குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். எனக்கு நாற்பது வயதாகிறது இதுவரை தப்புதண்டா என்று பெரியதாக எதுவும் செய்ததே கிடையாது. ஆனால் நான் பிறந்த ஊரிலும், இப்போது வாழுகிற ஊரிலும், அலுவலகத்திலும் எந்தவகையிலாவது பிரச்சனை ஏற்பட்டு என்பெயர் கெட்டுவிடுகிறது. சம்மந்தமே இல்லாதவர்கள் கூட அவனா? அவன் மிகவும் மோசக்காரன் பெண்பொறுக்கி என்று ஏகமாக பேசுகிறார்கள் சாதாரணமாக ஒருபெண்ணிடம் பேசினால் அதில் விவகாரமாகி விடுகிறது. பல இடங்களில் பெண்களால் அவமானம் ஏற்படுகிறது. இத்தனைக்கும் கடவுள் மீது ஆணையாக நான் எந்த தவறும் செய்ய நினைத்தது இல்லை. செய்யும் அளவிற்கு துணிச்சலும் என்னிடம் கிடையாது. இது என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையாகவே தொடர்கிறது. இதை நீக்கி நல்லபடியாக வாழ ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள். இல்லையென்றாலும் சொல்லிவிடுங்கள் என் விதி அவ்வளவு தான் என்று நானே ஒரு முடிவை தேடிக்கொள்கிறேன் வாழ்ந்தால் மானத்தோடு வாழ வேண்டும் இல்லை என்றால் வாழ்வதில் அர்த்தமில்லை.
இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத வாசகர்,
கன்னியாகுமரி.
பொதுவாக வாசகர்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் வெகு சீக்கிரத்தில் என்னால் பதில் சொல்ல இயலாது. சொல்லக் கூடாது என்பது எண்ணம் இல்லை சொல்வதற்கு நேரம் இல்லை என்பதே உண்மை. ஆனால் இந்த வாசகருக்கு மட்டும் கேள்வி வந்த ஒருமணி நேரத்திலேயே பதில் எழுதுகிறேன். அதற்கு காரணம் இருக்கிறது இவரது மனது இப்போது இறைவன் கொடுத்த மிக அருமையான பூந்தோட்டமான வாழ்க்கையை விட்டு விட்டு சிறகடித்து பறக்கலாம் என்று அதாவது வாழ்வை முடித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறது.
தற்கொலை செய்வது கோழைத்தனம் வாழ்க்கையோடு போராட முடியாத பேடிகள் எடுக்கும் கடைசி புகலிடம் என்று பலர் கூறுவார்கள் அந்த கருத்தோடு எனக்கு எந்த பகைமையும் இல்லை என்றாலும், ஒருமனிதன் தான் மிகவும் நேசிக்கும் தனது உயிரையே மாய்த்து கொள்ள துணிகிறான் என்றால் அவனை அந்த சூழல் எந்தளவு தாக்கி இருக்கும் என்பதையும் உணர்ந்து கரிசனத்தோடு அவனை அணுகவேண்டும் என்பதே எனது முழுமையான எண்ணமாகும்.
பெயரை வெளியிட விரும்பாத வாசகரே நீங்கள் பலரும் உங்களை தூற்றுகிறார்கள் என்பதற்காக தற்கொலை செய்துகொள்ள துணிந்து விட்டீரே இதற்காக நீங்கள் உயிரை விட்டுவிட்டால் அவர்கள் கூறியது அனைத்துமே உண்மை என்று எல்லோரும் நம்புவார்களே அந்த தவாறன நம்பிக்கையை மரித்த பிறகு உங்களால் போக்க முடியுமா? எனவே மற்றவர்களால் ஏற்படும் இடர்பாடுகளை உயிரோடு இருந்து சமாளித்து போராடி மீண்டுவர பாடுபட வேண்டும் அந்த போராட்டத்தில் நாம் இறந்து போனால் கூட உலகம் நம்மை மோசக்காரன் என்று தூற்றாது நல்லவன் என்று ஒப்புக்கொண்டு போற்றும். எனவே பிரச்சனைகளை முடிக்க மரணம் தீர்வல்ல வாழ்ந்து கொண்டே போராடுவதே நல்ல வழி என்பதை உணர்ந்து கொள்ளவும்.
ஜாதகத்தில் சுக்கிரன் அல்லது செவ்வாய் ஆகிய இரு கிரகங்களில் ஏதாவது ஒன்று பகைபெற்றோ நீசம் அடைந்தோ இருந்தால் அவனுக்கு பெண்ணால் அவமானம் ஏற்படும் தொழில் பாதிப்பு வரும் தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க வேண்டிய நிலைமை வருமென்று சொல்லபட்டிருக்கிறது உங்கள் ஜாதகத்தில் சுக்கிரனின் தன்மை மிகவும் பலகீனமாக இருக்கிறது. எனவே பெண்களால் உங்களுக்கு தொடர்ச்சியான அவமானம் என்பது இருந்துகொண்டே இருக்கும் அது பொதுவான தலைவிதி. ஆனாலும் சாரல் மழையில் தலைமட்டும் நனைந்து போகாமல் இருக்க சிறு குடை பிடிப்பது போல பரிகாரங்கள் சிலவற்றை செய்து குறிப்பிட்ட காரியங்களில் வெற்றிபெற்று விடலாம்.
இப்போது இந்த சிக்கலிலிருந்து நீங்கள் வெளிபட்டுவந்து நல்ல முறையில் வாழ்வதற்கு உங்களது ஊரில் இருக்கும் சப்த கன்னிமார் ஆலயத்திற்கு சென்று இருபத்தி ஏழு நாட்கள் தொடர்ச்சியாக தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள் பெண்களால் நீங்கள் அடையும் அவமானமும் தேவையில்லாத பிரச்சனைகளும் உடனடியாக விலகும் நிரந்தரமாக இப்படிப்பட்ட பிரச்சனைகளே வரக்கூடாது என்றால் குரு மூலமாக உபதேசம் பெற்று சடாட்சர மந்திரத்தை ஜெபித்து வாருங்கள் கைமேல் பலன் உடனடியாக கிட்டும்.