என் மகளுக்கு திருமணம் நடத்த பல பரிகாரங்களை செய்து விட்டேன் ஒன்றும் பயனில்லை கடைசியாக உங்களிடம் பரிகாரம் சொல்லும்படி வேண்டுகிறேன் நீங்கள் சொல்லும் பரிகாரத்தை செய்த பிறகு வேறு எந்த பரிகாரமும் செய்ய போவதில்லை கடவுள் விட்ட வழியில் நடக்கட்டும் என்று அமைதியாக இருந்து விட போகிறேன்.
இப்படிக்கு,
மீனாட்சி,
திண்டிவனம்.
நீங்கள் விட்டாலும் விடாவிட்டாலும் நடப்பது எல்லாமே கடவுளின் விருப்பப்படிதான் நடக்கிறது. இது தெரியாமல் என்னால் நடக்கிறது, எனக்காக நடக்கிறது என்று வீணாக கற்பனை செய்து நல்ல பொழுதை அழுது கொண்டே கழிக்கிறோம்.
பரிகாரங்கள் செய்வது ஒன்றும் பெரிதல்ல ஊரார் தன்னை மெச்ச வேண்டும் பெரிய மனிதன் என்று பாராட்ட வேண்டும் என்பதற்காக தான தர்மங்கள் செய்வது எந்த அளவு தவறோ அந்த அளவு மனம் ஈடுபாடு இல்லாமல் கடமையே என்று பரிகாரங்கள் செய்வதும் தவறு ஆகும்.
பரிகாரங்கள் என்றாலே வலதுகால் வலியை இடதுகால் வாங்கி கொள்வதாகும் முதுகில் புண் வந்தால் தொடையில் நேரிகட்டிக் கொள்வதில்லையா அதை போன்றது தான் பரிகாரம் என்பதும். ஆழ்ந்து அனுபவித்து ஒருமனதோடு மிக முக்கியமாக நம்பிக்கையோடு பரிகாரங்களை செய்யவில்லை என்றால் எந்த பயனும் கிடையாது.
இப்போது அகத்தியர் என்ற பெரிய சித்தபுருஷர் சொன்ன ஒரு சிறிய பரிகாரத்தை சொல்கிறேன். உத்திர நட்சத்திரம் வருகிற நாளில் நெய் தீபம் ஏற்றி வேப்ப மரத்திற்கு அடியில் உள்ள விநாயகரை குறிப்பிட்ட பெண் மனம் உருக வணங்கினால் மிக விரைவில் மாங்கல்யம் கிடைக்கும் என்று சொல்கிறார். இது ஒன்றும் பெரிய கஷ்டமில்லையே ஒரு ஐந்து மாதங்கள் செய்யுங்கள் கண்டிப்பாக பலன் உண்டு இறைவன் அனைத்தையும் நல்லதாகவே நடத்தி வைப்பார்.