லும் போது அவரது சாரட் வண்டியில் அச்சாணி உடைந்து விட்டது ஆடம்பரமான வண்டி இருந்தாலும் அதை இழுத்து செல்வதற்கு வலுமிக்க குதிரைகள் இருந்தாலும் சிறிய அச்சாணி இல்லாவிட்டால் வண்டி ஓடுமா? எனவே உடைந்த அச்சாணியை கையில் எடுத்து கொண்டு அதை சரி செய்வதற்கு பக்கத்தில் எதாவது கிராமம் இருக்குமா? கிராமத்தில் கொல்லன் பட்டறை இருக்குமா? என்று தேடி போக ஆரம்பித்தார் 

நேற்றுவரை உல்லாச மாளிகையில் ஒய்யாரமாக ஓய்வெடுத்த உடம்பு அவருக்கு இன்று உச்சி வெயிலில் கால்கள் நோக திசை தெரியாமல் நடந்த போது வியர்த்து கொட்டியது மூச்சி விடுவதற்கு நுரையீரல் என்ற உறுப்பு இருக்கிறது அது கடினமாக உடல் வலிக்க ஆரம்பித்தால் அதிக காற்றுக்காக வேகமாக இயங்கும் அப்போது சோர்வு என்ற ஒன்று ஏற்படும் என்ற உண்மை அந்த நேரத்தில் தான் அவருக்கு தெரிய ஆரம்பித்தது எப்படியோ அலைந்து திரிந்து கொல்லன் பட்டறை ஒன்றை கண்டுபிடித்து விட்டார் அச்சாணியை சரிசெய்து தரும்படி கொல்லனிடம் கேட்டார் அவனோ ஐயா அச்சாணியை நெருப்பில் காட்டி உருக்கி சரிசெய்ய வேண்டுமானால் அடுப்பு எரிக்க துருத்தி போட வேண்டும் நான் ஒருவனே துருத்தியும் போட்டு கொண்டு உடைந்த அச்சாணியை சரி செய்ய முடியாது என்னிடம் துருத்தி போட இப்போது வேறு யாரும் இல்லையே என்று வருத்த பட்டான் 

ஜமின்தார் யோசித்தார் இவனுக்கு துருத்திபோட ஒரு ஆள் கிடைத்து அதன் பிறகு அச்சாணியை சரி செய்வது என்பது காலம் கடத்துகிற விஷயம் எனவே ஆளுக்காக காத்திருக்காமல் நாமே துருத்தி போடலாம் என்று நினைத்து கொல்லனிடம் எப்படி துருத்தி போடவேண்டும் என்று சொல் நானே போடுகிறேன் என்றார் அவனும் செய்து காமித்தான் ஜமின்தார் துருத்தி போட துவங்கினார் துருத்தியை பிடித்து மாறி மாறி அழுத்தும் போது அவர் கைகள் வலித்தன உழைக்காத உடம்பு உழைக்க துவங்கினால் என்னவாகும் மூச்சு வாங்கியது அருவி போல உடம்பு வியர்த்து கொட்டியது எப்படியோ ஒரு வழியாக அச்சாணியை சரி செய்து கொல்லன் முடித்தான் இவரும் அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சி விட்டார் உனது கூலி என்ன என்று கொல்லனிடம் கேட்டார் அவனோ நாங்களே துருத்தி போட்டால் ஐந்து வெள்ளி காசுகள் நீங்கள் போட்டதனால் ஒரு காசு குறைத்து நான்கு காசுகள் கொடுங்கள் என்று கேட்டான் ஆசுவாசமாக உட்கார்ந்திருந்த ஜமின்தார் அவனுக்கு ஐந்து பொற்காசுகள் கூலியாக கொடுத்தார் 

கொல்லன் அதிர்ந்து போனான் ஐயா நீங்கள் கொடுப்பது பொற்காசு தவறுதலாக கொடுக்கிறீர்களே என்று பதட்டத்தோடு கேட்டான் அதற்கு அவர் அப்பனே பொற்காசுக்கும் வெள்ளி காசுக்கும் வித்தியாசம் தெரியாமல் கொடுக்கவில்லை பொற்காசு என்று தெரிந்தே கொடுக்கிறேன் தைரியமாக பெற்று கொள் என்று கூறிய அவர் இதுவரை எனது வாழ்வில் திருப்தி என்றால் என்னவென்று அறியாமல் இருந்தேன் இன்று உன்னுடைய பட்டறையில் துருத்தி போட்ட போது உழைப்பும் உழைப்பதனால் ஏற்படும் உடல் வலியும் உழைப்பு முடிந்த போது கிடைத்த ஓய்வினால் எனக்குள் தோன்றிய ஒருவித அமைதியை நிஜமான திருப்தி என்பதை அறிந்து கொண்டேன் அதை அறிவித்த உனக்கு நன்றி செலுத்தவே பொற்காசை தந்தேன் என்றார். 

நிஜமான அழியாத சாஸ்வதமான திருப்தி என்பது உழைப்பின் முடிவில் கிடைப்பதே ஆகும். அந்த நேரத்தில் நமக்குள் ஏற்படுகிற அனைத்து கொந்தளிப்புகளும் அடங்கி ஒருவிதமான ஆனந்த அலை மேலோங்கி பிரவாகமாக வழியுமே அதன்  பெயர் தான் திருப்தி எனவே திருப்தியும் சந்தோசமும் வேண்டுமென்றால் உழைக்க வேண்டும் உழைக்காமல் கிடைக்கின்ற எந்த பொருளும் திருப்தியை தருவதில்லை உழைக்காமல் கிடைக்கும் தங்க காசு பாரமானது உழைத்து கிடைக்கும் மண் ஓடு கூட பவித்திரமானது அதில் தான் திருப்தி இருக்கும் போதும் என்ற நிறைவு இருக்கிறது நிம்மதியான அமைதி இருக்கிறது எனவே திருப்தியின் இரகசியம் பொருள்களில் அல்ல உழைப்பில் என்பதை எப்போது புரிந்து கொள்கிறோமோ அப்போதே நமது வாழ்க்கையும் பூரணத்துவம் அடைகிறது அதுவரை அரை குறை வாழ்வில் தத்தளிக்கும் துரும்பாகவே இருப்போம். 



Contact Form

Name

Email *

Message *