என் நிலத்தில், மண்ணும் நன்றாக இருக்கிறது. தண்ணீரும் நன்றாக இருக்கிறது. நானும் எனது குடும்பமும் முழுக்க முழுக்க நிலத்திலேயே பாடு படுகிறோம். யாருக்குமே வேலைக்கு ஆள் கிடைக்காத இந்த காலத்திலும் யாரையும் எதிர்பார்க்காமல் எல்லா வேலைகளையும் நாங்களே செய்கிறோம். இருந்தாலும் வருட முடிவில் கணக்கு பார்த்தால் எதுவும் மீதமாட்டேன் என்கிறது. செலவுகள் வந்து பணம் கரைந்து போனால் கூட பரவாயில்லை. இப்படித்தான் செலவானது என்று சமாதானம் படுத்தி கொள்ளலாம் ஆனால் ஒவ்வொரு முறையும் பயிர் விளைந்து வருகிற போது எதாவது ஒரு இடர்பாடு வந்து பயிரின் அளவை குறைத்து விடுகிறது. பத்து வருடமாக இது தான் நிலை இந்த நிலை மாறி விவசாயம் நல்லபடியாக நடக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்? குருஜி அவர்கள் தயவு செய்து விளக்கம் தருமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
இப்படிக்கு
செங்கோட்டையன்
பொள்ளாச்சி
கோவையிலிருந்து, மதுரை போக வேண்டுமென்றால் அதற்கென்று பேருந்தோ, காரோ, ரயிலோ கண்டிப்பாக தேவை. அதில் ஏறினால் மட்டும் தான் மதுரைக்கு போய் சேர முடியும். வானொலியில் டெல்லி நிலையத்து நிகழ்ச்சியை கேட்க வேண்டும் என்றாலும் திருவனந்தபுரத்து நிகழ்ச்சியை கேட்கவேண்டுமனாலும் வானொலி பெட்டியின் முள்ளை அலைவரிசைக்கு ஏற்றவாறு திருப்ப வேண்டும். அப்போது தான் அந்தந்த நிகழ்ச்சியை கேட்க இயலும்
இயற்கையிலும் இந்த விதியிலான விஷயங்கள் பல உண்டு. மழை வரவேண்டுமானால் அதற்கொரு விசையும், புயல், காற்று குறையவேண்டுமானால் அதற்கொரு விசையும் இயற்கை வகுத்து வைத்திருக்கிறது. அந்த விசையை சக்தி என்று விஞ்ஞானம் அழைத்தால் அதன் பெயர் தேவதை என்று வைதீக தர்மம் சொல்கிறது. அந்தந்த விஷயங்களுக்குறிய தேவதைகளை வணங்கும் போது அந்தந்த பலன் கிடைக்குமென்று கீதையும் நமக்கு சாட்சி சொல்கிறது.
ஆன்மீக விஞ்ஞானத்தின் படி, மழைக்கான கடவுள் இந்திரன் என்றாலும் பலராமரே விவசாய கடவுள் என்று நமது இதிகாச புராணங்கள் தெளிவாக சொல்கின்றன. எனவே விவசாய தொழில் நல்ல முறையில் லாபமாக நடைபெற வேண்டுமானால் பலராமரை வழிபட வேண்டும். அவருக்கான வழிபாட்டு முறையை கோவில்களிலும், வீடுகளிலும் தவறாமல் செய்து வந்தால் கண்டிப்பாக விவசாயத்தில் பெரிய அளவில் நஷ்டம் வராது. எனவே உங்கள் தோட்டத்தில் ஈசானிய மூலையில் சாமியை ஆவாஹனம் செய்து முடிந்தவரையில் தினசரி பூஜை செய்து வழிபடுங்கள் வேளாண்மை கண்டிப்பாக வெற்றி தரும்.