மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவ பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தொலைபேசியில் என்னோடு பேசினார் ஆரம்ப நாட்களில் சிறந்த மருத்துவராக வரவேண்டும் சமூகத்தில் நல்ல அந்தஸ்தை பெறவேண்டும் முடிந்தால் ஏழை ஜனங்களுக்கு உதவ வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டு மருத்துவ படிப்பை வேண்டி விரும்பி இன்னும் சொல்லப்போனால் அப்பாவிடம் அடம்பிடித்து கல்லூரியில் சேர்ந்தேன்.
சேர்ந்த ஒருவருடம் அந்த ஆர்வம் எனது உடம்பிலும் மனதிலும் குதிரை ஓடுவது போல சுறுசுறுப்பாக ஓடியது அதன் பிறகு செத்துப்போன மனித உடலை அடிப்படையாக வைத்து ஆராய்ச்சி செய்து மருத்துவ துறையில் என்ன சாதித்துவிட போகிறோம் இது நமக்கு தேவையற்றது, ஒத்துவராது என்ற எண்ணம் தலைதூக்கி படிப்பிலிருந்த கவனம் திசைமாறி கணினித்துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அந்த கவனம் கூட சிறிது காலம் மட்டுமே இருந்தது அதன் பிறகு கலை மற்றும் வரலாற்று துறையில் ஆர்வம் துளிர்விட ஆரம்பித்தது.
இப்படி ஒன்று மாற்றி ஒன்றாக குரங்கு தாவுவதை போல மனமானது மாறிக்கொண்டே இருக்கிறதே தவிர எதிலும் நிலையாக இல்லை நிலைமை இப்படியே போனால் கஷ்டப்பட்டு கடன்பட்டு வாங்கிய மெடிக்கல் சீட்டும் பயனற்று போகும் வேறு எந்த துறையிலும் முன்னேற முடியாமல் அரைகுறையாகவே வாழ நேரிடும் எனவே என் மனம் மாறி படிப்பில் கவனம் செலுத்த வழி சொல்லுங்கள் என்று கேட்டார் அவருக்கு நான் சரியான வழியை கூறி இப்போது மருத்துவ படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது வேறு விஷயம்.
நான் இங்கே அதன் மூலம் சொல்ல வருவது என்னவென்றால் நம்மில் பலருக்கு நமக்கு உகந்த தொழில் எது நம்மிடம் எந்த தொழில் மீது ஆர்வம் இருக்கிறது எதை நம்மால் திறம்பட செய்ய இயலும் என்ற தெளிவு இருப்பதில்லை அதனால் தான் பொருத்தமற்ற காரியங்களை பொருத்தமில்லாத நேரங்களில் செய்து அவதிப்படுகிறோம். நம் தவறை நாம் ஒப்புக்கொள்ளாமலே நான் “உப்புவிக்க போனால் மழை வருகிறது” “தவிடு விற்க போனால் காற்றடிக்கிறது” என்று விதியின் மேலே குறை கூறி வாழ்நாள் முழுவதும் வேதனையில் கிடக்கிறோம் .
இத்தகைய விபரீதமான நிலைமையிலிருந்து நாம் தப்பித்து கொள்ள நமது முன்னோர்கள் பல நல்ல வழிகளை காட்டி இருக்கிறார்கள் அவற்றில் முக்கியமானது ஜோதிடம். ஜோதிடம் என்பது ஜோதிட சாஸ்திரப்படி ஒருவனது லக்கினத்திற்கு பத்தாவது இடம் என்ன ராசியோ அந்த ராசியை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்தால் இன்ன தொழில் தான் நமக்கு சரிபட்டு வரும் என்ற முடிவிற்கு மிக சுலபமாகவே வந்துவிடலாம்
இந்த வரிசையில் சென்ற பதிவில் பத்தாவது இடம் மேஷ ராசியாக இருந்ததால் என்ன தொழில் செய்யலாம் என்பதை பார்த்தோம் இப்போது அதே பத்தாவது இடம் ரிஷப ராசியாக இருந்தால் என்னென்ன தொழில்கள் செய்யலாம் செய்தால் எப்படி பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். மீண்டும் ஒரு விஷயத்தை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன் இங்கு நான் கூறிவருகிற பலன்கள் அனைத்துமே பொதுவானதே தவிர ஒரு தனி மனிதனுக்கு பிரத்யேகமாக குறிப்பிட்டு சொல்ல கூடியது அல்ல
ரிஷப ராசி பத்தாம் இடமாக வந்தால் அவர்கள் பொன், வெள்ளி மற்றும் இரத்தின வியாபாரம் கால்நடை வளர்ப்பது வட்டி தொழில், தரகு தொழில், அழகு சாதன பொருள்கள், ஆடம்பர பொருள்கள், வாசனை பொருள்கள், உணவு பொருள்கள், குளிர்பானங்கள் போன்றவைகள் விற்பனை செய்வது, இயல், இசை, நாடக தொழிலில் ஈடுபடுதல், சினிமா மற்றும் நாடகங்கள் தயாரித்தல், கதை, கவிதை எழுதுதல், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் நடத்துதல், நிதி நிறுவனங்களை உருவாக்குதல், மற்றும் அவற்றில் பணிபுரிதல் போன்றவைகளை செய்யலாம்.