குருஜிக்கு வணக்கம். நான் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறேன் ஆனாலும் செடி,கொடிகள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவள். என் வீட்டின் துளசிச்செடியை மண்தொட்டியில் வைத்து வளர்க்கிறேன். துளசியை இப்படி வளர்க்க கூடாது தோட்டத்தில் அல்லது மாடத்தில் வைத்து வளர்க்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். நான் அறியாமல் செய்யும் தவறு துளசியின் புனிதத்தை கெடுப்பதாக அமைந்துவிட கூடாது எனவே தாங்கள் சரியான வழிகாட்டுமாறு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
மோகனா வைத்தியநாதன்,
மும்பை.
துளசியும், பகவான் கிருஷ்ணனும் வேறல்ல. துளசிச்செடி ஒன்று நம் வீட்டில் இருக்கிறது என்றால் சாட்ஷாத் அங்கே கிருஷ்ணன் இருக்கிறான் என்று அர்த்தம். கிருஷ்ணன் இறைவனாக இருக்கலாம், ஆனாலும் அவன் நமக்கு எஜமானன் அல்ல மிக நல்ல தோழன்.
தோழன் என்று வரும்போது தூய்மையான நட்பும், அன்பும் தான் முக்கியமே தவிர மரியாதை முக்கியம் அல்ல. அவன் நம்மிடமிருந்து அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறான். அது மட்டுமே அவன் நம்மிடம் விரும்புவதும் கூட.
ஆயிரம் தான் பிரதமமந்திரி மகனோடு நமக்கு நட்பு இருக்கிறது என்றாலும், அவன் நமக்கு தோழன் என்றாலும், அவனுக்கு கொடுக்கவேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டியது நமது கடமை அல்லவா. அதே போலதான் துளசி செடியையும் மரியாதையோடு பக்தியோடு பராமரிக்க வேண்டும்.
மேல்மாடி வீடுகளில் இருப்பவர்கள் துளசிச்செடியை மண் தொட்டிகளில் வளர்க்கலாம, முறைப்படி பூஜையும் செய்யலாம் அதில் தவறில்லை. ஆனால் கீழ்தளத்தில் வாழ்பவர்கள் கட்டாயம் துளசியை நடுமுற்றம், வாசல் அல்லது கொல்லைப்புறம் போன்ற பகுதிகளிலேயே வைக்க வேண்டும் கண்டிப்பாக தொட்டியில் வைக்க கூடாது.