பூஜை செய்வதற்கு எவர்சில்வர் பாத்திரங்களை பயன்படுத்தலாமா?
இப்படிக்கு,
ராஜலக்ஷ்மி,
கனடா.
நமது வேதங்கள் மனிதர்களின் குணங்களை சத்வசம்,ராஜசம்,தாமசம் என்று மூன்றாக பிரிக்கிறது. சத்வசம் என்றால் அமைதி, சாந்தம், கல்வி, மேன்மை என்றும் பொருள். ராஜசம் என்றால் போராட்டம், வீரம், ஆளுகை என்றும் பொருள். தாமசம் என்றால் அடிபணிதல், இயக்கமின்மை, பின்வாங்குதல் என்பதும் பொருளாகும்.
மனிதனின் குணங்களை மட்டும் இப்படி மூன்று விதமாக நமது பெரியவர்கள் பிரிக்கவில்லை. உலகத்தில் இருக்கிற கண்ணில் படுகிற அனைத்து பொருள்களையுமே இந்த மூன்று பெயரில் பிரிக்கிறார்கள்.
இதன் அடிப்படையில் செப்பு என்ற உலோகத்தை சத்வ உலோகம் என்றும், தங்கம் மட்டும் வெள்ளி உலோகங்களை ராஜச உலோகங்கள் என்றும், இரும்பை தாமச உலோகம் என்றும் கூறுகிறார்கள். ஆக உலோகங்களில் மிகவும் உயர்ந்தது செப்பு என்பது தெளிவாகிறது.
மற்ற உலோகங்களுக்கு இல்லாத சிறப்பு செப்புக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருப்பது ஏன் என்றால் செப்பு தன்னை சுற்றி இருக்கும் பிரபஞ்ச ஆற்றல் அனைத்தையும் தனக்குள் ஈர்க்கவும் வல்லது வெளியிடவும் வல்லது. இதனால் தான் நமது முன்னோர்கள் சமைக்க, அருந்த, பூஜிக்க என்று அனைத்து தேவைகளுக்கும் செப்பு பாத்திரங்களை பயன்படுத்தினார்கள்.
செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அதில் பல மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கிறது. அதே பாத்திரத்தை பூஜைக்கும் பயன்படுத்தும் போது கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் இறை சக்தியை தன்பால் ஈர்த்து நமக்கு தரவல்லது செப்பு உலோகம். எனவே பூஜை என்று வரும் போது செப்பு பாத்திரங்களை பயன்படுத்துவது மட்டுமே சிறந்தது. மற்றவற்றை குறிப்பாக இரும்பும் சார்ந்த எவர்சில்வர் பாத்திரத்தை பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் உயர்ந்தது.