எனக்கு அடிக்கடி வியாதிகள் வருகிறது. இதனால் எந்த வேலைகளையும் திறம்பட செய்ய முடியவில்லை. பொருளாதார கஷ்டங்கள் வேறு வாட்டி எடுக்கிறது. உடம்பு நன்றாக இருந்தால் தானே தொழில் செய்ய முடியும். எனவே என் உடல் நலம் தேறுவதற்கு எளிய பரிகாரங்கள் இருந்தால் சொல்லுங்கள் நன்றியுடையவனாக இருப்பேன்.
இப்படிக்கு,
தனஞ்செழியன்,
சென்னை.
சோறு தண்ணீர் இல்லை என்றால் கூட யாரிடமாவது யாசகம் எடுத்தாவது சமாளித்து கொள்ளலாம். ஆரோக்கியம் இல்லை என்றால் யாரிடம் போய் யாசகம் கேட்பது? உடம்பை விட்டு விட்டு ஓடி போவதற்கு உடம்பு என்ன அந்நிய பொருளா? உயிரோடு வாழுகிற வரை இந்த உடம்பு கூட்டிற்குள் அடைபட்டு தான் கிடந்தாக வேண்டும். உடம்புக்கு வருகிற வலிகளை அனுபவித்தாகவும் வேண்டும்.
உங்கள் ஜாதகத்தில் ஆறாமிடத்தில் தேய்பிறை சந்திரன் இருக்கிறான். இப்படி இருந்தால் அந்த ஜாதகருக்கு சீதள சம்மந்தமான நோய்களும், மூச்சு பிரச்சனைகளும் இருக்கும். அவற்றிலிருந்து விடுபட சந்திரனை வலுவடைய செய்யும் சில மூலிகைகளை பயன்படுத்த வேண்டும். திங்கள் கிழமை தோறும் பெருமாளை அதிகாலை நேரத்தில் சேவிக்க வேண்டும்.
இதுவுமல்லாமல் தினசரி காலையில் உத்தரணியில் தண்ணீர் எடுத்து அதில் வலது கை ஆள்காட்டி விரலை வைத்து பிரம்ம காயத்திரியை நூற்றி எட்டுமுறை ஜெபித்து அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வரவேண்டும் இப்படி தொடர்ந்து செய்தால் தொடர் நோய்கள் கண்டிப்பாக விலகி ஓடும் மாற்றமில்லை.