ஐயா என் மனைவி எல்லாவற்றிற்கும் சண்டை பிடிக்கிறாள். சத்தம் போட்டு ஊரை கூட்டுகிறாள். இதனால் குடும்ப மானம் போய்விட்டது. இப்படியே போனால் குழந்தைகளும் கெட்டுபோய்விடுவார்கள். என் மனைவி சாந்தமாக இருக்க எதாவது வழி முறைகள் இருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள் உங்களுக்கு நன்றியுடையவனாக இருப்பேன்.
இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத
உஜிலாதேவி வாசகன்,
சென்னை.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். ஒருவனுக்கு தாயும், தாரமும் நன்றாக அமைந்து விட்டால், அதுவே அவன் பெற்ற மிகப் பெரிய செல்வம். ஆனால் இது பலபேருக்கு கிடைப்பதில்லை ஒன்றிருந்தால் இன்னொன்று அமைவதில்லை. அது தான் இறைவனின் திருவிளையாடல்.
விதி என்ற கோட்டைக்குள் நம்மை ஆயுள் கால கைதியாக கடவுள் வைக்கவில்லை நிம்மதி பெருமூச்சு விடுவதற்கு சில வழிவகைகளையும் வைத்திருக்கிறார். ஆனால் அவரே கூட சாஸ்திரங்களில் அடங்காத மனைவியை அடக்குவதற்கான சரியான மார்க்கத்தை கூறவில்லை. அவரே கூறாத போது அதன் தன்மை எத்தகைய கொடுமை என்பது நமக்கு தெரியும்
வீட்டிற்கு வந்த மகராசி அன்பானவளாக, அமைதியானவளாக இருக்க வேண்டும். அப்போது தான் அந்த குடும்பம் மகிழ்ச்சியானதாக திகழும். யாரும் விரும்பி அடங்காப்பிடாரியை மனைவியாக ஏற்பது இல்லை. விதி அப்படி அமைத்து விடுகிறது எனவே இதிலிருந்து வெளிவருவதற்கு இறைவழிபாடு ஒன்றை தவிர வேறு மார்க்கம் கிடையாது.
மனிதனது மூர்க்க குணத்தை ஆட்சி செய்கிற, அன்னை காளியை வேண்டி, விரும்பி வணங்கி முறைப்படி இரண்டு மண்டல ஜெபம், தியான பூஜை செய்தால் கண்டிப்பாக சம்மந்தப்பட்ட நபர்களின் பொறுப்பற்ற மனைவி நல்ல நிலையில் திரும்பி வந்து குடும்பத்தை குறைவின்றி நடத்துவாள் காளியின் அருளை பெற முயற்சியுங்கள் நல்லது நடக்கும்.