தீ மிதித்தல், அலகு குத்துதல் போன்றவற்றிற்கு கடவுளின் அருள் தேவையில்லை மன பக்குவம், பழக்கம் இருந்தாலே போதும் என்கிறார்களே? அது உண்மையா?
இப்படிக்கு,
முத்தையாதேவர்,
ராமநாதபுரம்.
பக்தி உள்ளவன் செய்கிற செயல்கள் அனைத்துமே மூட நம்பிக்கை என்பது பகுத்தறிவு வாதிகளின் வாதமாகும். மூட நம்பிக்கை என்று சொல்லி கொண்டே பக்தர்கள் செய்கின்ற அனைத்தையும் இவர்களும் செய்து கொண்டு வருகிறார்கள் என்பது தான் வேதனையான உண்மை.
கட்டிடம் கட்டுவதற்கும், வீட்டு வாசலாக போடுவதற்கும், அம்மி கல்லாக பயன்படுத்துவதற்கு மட்டுமே உபயோகப்படுகிற கல்லை, சுவாமி சிலையாக செய்து அபிஷேக ஆராதனைகள் புரிந்து, பூமாலை பழங்கள் சாற்றி, கடவுளாக வழிபடுவதை பகுத்தறிவுவாதி எதிர்க்கிறான். கல்லுக்கு அறிவு இருக்கிறதா? உனது வேண்டுதலை நிறைவேற்றுகிற சக்தி இருக்கிறதா? மூடத்தனமாக கால நேரத்தை வீணடிக்கிறாயே என்று பக்தனை கேலியும் செய்கிறான்.
ஆனால் இப்படி செய்யும் பகுத்தறிவுவாதியே தனது தலைவனுக்கு கல்லால் சிலை செய்து அதற்கு மாலை அணிவித்து மகிழ்ச்சி அடைகிறான். யாராவது தப்பி தவறி அந்த சிலையை அவமானபடுத்தி விட்டால் தனது தலைவனையே அவமானப்படுத்தியதாக கருதி, வீதியில் இறங்கி பொது அமைதிக்கு குந்தகம் செய்கிறான். நாமும் நம் நாட்டில் உள்ள பல ஊடகங்களும் மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற கதையில் வாய்மூடி மெளனியாக போய்விடுகிறோம்.
பக்தன் கடவுளை நம்பி நெருப்பு மிதிக்கிறான். அவனுக்கு சுடுவதில்லை. பகுத்தறிவு வாதி தன் மனதை நம்பி தீ மிதிக்கிறான். அவனுக்கும் சுடுவதில்லை. இதில் இரண்டு பேருமே கண்ணுக்கு தெரியாத பொருளைத்தான் நம்பி செயல் படுகிறார்களே தவிர வேறொன்றையும் புதியதாக காண முடியவில்லை கடவுள் எப்படி கண்ணுக்கு தெரியாமல் இருக்கிறாரோ அதே போலத்தான் நமது மனதும் கண்ணுக்கு தெரியாமல் எங்கோ ஒரு மூலையில் இயங்கி கொண்டிருக்கிறது. இரண்டு பேருமே பார்க்க முடியாத பொருளை நம்பித்தான் செயல்படுகிறார்கள் மூட நம்பிக்கை என்றால் இரண்டுமே மூட நம்பிக்கையே தவிர ஒன்றை மட்டும் குறை சொல்ல முடியாது.