அன்புள்ள குருஜி அவர்களுக்கு வணக்கம். நான் எனது தாயாருக்கு நான்காவது மகள். ஏனோ தெரியவில்லை சிறிய வயது முதற்கொண்டே என் தாயாருக்கு என்னை பிடிப்பதில்லை. கல்யாணம் முடிந்து குழந்தை குட்டிகளுடன் நான் வாழுகிற இந்த நேரத்திலும், என் தாயின் அன்பை நான் பெற முடியவில்லை அதற்கு நான் என்ன பரிகாரம் செய்யலாம்? தயவு செய்து கூறி நான் மன ஆறுதலடைய வழி செய்யுங்கள்.
இப்படிக்கு,
சீதாதேவி,
மலேசியா.
அம்மா என்றாலே அன்பு தான். அன்பு இல்லாத அம்மாவை நினைத்து பார்ப்பதற்கே பலருக்கு முடியாது. காரணம் உருப்படாத ஊதாரித்தனமான பொறுப்பற்ற மனிதனாக வாழ்வதற்கே தகுதி இல்லாத குழந்தைகள் உண்டே தவிர கெட்ட தாய் என்பவள் உலகத்தில் கிடையாது என்பது பலரின் எண்ணம். ஆனால் விதி என்று ஒன்று இருந்தால் அதற்கு விலக்கு என்ற ஒன்றும் இருக்கும். இது நிறையபேர் கண்களில் தென்படாது அவ்வளவு தான் தாய்பாசம் என்பது மனம் சார்ந்தது மட்டுமல்ல உடல் சார்ந்ததும் ஆகும்.
முன்னூறு நாட்கள் தன் உதிரத்திலே வைத்து குழந்தையை பாதுகாக்கிறாள் அம்மா. தன் இரத்தத்தை பாலாக கொடுத்து குழந்தையின் உடம்பை உருவாக்குகிறாள் அம்மா. குழந்தையின் நோய்க்காக மனமகிழ்ச்சியோடு பட்டினி கிடக்கிறாள் அம்மா. இது அவளுக்கும் குழந்தைக்கும் உள்ள உடல் ரீதியான பிணைப்பு இதையும் தாண்டி மனரீதியான இணைப்பு நிறையவே உண்டு.
இந்த இயற்கை அமைப்பை தாண்டி தான் பெற்ற குழந்தையை ஒரு தாய் வெறுக்கிறாள் என்றால் அதற்கு மனரீதியான காரணங்கள் இருக்குமென விஞ்ஞானம் கூறுகிறது. ஆனால் மெய்ஞானம் என்பது உடல், மனது இரண்டையும் தாண்டி ஆத்மா, கர்மா போன்றவைகளையும் காரணம் என்கிறது. அதாவது சென்ற பிறவியில் தாய் அன்பை புறக்கணித்தவனுக்கு இந்த ஜென்மாவில் அம்மாவின் அன்பை பெற அருகதை இருக்காது.
இந்த அமைப்பை ஜாதகத்தை கொண்டு மிகச்சுலபமாக கண்டுபிடித்து விடலாம். யாருடைய ஜாதகம் கன்னி ராசியை லக்கினமாக கொண்டு, அதில் சுக்கிரன், செவ்வாய் போன்றவைகள் அமர்ந்து மீன ராசியில் புதனும் இருந்தால் அவர்கள் நிச்சயமாக எதாவது ஒரு வகையில் பெற்ற தாயால் புறக்கணிக்கப்படுவார்கள்.
ஆனால் ஒரு நல்ல பிள்ளையின் லட்சணம் தன்னை பெற்றவள் எவ்வளவு குற்றமுடையவளாக இருந்தாலும் அவளை போற்றி வணங்குவதே ஆகும். அதை செய்யாத போது பாவங்களில் மிகப்பெரிய பாவமான கொலைசெய்த பாவம் வந்து சேரும். எனவே அம்மாவை மட்டும் எந்த வகையிலும் வெறுக்காதீர்கள் அம்மா என்று சொல்லும் போது அதனுடன் சேர்ந்து அப்பனும் இருக்கிறான் என்பதை மறக்காதீர்கள்.
தாயார் உங்கள் மீது பாசம் வைக்க பாசிப்பயிறு, துவரை, வெள்ளை மொச்சை, பச்சரிசி ஆகியவைகளில் தலைக்கு இருபத்தியேழு எடுத்து வாழை இலையில் வைத்து மகாலஷ்மி படத்தருகில் வைத்து வழிபாடு செய்யுங்கள் தினசரி இலையை மட்டும் மாற்ற வேண்டும் இப்படி ஆறுமாதம் தொடர்ந்து செய்தால் உருகாத தாய் மனமும் உருகுமேன்று சாஸ்திரம் சொல்கிறது செய்து பாருங்கள் பலன் நிச்சயம் உண்டு.