Store
  Store
  Store
  Store
  Store
  Store

அரவாணிகளின் பிறப்பு இரகசியம் !



    அன்று என்னை சந்திக்க வந்த ஒருவர் மெத்த படித்தவர். பல வேறுபட்ட துறைகளில் நல்ல அறிவும் அனுபவமும் அவருக்கு இருந்தது. ஜோதிடத்தில் கூட மாஸ்டர் டிகிரி பெற்றிருந்தார். அவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார் சில ஜோதிடர்களிடம் ஜாதகத்தை கொடுத்தவுடனே இது ஆண் ஜாதகம், இது பெண் ஜாதகம் என்று சொல்லி விடுகிறார்களே! அது எப்படி? குறிப்பிட்ட நபரை நேரில் பார்க்காமலே துல்லியமாக கூறுவதற்கு முடியுமா? அதற்கு ஜோதிடத்தில் ஏதேனும் வழி இருக்கிறதா? அல்லது ஜோதிடர்கள் மந்திரம் மாயம் என்று தெரிந்து வைத்து கொண்டு வித்தை காட்டுகிறார்களா? என்று கேட்டார்.

அவர் மட்டுமல்ல ஜோதிடத்தை பற்றி அடிப்படை அறிவு இல்லாதவர்கள் கூட இதே போன்ற கேள்விகளை பல நேரம் கேட்கிறார்கள் அவர்கள் அதாவது துல்லியமாக கேள்விகள் கேட்காமலே பதில் சொல்லும் திறமை பெற்ற ஜோதிடர்கள் எட்சனி வசியம், குட்டிசாத்தான் வசியம் இப்படி எதாவது ஒன்றை சித்திப்படுத்தி கைகளில் வைத்திருப்பார்கள். அதன் மூலமாக அவர்களால் சொல்ல முடிகிறது என்று கருதுபவர்களும் உண்டு. மந்திரங்களில் வழியாக மேஜிக் போல பலன் கூறுகிற ஜோதிடர்கள் இருக்கிறார்கள் என்றாலும் பல நல்ல ஜோதிடர்கள் அந்த வழியை பின்பற்றுவது கிடையாது.ஜோதிட சாஸ்திரத்திலேயே சிறந்த இரகசிய கணித முறைகள் தெரிந்திருந்தாலும் கூட அப்படிப்பட்ட பலன்களை தேங்காய் உடைத்தது போல தெளிவாக சொல்லலாம்.

நல்ல ஜோதிடர்கள் மந்திர வழிகளை நாடுவதில்லை என்று நான் சொன்னவுடன் அந்த வழியை நாடுபவர்கள் நல்ல ஜோதிடர்கள் இல்லையா? என்று யாரும் நினைக்க வேண்டாம். நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை நல்ல ஜோதிடர் என்ற வார்த்தையை மிக நன்றாக ஜோதிட நுணுக்கம் தெரிந்த, கணிக்கும் வல்லமை உடைய, என்ற பொருளிலேயே கூறுகிறேன் என்பதை நினைவில் வைக்க வேண்டும். காரணம் மந்திரமும், ஜோதிடமும் இரட்டைக்குழல் துப்பாக்கி போன்றது. மந்திரம் தெரிந்தவர்களுக்கு ஜோதிடம் தெரிந்தாலும் ஜோதிடம் தெரிந்தவர்களுக்கு மந்திர சித்தி இருந்தாலும் அது பருத்தி புடவையாக காய்த்து போல. காரணம் ஜோதிடம் என்பது விதியை அடிப்படையாக வைத்து செய்யபடுவது. இது தான் விதி என்று தெரிந்து மந்திரங்களை பயன்படுத்தினால் நிச்சயமாக மந்திரங்களின் குறி தப்பாது. 

மந்திரம் மற்றும் ஜோதிட கணக்குகள் கலக்கும் விஷயங்களை பற்றி பிறகு பேசலாம். இப்போது ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் அந்த ஜாதகத்துக்குரிய நபரை பார்க்காமலே அது ஆணா, பெண்ணா என்பதை எப்படி அறிவது? அதற்கான ஜோதிட சூத்திரங்கள் என்னவென்று சற்று எளிமையாக அறிய முற்படுவோம். ஒரு மனிதனுக்கு முகம் என்பது எப்படி முக்கியம் வாய்ந்ததோ அதே போல ஒரு ஜாதகத்திற்கு லக்கினம் என்பதும் மிக முக்கியமானதாகும். லக்கினத்தை வைத்தே மனிதனின் உடல் உடலின் அழகு அவன் பெறுகின்ற செல்வம், வயிறு, தலை, நகைகள், எண்ணங்கள், மனக்கவலை,  மகிழ்ச்சி, புலன்கள், அவனது கருணை, பண்பு, மற்றும் ஜீவனம் போன்றவற்றை தெளிவாக தெரிந்துகொள்ளலாம். இந்த லக்கினத்தை வைத்தே ஜாதகம் ஆணுக்கு சொந்தமானதா? பெண்ணுக்குறியதா? என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

இராசிகள் பனிரெண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே! அந்த இராசிகளில் சிலவற்றை ஒற்றை இராசிகள் என்றும் வேறு சிலவற்றை இரட்டை இராசிகள் என்றும் அழைப்பது வழக்கம். ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் அதன் லக்கினம் ஒற்றை இராசி லக்கினமா? இரட்டை இராசி லக்கினமா? என்பதை கணக்கு போட்டு தெரிந்து கொள்ள வேண்டும். ஒற்றை இராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு மற்றும் கும்பம் ஆகிய இராசிகளில் எதாவது ஒன்றில் சனிக்கிரகம் அமர்ந்திருந்தால் அது ஆணுக்குரிய ஜாதகம் என்றும், இரட்டை இராசிகளான ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ஆகிய இராசிகளில் எதாவது ஒன்றில் செவ்வாய் அமர்ந்திருந்தால் அது ஒரு பெண்ணினுடைய ஜாதகம் என்று மிக சுலபமாக தெரிந்து கொள்ளலாம். இது தவிர வேறு சில வழிகளும் இருக்கிறது. 

ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் ஒற்றை இராசியின் பிற்பகுதி நாழிகையும், இரட்டை இராசியில் முற்பகுதி நாழிகையும் சேர்ந்திருந்தால் அது பெண் குழந்தையாக தான் இருக்க வேண்டும். காரணம் இவை இரண்டின் அடிப்படையில் வருகின்ற ஹோரை சந்திரனுடையதாக இருக்கும். அதே போல ஒற்றை இராசியின் முற்பகுதியிலும் இரட்டை இராசியின் பிற்பகுதியிலும் சூரிய ஹோரை இருப்பதனால் அது ஆணுக்குரிய நேரம் என்று சொல்லலாம். மேலும் பெண் கிரகங்களான சந்திரன், சுக்கிரன், இராகு போன்ற கிரகங்கள் லக்கினத்தில் இருந்தாலும் அல்லது லக்கினத்தை பார்த்தாலும் அந்த குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும். சூரியன், செவ்வாய், குரு ஆகிய ஆண் கிரகங்கள் சேர்ந்தோ தனித்தனியாகவோ இரட்டை இராசியில் இருந்தாலும் கூட அது பெண் குழந்தையே ஆகும். மேலும் பெண் கிரகங்கள் சேர்ந்தோ தனித்தோ ஒற்றை இராசியில் இருந்தால் அது ஆண் குழந்தையாகும்.

இவைபோல ஆண், பெண் கிரகங்களை கவனத்தில் வைத்தும் கிரகங்களின் பலத்தை வைத்தும் இராசிகளின் அமைப்பை வைத்தும் ஜாதகத்திற்கு சொந்தகாரர் ஆணா? பெண்ணா? என்பதை முடிவு செய்துவிடலாம். ஆண் கிரகங்களின் பலம் அதிகமாக இருந்தால் ஆண் குழந்தையும் பெண்கிரகங்களின் பலம் கூடுதலாக இருந்தால் பெண் குழந்தையும் ஆண், பெண் ஆகிய இருவகை கிரகங்களும் சமமாக இருந்தால் பிறக்கும் குழந்தை ஆணாகவும் இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் இருக்கும் என்பதை மனதில் வைக்க வேண்டும். மேலும் சந்திரன், சூரியன் ஆகிய இரு கிரகங்களும் சம பலத்தோடு இருந்தாலும் புதன், சனியும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டாலும் இப்படிப்பட்ட விதிவிலக்கான குழந்தை பிறக்கும் என்பதை அறிய வேண்டும். 

ஆணாகவும் இல்லாமல், பெண்ணாகவும் இல்லாமல் குழந்தைகள் பிறப்பதற்கு உடல் மருத்துவ ரீதியிலும், மன மருத்துவ ரீதியிலும் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஜோதிடம் அதற்கான மூல காரணம் இறைவன் வகுத்த விதி என்றே அடித்து கூறுகிறது. எனவே அப்படிப்பட்ட கிரகநிலையோடு ஒரு குழந்தை பிறந்தால் அது குழந்தையின் தவறு அல்ல. பெற்றோர்களின் கர்ம பலனாலும் குழந்தையின் முன்ஜென்ம வினையாலும் உருவானதே ஆகும். மேலும் இப்படிப்பட்ட குழந்தைகளை அல்லது மனிதர்களை வெறுத்து ஒதுக்குவது கொலை செய்வதை விட பெரிய பாவமென்று வராகி மிகிரர் போன்ற சாஸ்திர மேதைகள் கூறுகிறார்கள். மேலும் இறைவனை அடைவதற்கு ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மனக்கட்டுபாடு என்பது மிகவும் அவசியம் அந்த கட்டுப்பாடு இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு மிக சுலபமாகவே கிடைக்கும். அவர்கள் விரும்பினால் இந்த பிறவியையே இறுதி பிறப்பாக தீர்மானித்து கொள்ளலாம்.

ஆட்களை பார்க்காமலே பலன் சொல்கிற ஜோதிடர்களை பற்றி ஜோதிட முறையை பற்றி பேசவந்த நான், திருநங்கைகளின் ஜாதகத்தை பற்றி பேசுவது ஏன்? என்று யாரும் நினைக்க வேண்டாம் மனிதனாக பிறந்தவன் ஆணாகவும், பெண்ணாகவும் மட்டுமல்ல அரவாணியகவும் பிறக்கிறான் என்பதற்கே அவர்களின் பிறப்பையும் அறிந்துகொள்ள ஜோதிடத்தில் வழிவகை இருக்கிறது என்பதை கூறுவதற்காகவே பேசினேன். அதையும் தெரிந்து கொள்வது தானே அறிவின் சிறப்பு. எனவே ஒரு மனிதனது ஜாதகத்தில் உள்ள லக்கினத்தை அடிப்படையாக கொண்டு மட்டுமே சில விஷயங்களை தெரிந்து கொள்ள இயலும். இனி அந்த லக்கினத்தை அடிப்படையாக கொண்டு கூறப்படுகிற வேறு சில விஷயங்களையும் சில அதிசயமான ஜோதிட பலன்களை அறிந்து கொள்ளும் முறைகளையும் வரும் பதிவுகளில் சற்று விரிவாகவே பார்ப்போம்.


Contact Form

Name

Email *

Message *