அண்டபகிரண்டமெல்லாம் சுற்றித்திரண்டு வந்தாலும் உள்ளங்கையில் வைத்து பொடி பொடியாக்கும் ராஜவீர சூரப்புலி நீங்கள். முயலுக்கும் மானுக்கும் இடம் கொடுப்பதா? கொடுவாய் புலியும், கருந்தேள் கரடியும், சிலிர்த்து நிற்கும் சிங்கங்களும் அலங்கரிக்கும் உங்களது ராஜதர்பாரில் சுண்டெலிகளும், கருவாட்டு வால் குருவிகளும் வந்து நிற்பதா? சமமாக அமர்வதா? முடியாது ஒருபோதும் முடியாது. அந்த கொடுமையை கண்ணால் காண அனுமதிக்கவே முடியாது.
சொக்காட்டான் கட்டத்தில் சீட்டாடும் மேதாவிகளும், கூட்டத்தில் கூடிநின்று கூவி பிதற்றுபவர்களும் நமக்கெதற்கு? வாய்ப்போர் புரிவதற்கா ஆளில்லை நம்மிடம் வாட்போர் செய்வதற்கு சிங்க கூட்டமே இங்குண்டு. நீங்கள் சிறு நரிகளே துரத்தி அடியுங்கள். புதர்களுக்குள் அவை ஓடி ஒழியட்டும்.
மன்னா இவர்கள் சொல்வதெல்லாம் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. ஆனால் ஒரு சாதாரண பாளையக்காரரான உங்களை மாபெரும் சாம்ராஜ்யத்திற்கே சக்ரவர்த்தி ஆக்க போவதாக கூறியவர்கள் அவர்கள். அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள் சிவப்பாக இருக்கலாம். ஆனால் அவர்கள் அபாயமற்றவர்கள் என்றே எனக்கு தோன்றுகிறது.
பட்டத்து ராணி எப்போதுமே ஈரை பேனாக்கி பேனை பெருமாளாக்கி பார்ப்பவர். இந்த செவ்வாடை ஜென்மங்களா உங்களை சக்கரவர்த்தியாக்கும்? முதலில் இவர்களுக்கே உண்ண உணவும், உடுக்க ஆடையும் இல்லை. இவர்களா ஊராரை ஆடை அணிகலன்களோடு அலங்கரிக்க செய்வார்கள்? வாய்ஜாலக்காரர்கள், வார்த்தை வியாபாரிகள்.
அதுமட்டுமல்ல மன்னா, கொள்கை சித்தாந்தம் என்று ஏதேதோ பேசுவார்கள் மேல்வர்க்கம், கீழ்வர்க்கம் என்று பொருள்முதல்வாத அணிவகுப்பு நடத்துவார்கள் அத்தனையும் சிறிதுநேரம் தான். இவர்களை நீங்கள் கண்காணிக்க வில்லையா? அறிஞர்கள் சபையில் இரண்டே இரண்டு நாற்காலி பெறுவதற்கு உங்கள் அந்தப்புர வாசலில் தவம் கிடந்தவர்கள் இவர்களா உங்களை மாமன்னராக்குவது? மண் கட்டிகளாக மாற்றிவிடுவார்கள்
தெற்கே ஆர்ப்பரிக்கும் கடல்முதல், வடக்கே ஆகாயத்தையே மறைக்கும் இமயம் வரையில் உங்கள் ஜெயக்கொடி நாட்டுவதற்கு இங்கே இருக்கும் நாற்பது பாளையங்களும் நமக்கே சொந்தமாக வேண்டும். உங்கள் தயவில் நடமாடும் அந்த புல்தடுக்கி வீரர்கள் உங்களுக்காக, உங்களது கருணைக்காக மாட்சியமை பொருந்திய உங்களின் கட்டளைக்காக அனைத்தையும் விட்டுக்கொடுக்கல்லவா வேண்டும்? அதை விட்டு விட்டு பத்தை கொடு, ஐந்தை கொடு என்று பேரம் பேசுகிறார்கள் என்றால் நமது உடைவாள் உறையினுள் உறங்கலாமா? அவர்கள் தான் உதிரத்தோடு வாழலாமா?
மன்னா, மன்னா இந்த கோமாளிகளின் ஏமாளித்தனத்தை நம்பாதீர்கள். சிகப்பு சட்டைகள் பலமற்ற பந்தாட்டக்கூட்டம் என்றாலும் பல்லிலே விஷம் உடையவர்கள். அவர்களை எப்போதும் வெளியில் விடக்கூடாது. நம்முடனே வைத்துக்கொள்ள வேண்டும். நாற்பது பாளையத்தில் ஒன்றிரண்டை அவர்களுக்கு கொடுக்கவில்லை என்றால் நம்பவைத்து கழுத்தை அறுத்த கொடூரன் என்று உங்களைப்பற்றி நாடு முழுவதும் பேசுவார்கள். அதற்கு இடம் கொடுக்காதீர்கள்.
வாயை மூடுங்கள். இங்கு அரசனாகிய நான் மட்டும் தான் பேச வேண்டும். என் தயவில் வாழும் யாரும் வாய்திறக்க கூடாது. சீறும் நாகத்தின் முன்னே தவளைகள் கச்சேரி செய்வதை அனுமதிக்க முடியாது. எந்த நேரத்தில் யாரை என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு தெரியும். என்னோடு வருபவர்கள் நான் நிற்க சொன்னால் நிற்க வேண்டும். குனிய சொன்னால் குனிய வேண்டும். சாகச்சொன்னால் சாகத்தான் வேண்டும். இவர்கள் தகுதிக்கு இரண்டு நாட்களிகள் கொடுத்தேன் அது போதாதா? பாளையம் வேண்டுமாம் பாளையம் பகல் கனவு காண்பதற்கு கூட ஒரு தகுதி வேண்டும்.