குருஜி அவர்களுக்கு வணக்கம். நானும், என் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்பாகவே இருக்கிறோம். ஆனால் என்ன சூழ்நிலையோ தெரியவில்லை எங்கள் அன்பை வெளிப்படுத்தி கொள்ள இதுவரை முடியவே இல்லை. திருமணம் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகிறது. தினசரி ஏதாவது ஒரு காரணத்திற்காக சண்டை போடுவதும், பிரச்சினைகளை எதிர்கொள்வதுமே நேரம் சரியாக இருக்கிறது எங்கள் இருவர் மத்தியில் இணக்கமான சூழ்நிலை எப்போது ஏற்படும்? அல்லது இதுதான் தலையெழுத்தா?
இப்படிக்கு,
கல்யாணகுமார்,
அமெரிக்கா.
பணம் வேண்டும், சொத்து, சுகங்கள் வேண்டும் என்று ஓடிக்கொண்டே இருப்பவனுக்கு ஒருபோதும் வாழ்க்கையில் நிம்மதியும், அமைதியும் ஏற்படாது. கிடைக்கின்ற நிழலில் ஓய்வெடுத்துக்கொண்டு பிறகு ஓடலாம் என்ற நிதான புத்தியும் வராது. சற்று அசட்டையாக இருந்தால் எல்லாமே கை நழுவி போய்விடுமோ என்ற அச்சத்தில் ரசிக்க வேண்டியதை ரசிக்க தோன்றாது, அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க விடாது.
இறைவன் கொடுத்த சாபமோ, வரமோ எனக்கு தெரியவில்லை. கணவன் - மனைவி இருவரின் ஜாதகமே உங்களுக்கு திருப்தியே ஏற்படாத மனநிலைதான் இருக்குமென்று சொல்கிறது. கோடி பெற்றாலும் திருப்தி இல்லை என்றால் அவன் எப்போதுமே வறியவன் தான் இதை மனதில் வையுங்கள். பணமும், சொத்துக்களும் நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் நன்மை செய்வதற்கே தவிர பதுக்கி வைப்பதற்கு அல்ல.
உங்களை பற்றி, உங்களது குணத்தை பற்றி, நீங்கள் வைத்திருக்கும் போலியான கற்பனையை தூக்கி எறிந்துவிட்டு சிவனும், சக்தியும் ஒன்றாக அர்த்தநாரீஸ்வரராக இருக்கும் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யுங்கள். கணவன் - மனைவி இருவர் மனதிலும் நல்ல மாற்றம் வரும். ஓரளவாவது நிம்மதி கிடைக்கும்.