மரியாதைக்குரிய குருஜி ஐயா அவர்களுக்கு, வணக்கம். சென்ற மாதம் எங்கள் ஊரில் உள்ள ஜோதிடர் ஒருவரிடம் என் ஜாதகத்தை பார்த்தேன். அவர் உனக்கு பல கஷ்டங்கள் வரப்போகிறது ஜாக்கிரதையாக இரு என்று கூறிவிட்டார். அன்று முதல் எனக்கு பயமாகவும் கவலையாகவும் இருக்கிறது. கஷ்டங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள எதாவது வழி இருக்கிறதா? உண்மையில் அந்த ஜோதிடர் கூறியது போல கஷ்டங்கள் எனக்கு வருமா? என்பதை தயவு செய்து சொல்லி எனக்கு வழிகாட்டுமாறு உங்கள் பாதம் தொட்டு வேண்டி கேட்டு கொள்கிறேன்.
இப்படிக்கு,
முருகேசபாண்டியன்,
மதுரை.
ஒருவரது ஜாதகத்தில் எட்டுக்குடையவன் லக்கின கேந்திரத்தில் இருந்தாலும், எட்டுக்குடையவன் லக்கினாதிபதியோடு சேர்ந்து இருந்தாலும் அல்லது பார்த்தாலும், பத்துக்குடையவனோடு சேர்ந்தாலும் பார்த்தாலும், கஷ்டங்கள் வருமென்று ஜோதிட நூல்கள் சொல்கின்றன. துன்பம் வருமென்று பொதுவாக சொன்னாலும் அந்த துன்பங்கள் எப்போது வரும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதையும் ஜோதிடப்படி அறிந்துகொள்ள முடியும். அதற்கு கோச்சார பலன் என்ற தற்கால கிரக நிலைகளை கணக்கிட வேண்டும்.
அதாவது எட்டாமிடத்து அதிபதி கோச்சாரப்படி கேந்திரங்களில் சஞ்சரிக்கும் போதும், லக்கினாதிபதியோடு இணைகிற போதும், பத்தாமிடத்து கிரகத்தை பார்க்கும் போதும், அல்லது அதனோடு இணையும் போதும் கஷ்டங்கள் வருமென்று ஜோதிட விதிகள் சொல்கின்றன. இந்த காலகட்டங்களில் தேவையில்லாத அவதூறு, அவமானம், பொய் குற்றச்சாட்டு, சண்டை சச்சரவுகள், வம்பு வழக்குகள், உறவு முறைகளை பறிகொடுத்தல் மற்றும் நோய்வாய்படுதல் போன்ற துயரங்கள் ஏற்படலாம்.
இந்த கஷ்டங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள எட்டாமிடத்து அதிபதி கிரகம் எதுவோ அந்த கிரகத்தினுடைய பரிகார ஸ்தலங்களுக்கோ பரிகாரப்படி செய்ய வேண்டிய தானங்களையோ ஜோதிடர்களின் ஆலோசனைப்படி செய்ய வேண்டும். அப்படி செய்தால் மழை வரும் போது குடைபிடித்து தலையை ஈரம் படாமல் பாதுகாத்து கொள்வது போல துன்பங்களின் வேகத்தை சிறிது குறைத்து கொள்ளலாம். எனவே உங்கள் ஊர் ஜோதிடர் சொன்ன பலன் உங்களை பொருத்தவரை உண்மை. எனவே அவரிடம் கலந்தே பரிகாரங்களை செய்து பயனடையுங்கள்.